விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (05.04.2025) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காகமாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலஅலுவலர் திரு.ரமேஷ், உட்பட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு 23.04.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின்கீழ் ஊதியம் பெறுவர்
ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 05.04.2025 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும்] திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன்படி, சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 4 ஆவது வார்டு எம்.ஜி.ஆர் காலணியில் ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், திருத்தங்கல் ரயில் நிலையம் செல்லும் பாதையில் 17 ஆவது வார்டில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.அதன்படி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை 04.00 மணிக்குள் திரும்பிவர வேண்டும். உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப்பகுதியிலும் நுழையக் கூடாது. மலையேற்றப் பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும், வனத்துறை சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.தடைசெய்யப்பட்ட பொருட்களை யாரும் கொண்டு செல்லக்கூடாது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ)/ மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் திரு.பிணராயி விஜயன் அவர்கள் (01.04.2025) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் வருகின்ற 09.04.2025 அன்று காலை 8.30 மணி முதல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்;டம், வீரசோழன் கிராமத்தில் உள்ள அல் அமீன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடைந்த இளைஞர்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும்.மேலும், விபரங்களுக்கு gcc.tansam@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும், 86818-78889, 95148-38485, 97906-89052, 98845-76254 என்ற தொலை பேசி எண்களிலும் அல்லது https://tansam.org/GCC என்ற இணையதள வழியாக விவரங்களை பெற்று பயனடையலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு, 1 மாத காலம்(01.04.2025 முதல் 30.04.2025 வரை) நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்போது 12 ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன்; நீட் மற்றும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.அதன்படி, 70 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளும், 40 மாணவர்களுக்கு க்யூட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் 01.04.2025 முதல் 30.04.2025 வரை நடத்தப்படுகிறது.இப்பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்துரைக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை க.விலக்கில்(30.03.2025) நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் ரூ.36.40 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை பெருநாழி சாயல்குடி கடுகுசந்தை மாரியூர் வாலிநோக்கம் இருவழி சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S.அவர்கள் தலைமையில் நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும்,விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.இந்த சாலையானது முக்கிய நகரங்களான அருப்புக்கோட்டை. திருச்சுழி, கமுதி. பெருநாழி. சாயல்குடி, கடுகுசந்தை, மாரியூர், வாலிநோக்கம் ஆகியபகுதிகளை இணைக்கிறது. மேலும் முக்கிய சுற்றுலாத்தலமான வாலிநோக்கம் கடற்கரை இச்சாலையின் எல்கையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு, தொழிற்சாலைகள், குவாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்கள் அதிகம் உள்ளது. விவசாயிகள் பெருமளவில் வணிகப் பொருட்களை கொண்டு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் மொத்த நீளம் 79.260 கி.மீ. அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் விலக்கு வரைமுதற்கட்டமாக இருவழித்தடத்திலிருந்து நான்குவழித்தடமாக மாற்றும் வகையில், முதலமைச்சரின் சாலைமேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.36.40 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.இச்சாலையானது 6.00 கி.மீ. நீளத்துடன், 7 சிறுபேழை பாலங்கள், 100 மீ அளவிலான தடுப்புச்சுவர்கள், குறுக்கு வடிகால் பணிகள், தடுப்புச்சுவர் கட்டுதல்,மையத்தடுப்பான் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்பாடு செய்தல் உள்ளிட்டபணிகளுடன்நான்குவழித்தடமாகஅகலப்படுத்தப்படவுள்ளது..திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இதுவரை ஏறத்தாழ ரூ.121.11 கோடி மதிப்பில்103 கி.மீ தூரம் சாலைகள் போடுவதற்கும், ரூ.16 கோடி மதிப்பில் 21 பாலங்கள் அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.137 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பணிகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக நமது பகுதிகளில் நிறைவேற்றிஇருக்கின்றோம்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கான அறிவிப்பாக, நம்முடைய மாணவர்களுக்கான அறிவிப்பாக இந்த நிதிநிலை அறிக்கை எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில்,இந்த முறை நிதிநிலை அறிக்கையை தந்து இருக்கிறார்கள். அவருடைய கரங்களை வலுப்படுத்த என்றைக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் திருமதி.ஜெயராணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள (29.03.2025) வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் I.A.S.அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழுவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் எடுத்துரைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகள் டிஜிட்டல் திரை நேரத்தை குறைத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் அவர்களை மடைமாற்றம் செய்வதற்கான விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் சித்திரக்கதை நூலகம்(காமிக் நூலகம்), அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி, குழந்தைகள் இலக்கிய திருவிழா உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.இந்த பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உயர்கல்வி சேர்க்கை விகிதம், தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், ஓவியம், சுற்றுச்சூழல் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சிறப்பான மேம்பாடுகளை காண முடிகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள இன்று வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழுவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், அவர்கள் எடுத்துரைத்தார்.