2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.விண்ணப்பதாரர், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.(அல்லது)குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.இதற்கான விண்ணப்படிவத்தை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாவட்ட அல்லது துறை சார்ந்த இணையத்தளமான www.virudhunagar.nic.in அல்லது https://dsdcpimms.tn.gov.in- முகவரியில் விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் அதற்கான படிவத்தில் 07.03.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 600 010. என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959-ன்படி சாதாரண கற்கள், மண், கிராவல், கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற பெரு கனிம குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24.02.2024 தேதி முதல் மின்னணு முறையில் இணையதள வாயிலாக மட்டுமே பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேற்கண்ட சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோர விண்ணப்பிக்கும் நபர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (20.02.2025) மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தின் 2025-26 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டதுநபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னுரிமை துறைகளுக்கு 2025-26ஆம் ஆண்டில், ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு வங்கிக் கடன் அளவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூபாய் 9998.59 கோடியாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூபாய் 7918.08 கோடியாகவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு சுட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூபாய் 1509.32 கோடியாகவும்என மொத்தம் ரூ.19425.99 கோடி அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டார்இக்கூட்டத்தில் நபார்டு மாவட்ட மேலாளர் திரு. ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு. பாண்டிசெல்வன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 இலட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 இலட்சம் பரிசு வழங்கப்படும்.இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் (TNPCB) ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் /அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட்டு, விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகளை (கடின நகல்) 01.05.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றிய போது “பட்டாசு தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்” என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் : 13, நாள் 12.02.2025 ன் படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த பெற்றோர்களின் கல்வி பயிலும் வாரிசுகளில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000-ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.6,000 -ம் ஒரு தடவை பணப்பலனாக அளிக்கப்படும். மேலும் பராமரிப்பு செலவினங்களுக்காக 18 வயது பூர்த்தி ஆகும் வரை ஒவ்வொரு வாரிசுக்கும் பெற்றோரில் ஒருவரை விபத்தில் இழந்திருந்தால் ரூ.2,000-ம் பெற்றோர் இருவரையும் இழந்திருந்தால் ரூ.4,000-ம் மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.மேலும் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் பொறியியல் மற்றும் பிற தொழிற் பட்டயப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணமும், தொழிற்நுட்பக் கல்வி, செவிலியர் மற்றும் பிற பட்டயப் படிப்புகள் பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் வரையும் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படும். 10.11.2024 அன்றோ அதற்கு பிறகோ மேற்சொன்ன அரசாணையில் கூறியுள்ள விதிகளின் படியான தகுதியான பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஏதுவாக இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின் பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம் மற்றும் தொடர்பு அலைபேசி எண், முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “இணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் , கதவு எண்: 4, NPSN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மஹால் முதல் தளம், சிவகாசி - 626 123” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் படியும், விபத்தில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்து அனுப்பும் படி பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய 98659-58876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447-45064 (இணை இயக்குநர், சிவகாசி) அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (19.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,கோட்டைபட்டி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும், கோட்டைபட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.60 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், சூரார்பட்டி ஊராட்சியில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ஜகவீரம்பட்டி ஊராட்சியில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்; கட்டப்பட்டு வருவதையும், குகன் பாறை ஊராட்சியில்; ரூ.7.50 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், ராமுதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும்; மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்தும் ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (18.02.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து செண்பகப்தோப்பில் நடத்தும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு, பசுமை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்தை சிறப்பான முறையில் பாதுகாக்கும் வகையில் பசுமை பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மாணவர்கள் மூலம் பள்ளி வளாகங்களுக்குள் இயற்கை வளங்களின் நுகர்வைத் தணிக்கை செய்கிறது மற்றும் விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதைக் குறைக்க நடைமுறை தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிகள் நல்ல சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாற உதவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செண்பகப்தோப்பில் நடைபெறும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு செல்லும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார். இந்த பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம் 18.02.2025 முதல் 21.02.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.தேவராஜ்,இ.வ.ப., ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் (18.02.2025) நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.இந்தியாவில் மொத்தம் 152 நகராட்களில், தமிழ்நாட்டில் மட்டும் 10 நகராட்சியில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா (NAtional geospatial Knowledge – based land Survey of Urban HAbitations – NAKSHA) திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகரம் முன்னோடி திட்டமாக வார்டு 23, பிளாக்:133, மொத்த நகர புல எண்கள். 29, 320-ல் (6.600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்) இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்வதால் நில உடைமை தகராறுகள் மற்றும் நீண்டகால சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும், நிலப்பதிவுகளை வெளிப்படையாகவும், துல்லியமாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் செய்ய பயன்படுகிறது. புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொத்துவரி செலுத்துவதற்கு பயன்படுகிறது.இன்று ஒரு பகுதியில் நடக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நகரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகள், வழங்கக்கூடிய பல்வேறு பணிகளுக்கும், சொத்து வரி உள்ளிட்ட வரி விதிப்புகளுக்கும் செய்யப்பட வேண்டிய நில அளவு, சொத்தினுடைய அளவீடுகள் அனைத்தும் பழங்கால முறைகள் தான் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் பொது மக்களுக்கு அந்த சேவைகளை வழங்கக்கூடிய அளவிற்கு நிறைய கால விரையமும், நகராட்சியினுடைய வருவாயும் பாதிக்கப்படுகிறது.அதனை சரி செய்வதற்கு நிறைய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவற்றிற்கான தீர்வு தான் இந்த திட்டம். இதன் மூலமாக நகர் பகுதிகளில் இந்த ஆளில்லா வானூர்திகள் என்று சொல்லக்கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமாக துல்லியமாக சர்வே செய்து, அந்த சர்வே செய்யப்பட்ட ஒளி அச்சுக்களை வைத்து, அவற்றை முறையாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மென்பொருள்களை வைத்து, அதனுடைய தரவுகளை எல்லாம் ஆய்வு செய்து சரியான விகிதத்தில் அவற்றை ஜி.பி.எஸ் என்று சொல்லக்கூடிய சரியான புவியியல் துல்லியத்தின் அடிப்படையில் அந்த இடங்களை துல்லியமாக வரையறுக்க முடியும்.அந்த புவியியல் வரையறைக்கு மொத்தமாக நகரை முழுமையாக சர்வே செய்து அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும். அதில் குறைபாடு இருந்தால் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு செய்வதை அந்த குழு சென்று பார்வையிட்டு, புகார்கள் சரியாக இருந்தால் அந்த ஐயப்பாடுகளை கலைவதற்கும் இந்த திட்டத்தில், நடைமுறையில் உரிய வாய்ப்பு இருக்கிறது.வான்வழி ஆய்வுகள் மூலம் துல்லியமான மேப்பிங் வரைவதற்கும், மாநில அரசுகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் நிலப்பதிவுகளைச் சரிபார்ப்பதற்கும், டிஜிட்டல் தளங்கள் வழியாக எளிதாக அணுகவும், புவியில் தரவுகளுடன் துல்லியமாக திட்டமிடலுக்கு பயன்படுகிறது.வான்வழி ஆய்வு துல்லியமாக மற்றும் வேகமான தரவு சேகரிப்பதற்கும், படம் பிடிப்பதற்கும், செங்குத்து நகரங்களுக்கு சாய் கோண கேமரா மூலம் நிலஅளவை செய்வதற்கும், மலைப்பாங்கான நெரிசலான இடம் மற்றும் மர அடர்த்தியாக உள்ள இடங்களில் LiDAR சென்சார் மூலம் நிலஅளவை செய்வதற்கு பயன்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட நிலபதிவுகள் இல்லாதது, காலாவதியான மற்றும் முழுமையடையாத தரவு காரணமாக அரசாங்க ஆவணங்களுக்கும், உண்மையான நில உரிமைக்கும் இடையிலான முரண்பாடுகளை தவிர்க்கவும் பயன்படுகிறது. மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பு இல்லாதது, உரிமை தகராறுகள் மற்றும் சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்க பயன்படுகிறது.துல்லியமான மற்றும் ஆன்லைன் நிலப்பதிவுகள் கிடைக்கும். நகர்ப்புற நில மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட நகர்ப்புற நில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும், வெளிப்படையான மற்றும் வேகமான நிலம் தொடர்பான செயல்முறைகள் கிடைக்கவும் பயன்படுகிறது.எனவே இவற்றை தொடர்ச்சியாக செய்து முழுமையாக நிறைவேற்றுகின்ற போது பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுடைய சேவைகள் விரைவாக கிடைப்பதற்கும், நீதிமன்ற வழக்குகள், கால விரயங்கள் அவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கும் இந்த தொழில்நுட்பத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய மாறுதல்களை நிச்சயமாக செய்ய முடியும்.எனவே ஒரு வெளிப்படை தன்மையோடு எல்லோருக்கும் சரியாக இந்த சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நக்சா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள், அங்கு இருக்கக்கூடிய குடியிருப்பு நல சங்கங்கள் ஆகியோர் நகராட்சி நில அளவை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலமாக இவற்றை விரைவாக செய்து முடித்தால் நிச்சயமாக நம்முடைய நகரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு அம்சமாக இது திகழும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நில அளவை பதிவேடுகள் துறை) திரு.த.விஜயகுமார், விருதுநகர் நகராட்சி பொறியாளர் திரு.ஆர்.எட்வின் பிரைட் ஜோஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (18.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொருவருக்கும் மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை ஆகும். தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரவருடைய குடும்பம், உறவினர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நாளைக்கு 8-லிருந்து 10- மணி நேரம் வரை தொழில்சார்ந்த வாழ்க்கைக்கு நாம் செலவிடுகிறோம். தொழில் சார்ந்த வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பது தான் சமூக வாழ்க்கை.இந்த மூன்றிற்கும் தங்களது வாழ்க்கையை நாம் தகவமைத்து கொண்டிருக்கிறோம்.குறிப்பாக சமூக ஊடகங்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது, சமூகத்தின் உடைய நேரடி தாக்கத்தால் இளைஞர்கள் இம்மூன்றின் மீது தெளிவற்ற புரிதலும் அல்லது இம்மூன்று குறித்த ஐயங்களையும் பற்றி தெளிவாக புரிந்து கொள்வது என்பது மிகவும் அவசியம்.பெண்களுக்கான விடுதலை முன்னேற்றம் என்பது சொத்துரிமை, கல்வி உரிமை, சுதந்திரம் உள்ளிட்டவைகளாகும். இது எல்லாவற்றிற்கும் மிக மிக அடிப்படை என்ன என்று பார்த்தால், அவர்கள் கையில் பணம் இருக்க வேண்டும்.அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தான்.மிக புகழ்பெற்ற தத்துவஞானி, மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது. உங்களுக்கு என்ன விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லப்படக்கூடியது தான் இந்த நிகழ்ச்சி.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் தான் மனிதனின் உடைய வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், இம்மூன்றும் இருக்கக்கூடிய எல்லோரும் முன்னேறவில்லை.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள் தேடிய தேடல்கள் தான். எனவே, கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம். நல்ல வாய்ப்புகள், விழிப்புணர்வுகள் பெற்றவர்கள் குறித்த தெளிவு பெற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.எந்த ஒன்றை தனது இலக்காக, வெற்றியாக நிர்ணயித்து கொண்டு, அவற்றை ஒவ்வொரு நாளும் விரும்ப தகுந்த மாற்றங்களை கொண்டு வந்து, அவர்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது இறுதி முடிவு அல்ல. அது தொடர் பயணம்.மிக பெரிய வெற்றிகள் மட்டுமே வெற்றிகள் அல்ல. சிறு சிறு வெற்றிகளும் கொண்டாடப்பட வேண்டியவை. சிறு சிறு வெற்றிகள் தான் மனிதர்களை தொடர்ச்சியாக நகர்த்திக்கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக தான் நீங்கள் எதிர்காலத்தில் கல்வி வாய்ப்புகள் குறித்து புரிதல்களை கொண்டிருந்தால் மிகப்பெரிய வெற்றிகளை அடைய முடியும்.மனிதர்கள் வாய்ப்புகளால் உருவாக்கப்படுகிறார்கள். நீங்கள் எவ்வளவு விரிவாகவோ, ஆழமாகவோ தேடுகிறீர்களோ நீங்கள் அவ்வளவு மிக மதிப்பு மிக்க வைரங்களை வாழ்க்கையில் பெறுவீர்கள். இன்றைக்கு மாறி வரக்கூடிய உலகில் கற்றல், கற்பித்தல், புதியனவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது.எனவே, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உங்களது தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில் உங்களுடைய குடும்ப வாழ்வில், தொழில் வாழ்வில் இவற்றிற்கு எல்லாம் தனக்கு தேவையான தகவமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் (18.02.2025) நடைபெற்ற விழாவில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) மரு. இரா.ஆனந்தகுமார்,I A S, அவர்கள் எழுதிய வடைப்பூ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வெளியிட்டார்.மரு.இரா.ஆனந்தகுமார் அவர்கள் இதுவரை 10-த்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். டாக்டர்.இரா.ஆனந்தகுமார் அவர்கள் 2003 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர். அவர் அடிப்படையில் கால்நடை மருத்துவம் படித்தவர். தமிழ்நாட்டின் முதல் இடம்பெற்று, 2003 ஆம் ஆண்டு தேர்வாகி பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சார் ஆட்சியராக தொடங்கி, மதுரை மாவட்டத்தினுடைய கூடுதல் ஆட்சியர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்து சென்னை மாநகராட்சியில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து, தற்போது ஊரக வளர்ச்சி துறை பயிற்சி துறை ஆணையராக பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடியவர். அவர் தன்னுடைய தொடர்ச்சியான வாழ்க்கை அனுபவங்களை நூலாக வடித்திருக்கிறார்.நீங்கள் இந்த பூமியில் இன்னும் 50 ஆண்டுகாலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று ஆண்டுகளில் உங்களுடைய பாடத்திட்டத்தை படித்து, செயல்முறை தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை பெற்று பட்டம் பெறக்கூடிய இந்த கல்வி என்பது 10 விழுக்காடு மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கிறது. மற்ற 90 விழுக்காடு உங்கள் அன்றாட நிகழ்வுகளை நீங்கள் பழகக்கூடிய மனிதர்களை, நீ எதிர்கொள்ளக்கூடிய சமுதாயத்தை நீங்கள் எவ்வாறெல்லாம் கற்றுக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.ஒவ்வொருவருக்கும்; மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை ஆகும்.இந்த மூன்றையும் கல்லூரி மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டங்கள் மட்டுமே வழங்காத ஒன்றினை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நமக்கு மொழியில் இருக்கக்கூடிய புலமையும், அதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும் தான்.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் இருக்கிறது. ஏன் ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்றால் மனிதர்களுக்கு என்று இருக்கக்கூடிய மிகப் பெரிய பண்புகளை விட அவனுக்கு இல்லாத பண்புகள் மற்ற உயிரினங்களை விட அதிகம். மனிதன் இந்த பூமி பந்தில் மிக வலிமையான உயிரினம். மனிதன் தன்னைவிட 100 மடங்கு உடல் எடையில் இருக்கக்கூடிய யானையை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவன்.மனிதன் தன்னைவிட வலிமையான புலியையும், சிங்கத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவன். ஏன் அதன் இருப்பை கூட பூமி பந்தில் கேள்விக்குள்ளாக்க கூடியவன் மனிதன். பல மிருகங்களை விட ஏன் எல்லா மிருகங்களை விட மேம்பட்ட பகுத்தறிவு சிந்தனையை ஆறாம் அறிவை கொண்டவன் மனிதன். அப்படிப்பட்ட உயிரினங்களுடைய பரிணாம வளர்ச்சியில் மேன்மையான வடிவத்தை வைக்கக்கூடிய மனிதன் கூட பல உயிரினங்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது அதனுடைய மரபு வலிமைகள் குறைபடலாம்.மனிதர்களிடம் மரபுக் கடத்தலை எடுத்து பார்த்தால், மரபுக் கடத்தலில் மனிதன் மற்ற உயிரினங்களை விட சற்று கீழ்மட்டமாகவே இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன் இந்த பூமியில் வாழ்வதற்கு இந்த வாழ்க்கை முழுவதும் அனுபவங்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் நிகழக்கூடிய நூற்றுக்கணக்கான அனுபவங்கள்;. ஒரு தனி மனிதனுக்குள் ஒரு நாளில் சொல்லப்படாத அனுபவம் மிக்க 100 கதைகள் இருக்கும். இவையெல்லாம் அவன் பூமிக்குள் செல்கின்ற பொழுது அவன் மறைந்து விட்ட பிறகு , அவனோடு சேர்ந்து அவன் அனுபவங்களும், அவன் கற்ற செல்வங்களும் எல்லாம் புதைக்கப்பட்டு விடுகிறது.எனவே, மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை, அனுபவங்களை பதிவு செய்வது என்பது மிக மிக முக்கியமானது. எந்த ஒன்றையும் பதிவு செய்வது, எந்த ஒன்றையும் எழுதுவதும், அதை பேசுவதும் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் என்பது மிக முக்கியமான பண்பு. அந்த பண்புதான் கல்லூரியில் மாணவர்கள் பாடத்திட்டங்களுக்கு வெளியே நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அதை கற்றுக் கொள்வதற்கு இதுபோன்ற நூல்கள் தான் உதவி செய்கிறது.மனிதர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவைப்படுகிறது. வாழ்வியல் சிக்கல்கள் எதிர்கொள்வதும், தனக்கு வரக்கூடிய துன்பத்தில் இருந்து துன்பங்களை விலக்கி, வாழ்வியல் இன்பங்களை பார்ப்பதும். அதற்கு அவர்களுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்கள் இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று நாமே தவறு செய்து அவர்களின் மூலமாக கற்றுக்கொண்டு நெறியோடு இருப்பது. இன்னொன்று அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வது. முதலாவது விலை மதிப்பு மிக்கவை. இரண்டாவது எளிதில் கிடைப்பது. அடுத்தவர்களின் அனுபவங்களிலிருந்து நமக்கான வாழ்வியல் பாடங்;களை கற்றுக்கொள்வது என்பது நமது கற்றலில் மிக முக்கியமான ஒன்று. அது பள்ளி கல்வி பாட புத்தகங்களில் நிகழ்வதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் தான் நிகழ்கிறது. அதற்காக இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிச்சுமைகளும் மத்தியில் தொடர்ச்சியாக எழுதக்கூடிய மரு.இரா.ஆனந்தகுமார் அவர்களின் நூலை படிப்பது என்பது நம் எல்லோருக்கும் வாழ்வில் அனுபவமாகும். நீங்களும் நிறைய வாசிப்பதற்கும், வாசிப்பின் மூலமாக மொழி ஆற்றலை பெறுவதற்கும், நீங்களும் பயன்படுத்துவதற்கும் இது போன்ற விழாக்களையும் நூல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.