உள் வாங்குங்கள்
ஒரு இடத்திற்குப் போகிறோம். பேசாமல் போய் விட்டு, வருவதை விட அங்கே என்ன நடக்கிறது. மனிதர்களின் செயல்கள் என்னென்ன ? என்று நுட்பமாகக் கவனிப்பவர்கள், வெகு சிலரே. சில பேரெல்லாம் தன் பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள் என்பதை கூட கவனிக்காமல் வருபவர்களும் உண்டு.ஒவ்வொரு செயல்களையும், விஷயங்களையும் யார் நன்கு ஆராய்ந்து உள் வாங்கிக் கொள்கிறார்களோ ,அவர்கள் மட்டுமே சாதாரணமானவர்களை விட ஒரு படி மேலேயே இருக்கிறார்கள்.
ஒரு வீட்டிற்குச் செல்கிறோம். அந்த வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே ஆராய்பவர்கள் உண்டு. கரெக்டாக கணித்து விடுவார்கள். ஒவ்வொருவருடைய குண நலன்களை சிறப்பாகவே சொல்லி விடுவார்கள். அதாவது ஒவ்வொருவரின் செயல்களை உள் வாங்கிக் கொண்டு சரி இவர்கள் இப்படித்தான் என்பதை வெகு துல்லியமாகக் கூறுபவர்கள் ஒரு சிலரே.
அப்படிப்பட்டவர்கள் ஒரு துளசி இலையை எடுத்துக் கொண்டு ,அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை படித்தோ, ஆராய்ந்தோ அதன் மருத்துவ குணங்களை சொல்லும் திறமை இயற்கையிலேயே இருக்கும்.சரி, ஒரு இயந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது இயங்காமல் பெரிய, பெரிய வல்லுனர்கள் எல்லாம் வந்து பார்த்தும் அது இயங்காமல், தவித்துக் கொண்டிருந்தனர். அங்கு பல வருடங்களாக வேலை செய்யும் கூலித் தொழிலாளி" ஐயா நான் வேணும்னா பார்க்கட்டுமா ?" என்றதும் மற்றவர்கள் எல்லாம்அலட்சியமாகப் பார்த்தனர். ஆனாலும் முதலாளி நம்பிக்கையுடன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் எதையோ கழட்டி திருப்பிப் பார்க்கும் பொழுது உள்ளே உள்ள மிஷினின் ஒரு நட்டு கழண்டு இருப்பதை அறிந்து, அதை நன்றாக டைட் பண்ணி மாட்டி விட்டு, இயந்திரத்தை ஓட்டினார். அது அற்புதமாக ஓடி விட்டது. அந்தத் தொழிலாளியின் உள் வாங்கும் குணத்தினால் ,அந்தச் சிறிய தப்பினால் தான் இந்தத் தகராறு வரும் ,என்பதை யூகித்து அறிந்துள்ளார். ஆயிரக் கணக்கில் செலவழித்த முதலாளியின் பார்வையில் சாதாரண கூலி ஆளின் உள் வாங்கும் திறனை அறிந்து வியப்படைந்தார்.
இதே மாதிரி ஒரு சோப் கம்பெனியில் ஆட்டோமேடிக்காக சோப்கள் பையில் நிரப்பப்பட்டு, டப்பியில் அடைக்கப்பட்டு, செல்லும் மிஷின்கள் இருந்தும் ,சில சோப் டப்பிகளில் சோப்பே இல்லை ,என்று பல கஸ்டமர்கள் குறை கூறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெட்டியாகச் சோதிப்பது என்பது இயலாத காரியம். ஆகவே திறமையான வல்லுனர்களைக் கொண்டு என்ன செய்வது என்று ஆலோசனைகளைக் கூறி வந்தனர்,வேற்று முறையில் செய்தால் ,பல லட்சக் கணக்கில் செலவாகும் என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
அந்தக் கம்பெனியின் வாட்ச்மேன் “ஏன்யா இந்த தொந்தரவு சோப் டப்பாக்கள் ஒவ்வொன்றாக வரும் இடத்தில், சக்தி வாய்ந்த பேன் ஒன்றை வைத்து விட்டால் ,சோப் இல்லாத பெட்டி பறந்து கீழே விழுந்து விடுமில்லையா” ? என்றார். எல்லா வல்லுனர்களும் நமக்கு ஏன் இது தோன்றவில்லை ?என்று பேந்த, பேந்த விழித்தனர். உள் வாங்கும் திறமையினால் சாதாரண வாட்ச்மேனின், யோசனை முதலாளியின் லட்சக் கணக்கான ரூபாயை சேமித்ததுடன், கஸ்டமர் கம்ப்ளையிண்டிலிருந்தும் தப்பி நிம்மதியாகத் தூங்கினார்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது ? இதை இப்படிச் செய்தால் இப்படி ஆகும், என்கின்ற உள் வாங்கும் திறமை இருப்பவர்களே, பற்பல கண்டுபிடிப்புகளை அள்ளித் தந்து, மக்களின் பணிச்சுமையை குறைத்து நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றனர். உள் வாங்கும் திறமையினால் பல செயல்கள் சுலபமாக முடிக்க முடியும் என்பது இப்பொழுது தெரிகிறதல்லவா?
0
Leave a Reply