உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் சாத்துக்குடி பழம்
பழ வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியவற்றில் ஒன்று சாத்துக்குடி. இது மற்ற பழங்களை விட விலை சற்று குறைவாகக் கிடைக்கும். இந்தப் பழத்தை ஆங்கிலத்தில் ‘மொசம்பி ப்ரூட்’ என்கிறார்கள். சுவிட் லெமன் என்றும் அழைப்பதுண்டு. இதில் பல ரகங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவை அனைத்தும் மருத்துவ குணங்களில் மாறுவதில்லை. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, பின்னர் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இதன் சீசன் உள்ளது.
சாத்துக்குடி பழங்கள் இந்தியா போன்ற வெப்பம் மிக்க பகுதிகளில் அதிகமாக விளைகின்றன.25 அடி உயரம் வரை வளரும் சாத்துக்குடி மரத்தில் ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருக்கும் சாத்துக்குடி பின்னர் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் இது அதிக அளவில் விளைகிறது.சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடியில் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு இது பயன்படுகிறது. அதோடு, கணிசமான அளவில் வைட்டமின் பி1, பி2, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் இதில் உள்ளன. எனவே, தேகத்திற்கு நல்ல வளர்ச்சியையும், சுறுசுறுப்பை தருவதுடன் மலச்சிக்கலை நீக்கி நல்ல ஜீரண சக்தியையும் இது தருகிறது. என்னதான் சிட்ரஸ் குடும்பமாக இருந்தாலும் மற்ற சிட்ரஸ் பழங்களை காட்டிலும் அமிலத்தன்மையானது இதில் குறைவாகவே உள்ளது.
வயிற்றுப் புண்களை குணமாக்குவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக சாத்துக்குடி ஜூஸ் உள்ளது.பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது. இந்தப் பழம் நம்மை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்குகிறது. தினமும் இரண்டு டம்ளர் சாத்துக்குடி பழ சாறு 6 மாதம் தொடர்ந்து குடித்தால் இரத்த அழுத்தம் 7 சதவீதம் குறைவதாக அமெரிக்கா கிளீவ்லன்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் இந்தப் பழ ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும். இதிலிலுள்ள வைட்டமின் சியானது கார்னைடைன் (carnitine) உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்ட்டுள்ளது. இது இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
சாத்துக்குடி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவது, தசை வளர்ச்சிக்கு உதவுவது, சிறுநீரகப் பணியை சீராக்குவது என அனைத்தையும் பார்த்துக்கொள்வது பொட்டாசியம் சத்துதான். இதன் குறைபாடுதான் நாளடைவில் சர்க்கரை நோய் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வுகளில். எனவே, சர்க்கரை நோய் வராமல் தடுக்க தாராளமாக சாத்துக்குடிப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அது பொட்டாசியம் சத்து குறைபாட்டால் ஏற்படலாம். அதனைத் தவிர்க்க சாத்துக்குடிப் பழத்தை சாப்பிடுவது நல்லது.இந்தப் பழத்தை ஜூஸாக பருகலாம். அல்லது தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இந்தப் பழத்தில் ஜூஸ், ஜாம், ஊறுகாய், சாலட், சர்பத் செய்தும் சாப்பிடலாம். சாத்துக்குடி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
0
Leave a Reply