25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 01, 2025

"Coffee With Collector” என்ற 172-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (30.04.2025) சிவகாசி S.N.M.F.  மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பயிலும் 60-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 172- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,, I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  172-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். 

May 01, 2025

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில்,   (30.04.2025) விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு  பயிற்சி  நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மனிதன் என்பவன் தன்னால் தவறவிடப்பட்ட வாய்ப்புகளை குறித்து வருந்தக்கூடிய குற்ற  உணர்ச்சிகளின் தொகுப்பாக இருக்கிறான். மேலும், கடந்த 400 ஆண்டுகளாக உலகத்தில் அதிகமாக தனிமனித மேம்பாடு பற்றி கூறுகின்ற பொழுது,  வாய்ப்புகள் என்பது நமக்கு ஒரு முறை தான் வருகிறது.  நாம் ஒரு இலக்கை அடைவதற்கு அதிகமான போட்டிகள் இருக்கும். அதாவது போட்டியினுடைய தன்மைகள் அதிகமாக இருக்கிறது.ஹென்றி போர்டு என்ற தத்துவ அறிஞர் கூறும் பொழுது, நீங்கள் வாழ்க்கையில், எவ்வளவு பெரிய இலக்குகள் வைத்திருந்தாலும், அந்த இலக்கு சிறு இலக்குகளாக பிரித்து கொண்டால் ஒரு பெரிய இலக்கை அடைவதற்கான கஷ்டம் இருக்காது என்று கூறுகிறார்.நீங்கள் எதாவது போட்டித்தேர்விற்கு படிக்கின்ற பொழுது, உங்களுடைய இறுதி இலக்கை நினைத்தீர்கள் என்றால் அது உங்களுடைய ஆசை. ஆனால், அந்த இறுதி இலக்கை அடைவதற்கான வாய்ப்பு சின்ன சின்ன இலக்குகள் மூலமாக தான் கிடைக்கிறது.100 சின்ன சின்ன இலக்குகள் சேர்ந்தது தான் ஒரு பெரிய இலக்கு ஆகும். நாம் சின்ன சின்ன முயற்சிகளை, இலக்குகளை சின்ன சின்ன சிற்பங்களாக செதுக்கி கொண்டால், நாம் எவ்வளவு பெரிய இலக்குகளை கூட அடைய இயலும்.எப்பொழுதும் நீங்கள், அனைவரும் உங்களுக்கான  இலட்சியங்களை நினைத்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். மேலும், நமக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.வாய்ப்புகள் சாதாரணமாக அனைவரையும் தேடி வராது. நாம் தான் வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும். நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

May 01, 2025

திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலங்களில் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் குப்பைகள் மற்றும் இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழலையும், மனித நலனையும் பாதிக்கக் கூடும். “தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, அத்தியாயம் VIII பிரிவு 153, 156, 157, 158, 160 மற்றும் 161-ன் படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும் நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், சாலைகளில் போடுதல் மற்றும் கழவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது”. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

May 01, 2025

01.05.2025 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 01.05.2025 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டமானது நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும்,இந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் நடைபெறும் தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2025

வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (29.04.2025) மாவட்ட நிர்வாகம், பிரதான் இண்டஸ் இண்ட் மாவட்ட வளர்ச்சி திட்டம்  மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணைந்து, வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்குதல், சுகாதார விழிப்புணர்வு மற்றும் நலம் சார்ந்த பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் இணைய வழியாக தொடங்கி வைத்து, உரையாற்றினார்.விருதுநகர் மாவட்டத்தில் ரத்தசோகையை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிரதான் இண்டஸ் இண்ட் மாவட்ட வளர்ச்சி திட்டம் இணைந்து செயல்படுத்தும் இரும்புக் கண்மணிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரத்த சோகையற்ற இளைய தலைமுறையை உருவாக்குவோம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டத்தின் கீழ் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் வத்ராயிருப்பு ஆகிய வட்டாரங்களில் ஹீமோகுளோபின் அளவு 10.9 க்கு கீழ் உள்ள 1000 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வளரிளம் பெண்களுக்கான ரத்தசோகை ஊட்டச்சத்து பெட்டகத்தில், விட்டமின்-சி மாத்திரை, இரும்புச்சத்து டானிக், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட முக்கியமான உணவுப் பொருட்கள் அடங்குகின்றன. இந்த ஊட்டச்சத்து பெட்டகம், பெண்களின் இரத்தச் சோகை குறைபாட்டை தடுக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது.பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.மேலும், வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள வளரிளம் பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கிடும் வகையில், ஹீமோகுளோபினோ மீட்டர் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

Apr 29, 2025

"Coffee With Collector” என்ற 171-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (29.04.2025)  இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (பயிற்சி), துணை ஆட்சியர் ஆகியோர் தலைமையில் உயர் கல்வி சேர்க்கை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக  வருகை தந்த 25 பேர் கொண்ட குழுவினருடனான "Coffee With Collector”என்ற 171- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை குறித்த செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கலந்துரையாடினார்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகள் டிஜிட்டல் திரை நேரத்தை குறைத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் அவர்களை மடைமாற்றம் செய்வதற்கான விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் சித்திரக்கதை நூலகம்(காமிக் நூலகம்), அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி, குழந்தைகள் இலக்கிய திருவிழா உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருவது குறித்து எடுத்துரைத்தார். மேலும், காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருவது  குறித்தும், இந்த பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உயர்கல்வி சேர்க்கை விகிதம், தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், ஓவியம், சுற்றுச்சூழல் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சிறப்பான மேம்பாடுகள் குறித்தும், இன்று வருகை தந்த இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்(பயிற்சி), துணை ஆட்சியர் மற்றும் குழுவினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார்.குறிப்பாக, உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துதல், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துதல், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துதல், உயர்கல்வியில் இந்திய அளவில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக மற்றும் வாழ்க்கை சார்ந்த திறன்களை மேம்படுத்துதல் குறித்தும் எடுத்துரைத்து, இத்திட்டங்களை செயல்படுத்திய விதம், தொடர்ச்சியான செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.

Apr 29, 2025

விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 03.05.2025 அன்று நடைபெற உள்ளது

 விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 03.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  நடைபெற இருக்கிறது.03.05.2025 அன்று அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பாலையம்பட்டி. ஆத்திபட்டி, ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளி, கணேஷ் நகர். சென்னிலக்குடி, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் பொம்மையாபுரம், பல்நோக்கு கட்டிடத்திலும்,சாத்தூர் சட்டமன்ற தொகுதியில், சமுதாயக்கூடம், நத்தத்துபட்டி. சமுதாயக்கூடம், ஓ.மேட்டுப்பட்டி. தேவர்மண்டபம், அண்ணாநகர்(டவுன்), சாத்தூர். முருகன்கோவில் மண்டபம், சாத்தூர் டவுன். நாடார் மகமை துவக்கப்பள்ளி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை. வெம்பக்கோட்டை டவுன், அரசு மேல்நிலைப்பள்ளி,  தாயில்பட்டி மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2025

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135 -ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வார விழா (ஏப்ரல் 29 முதல் மே 5 வரை) நிகழ்ச்சியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (29.04.2025) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  தமிழ் வார விழா (ஏப்ரல் 29 முதல் மே 5 வரை) நிகழ்ச்சியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில்  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் வார விழா கொண்டாடும் வகையில்,  தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் திரு.இல.நிலவழகன் அவர்கள் மற்றும் தலைவர், பாவாணர் கோட்டம் முரம்பு திரு.அ.இளங்கண்ணன் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.உலகத் தமிழ் கழகத் தலைவர் திரு இல.நிலவழகன் அவர்கள் வாழ்த்திப் உரையாற்றியபோது, பிற மொழித் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று குறிப்பிட்டார். பாவேந்தரின் தமிழ் மணக்கும் தமிழ் வாரம் சிறக்க வாழ்த்தினார்.பின்னர், முரம்பு பாவாணர் கோட்டத்தின் தலைவர் திரு.அ.இளங்கண்ணன் அவர்கள் உரையாற்றியபோது, புரட்சிக் கவி பாரதிதாசனின் உயிர்ப் புள்ள கவிதை வரிகளைக் கூறி நம் அனைவருக்கும் தமிழ் உணர்வு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற அரசினுடைய கொள்கையின் அடிப்படையில், அரசினுடைய அரசாணைகள், அலுவலங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பக்கூடிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் எழுதுவதற்கு ஏற்கனவே விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தவதற்காகவும், அரசு அலுவலகங்கள் தமிழில் அலுவலக நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும், விருதுநகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்றிலிருந்து சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பாக 1949 ஏப்ரல் மாதம் விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுக்கு புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் வந்திருந்தார். அந்த மாநாட்டில் திருக்குறள் எந்த அளவிற்கு அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியது என்பது குறித்து அவர் மிக தீவிரமாக பேசி, திருக்குறள் அரசினுடைய வழிமுறைகளில், கல்வி நிலையங்களில், பொதுமக்களுக்கும் அதனுடைய கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது ஒரு பண்டிதர் நிலையிலிருந்து பாமர நிலைக்கு எல்லோருக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தொடங்கியது, விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு தான். அந்த மாநாடு நடைபெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இன்று பாரதிதாசனுடைய பிறந்த தின விழாவை நாம் விருதுநகரில் கொண்டாடுவது என்பது பெருமைக்குரியது.பாரதிதாசன் நமக்கெல்லாம் வழிகாட்டுதலுக்குரிய ஒரு கவிஞர். பாரதிதாசனுடைய எல்லா பாடல்களும் அவர் சமூகத்திற்கு வழங்கிய 40 ஆண்டுகாலம் எழுதிய பாடல்கள், அவர்களின் கட்டுரைகள், அவர் எழுதிய கவிதைகள் அவர் பேசிய பேச்சுகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் பாரதிதாசன், தமிழ்நாடு குறித்து மூன்று கனவுகளை கண்டார். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற அவர் கண்ட கனவுகள் இன்றைக்கும் நம்மை வழி காட்டக்கூடியதாகவே இருக்கிறது. மொழி குறித்து பேசுகின்ற பொழுது, மொழி என்பது ஒரு வாழும் நிலப்பகுதியில் மக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரு தகவல் தொடர்பு கருவி மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிகளின் தொகுப்பு. அவர்களுடைய பண்பாடு. அவர்கள் தங்களது வாழ்க்கையில் அனைத்து இன்ப துன்பங்களையும் பெறுவதற்கு மொழிதான் அடிப்படையாக இருக்கிறது என்று பேசி,  அப்போதைய காலகட்டத்தில் மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இந்த சமுதாயம், இந்த நாடு தொழில்நுட்பத்தில்; முன்னேறுகின்ற பொழுது எப்படி மொழி இருக்க வேண்டும் என்பது குறித்து கனவுகளை கண்டார்.அனைத்து அரசு அலுவலக வணிக நிறுவனங்களும் தங்களுடைய பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துகின்றது. இந்த பிரச்சனையை ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பாக பாரதிதாசன் பதிவு செய்கிறார்.இதெல்லாம் நிச்சயமாக அரசினுடைய திட்டங்களை, அரசினுடைய கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கும் நம்மை போன்ற அரசு அலுவலர்கள் ஏழை எளிய மக்களுக்கு அரசினுடைய சேவைகள் கிடைக்கக் கூடிய அளவிற்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்கும் என்றால் அதுதான் பாரதிதாசன் கண்ட தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மூன்று மிகப்பெரிய கனவுகளில் ஏழை எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டது. எளிய மனிதர்களுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற தத்துவத்தை தான் இன்றைய தமிழ் வார விழாவில் அரசு அலுவலர்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது. அதைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாகத்தில் சிறந்து விளங்கிய 5 அலுவலகங்கள் மற்றும் 5 அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Apr 28, 2025

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

. தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக 2025ம் ஆண்டிற்குள் மாற்ற வேண்டும் என்ற இலக்கினை செயல்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/தலைவர், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை அறிவுரையின் படி விருதுநகர் மாவட்டத்தில் தடுப்புப் படையால் கூட்டாய்வுகளும்  மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுதுறை அலுவலர்களிடையே விழிப்புணர்வும்  ஏற்படத்தப்பட்டு வருகின்றன.தற்போது  பள்ளி தேர்வுகள்  முடிவடைந்து  மாணவர்களுக்கு   விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.1. மாவட்ட தடுப்பு படை  கூட்டாய்வின் போது  விடுமறை நாட்களில்  18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவ  தொழிலாளர்களை பணிக்கமர்த்தியது கண்டறியப்பட்டால் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும் என  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி மாணவ/மாணவியர் பள்ளியில் பயில்வதாகவும் பள்ளிவிடுமுறை  நாட்களில் மட்டுமே  பணிபுரிவதாக தெரிவித்தாலும் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது  குற்றத்திற்கேற்ப  முதல் தகவல்  அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 2வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.2. 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவ  தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும்  ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.3. விளம்பரங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், வர்த்தக ரீதியிலான கலை நிகழ்ச்சிகள்  போன்றவற்றிலும்   You tube, Facebook, Twitter, Instagram  போன்ற  வலைதள சமூக ஊடகங்களிலும்  18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினரை ஈடுபடுத்தும்போது  குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல்  மற்றும்  முறைப்படுத்துதல்) சட்டத்தின்  கீழ்    மாவட்ட ஆட்சியரிடம்  அனுமதி சான்று வாங்கிய பின்னரே ஈடுபடுத்த வேண்டும்  என  உள்ளது.            எனவே மாவட்ட ஆட்சியர்  அனுமதி பெறாமல்  18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினரை ஈடுபடுத்தும்  நபருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.        கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். 18 வயதிற்குட்பட்ட எவரும் பள்ளி அல்லது திறன் வளர் பயிற்சி பயிலாமல் பணிக்கமர்த்தப்பட்டிருந்தாலும் பள்ளி படிப்பினை  தொடர்ந்து கொண்டே  பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அது குறித்து 1098 சைல்டு லைன் உதவி எண் அல்லது pencil.gov.in என்ற வலைதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம்.  அனைத்து பள்ளிவயது குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்யவும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கவும் பொதுமக்களும், அனைத்து வணிகர்களும், வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்கள் தெரிவித்துள்ளார்

Apr 28, 2025

தேசிய சுகாதார குழுமத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

விருதுநகர் மாவட்டம், தேசிய சுகாதார குழுமத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்  கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.1.Occupational therapist                                  -1 பணியிடம்2. Special educator for behavioral therapy      -1 பணியிடம்3. Social worker                                          -1 பணியிடம்இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 09.05.2025 பிற்பகல் 5.45 மணி வரை சமர்ப்பிக்குமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 115 116 117 118 119 120 121 ... 140 141

AD's



More News