ஆனந்தா வித்யாலயாவின் 23 ஆம் ஆண்டு விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின் 23 ஆம் ஆண்டு விழா குதூகலத்தோடும் கோலாகலத்தோடும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மேகநாத ரெட்டி அவர்களும், கௌரவ விருந்தினராக திருச்சி மாநகராட்சி ஓய்வு பெற்ற கமிஷனர் திருமதி பிரேமா அவர்களும் கலந்து கொண்டனர். பள்ளி நிறுவனர் திரு பீமராஜா ஐயா அவர்களுக்கு மலர் அஞ்சலி செய்து தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைக்க, தலைமை ஆசிரியர் திருமதி ஜெயபவானி அவர்கள் கௌரவ விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விருந்தினர்களுக்கு பள்ளித் தாளாளர் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியரும், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டறிக்கையை முதல்வரும் சமர்ப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர் தமது உரையில், "தனக்கும் ஆண்டு விழாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது, அந்த மேடையில் தான் வாங்கிய கைத் தட்டல்களே ஒரு கலெக்டராக வருவதற்கு உந்து சக்தியாக விளங்கியது" என்று கூறினார். மாணவர்களிடம் ஏதோ ஒரு தனித் திறமை இருக்கிறது. அதை கடின உழைப்பின் மூலம் அதை வெளிக் கொணர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். அவையில் உள்ளோர்க்கு மூன்று கேள்விகளை முன் வைத்த விதம் - மிக வித்தியாசமாக இருந்தது. எத்தனை பேர் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் ?எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள் ?எத்தனை பேர் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள் ?என்ற கேள்விகள் அனைவரையும் அதிகமாய் சிந்திக்க வைத்தது. மேலும் தன்னுடைய பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது எனவும் வெற்றிக்கான வழிமுறைகள் அவர்களுடைய அணுகு முறையில் தான் உள்ளது என்பதையும் மிக அழகாக எடுத்துரைத்தார்.
கௌரவ விருந்தினர் தமது உரையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்தியும் ஊக்கப்படுத்தியும் வளர்க்க வேண்டும் என்றும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் கூறினார்.
தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியரையும் தான் படித்த கல்லூரியையும் நினைவு கூர்ந்தார். ஆசிரியர்கள் பல்வேறு நீதிக் கதைகளையும் அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.
கல்வியின் சிறப்பை தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற குறளின் மூலமும்
ஒரு மன்னருக்கு அவருடைய அரண்மனையில் மட்டுமே சிறப்பு கிடைக்கும் .ஆனால் கற்றவருக்கோ தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என கல்வியின் பெருமையையும் சுவைபடக் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் படிப்பிலும், சகல துறைகளிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனர். ஆசிரியை நாகுபொற்செல்வி நன்றி உரை கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் பரத நாட்டியம், குழு நடனம், நாடகம், சேர்ந்திசைப்பாடல், சிலம்பம், உரை வீச்சு, மௌன நாடகம், போன்ற பன்முகத் தன்மையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை அற்புதமாக வெளிக் கொணர்ந்து, அவற்றை திறம்பட தொகுத்துத் தந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் திரு.வெங்கட பெருமாள் செய்திருந்தார்.
0
Leave a Reply