25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 06, 2026

25 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கே.புதூர் கிராமத்தில்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை சார்பில், வீட்டுமனை ஒதுக்கீடு   உத்தரவுகள் பெற்ற 25  பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (04.07.2026)  வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் கே.புதூர் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள்  இலவச வீட்டுமனை  உத்தரவுகள் பெற்றுள்ளதாகவும்,இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால்,  இடங்களை அளவீடு செய்து, பட்டா வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 25 குடும்பங்களுக்கான இடங்களை அளவீடு செய்து,  இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களுக்கான அரசு உத்தரவுகளை  பெற்றிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் எங்கள் இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து, இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.தேவசகாயம்,விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியர் திரு.பா.முருகன் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 06, 2026

சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் வைப்பாறு தடுப்பணை அருகே சாத்தூர் இன்னர் வீல் கிளப் (SATTUR INNER WHEEL CLUB ) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில், சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை  அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கடற்கரைராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (04.07.2026)   தொடங்கி வைத்தார்.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தோன்றும் நிசபா நதி, தேவியாறு, நகரியாறு, சீவலப்பேரியாறு மற்றும் காயல்குடியாறு ஆகிய சிற்றாறுகள் ஒன்றிணைந்து வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் வைப்பாறாக உருவாகின்றன. அங்கிருந்து விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பயணித்து வங்கக் கடலில் கலக்கின்றன. இந்நதி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.தற்போது சாத்தூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாகப் பாயும் சுமார் 2.50 கிலோமீட்டர் நீளமுள்ள வைப்பாற்றின் கரைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில், நீரோட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் திடக்கழிவுகளால் ஆற்றின் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு, வைப்பாற்றை தூய்மைப்படுத்துதல், சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுதல், ஆற்றங்கரைகளை சீரமைத்தல், மேலும் கரையோரங்களில் நாட்டுமரக் கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்குதல் ஆகிய பணிகளை சமூக நல நோக்கத்துடன் INNER WHEEL CLUB SATTUR என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம் சாத்தூர் பகுதியில் பாயும் வைப்பாறு தூய்மையான, இயற்கை வளம் மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆறாக மாற்றப்படுவதோடு, நீரோட்டம் மேம்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பெரும் பயன் கிடைக்கும்.அந்த வகையில் சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை  அகற்றிமரம் நட்டு பராமரிக்கும்  பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், செயற்பொறியாளர்(வைப்பாறு வடிநிலக் கோட்டம்) திருமதி மலர்விழி, சாத்தூர் நகர்மன்றத்தலைவர்  திரு.குருசாமி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 04, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் (03.07.2026) வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கூட்டுறவு,  உணவு  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வேளாண்மை – உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, மருத்தும் – மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித்  துறை, உயர்கல்வி துறை, இயற்கை வளங்கள் துறை,  நீர்வளத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, எரிசக்தி, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, மனித வள மேலாண்மைத் துறை  உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசு அலுவலர்களின் பங்கு இன்றியமையாதது. அவ்வகையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் துரிதமாக மக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது அலுவலர்களின் முதன்மை கடமையாகும். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணவேண்டும்.அனைத்து துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டமும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதையும், அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்னணு நிர்வாகம் மூலம் விரைவான சேவைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் மேலாண்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு, தூய்மை பணிகள் போன்ற பணிகளுக்கு அலுவலர்கள் முன்னுரிமை அளித்திட வேண்டும். மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும்.மேலும், பல்வேறுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை கண்ணியமாகவும், பொறுமையுடனும் கேட்டறிந்து அவர்களுக்கு புரியும் வகையில் அதற்கான உரிய தீர்வுகளை வழங்கி, நமது மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்ல பெயர் ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும். அதுபோல, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களில் தகுதியின்மை கண்டறியப்பட்டால் அதற்கான காரணங்களையும் விளக்கிக் கூற வேண்டும்.எனவே, அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக திகழ வேண்டும் எனத் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) ராஜசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திருமதி சசிகலா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கோட்டாட்சியர்கள், அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 04, 2026

உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.தற்போது,  இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.06.2026-லிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்  இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (மாவட்ட ஆட்சியர் வளாகம்,  5வது தளம் - அறை எண் 505-இல்) உரிய ஆவணங்களுடன் 15.07.2026-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jul 03, 2026

நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் (02.07.2026) கள ஆய்வு மேற்கொண்டார்.மல்லாங்கிணறு பேரூராட்சியில் சாலைகள் ஒருங்கிணைப்பு திட்டம் 2025-2026 (CRIDP 2025-2026) திட்டத்தின் கீழ், ரூ.39.95 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்குரிய வளங்களாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வளம் மீட்பு பூங்காவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மல்லாங்கிணறு பேரூராட்சியில் மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியினை பார்வையிட்டு மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள் மற்றும் விடுதி வளாகத்தின் தூய்மை குறித்து, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் அளவு குறித்தும், மாணவர்களுக்குத் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சரியாகச் சென்றடைகிறதா என்பது குறித்தும், சமையல் கூடம் மற்றும் பாத்திரங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சுழி சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவேடு, கல்வித்திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் குறித்தும், பள்ளி வகுப்பறைகளின் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை குறித்தும், மேலும், திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புப் பதிவேடுகள் (Stock Registers) குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்  2025-26 ன் கீழ், ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதனையும் வேளாணூரணி ஊராட்சியில், பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா (PMKKY 2025-26) திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்ட எல்லையான நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்திலிருந்து, இராமநாதபுரம் மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்திற்கு சாலை வசதி செய்து தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன், I A S., அவர்கள் ஆகியோர் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 03, 2026

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் விபி-ஜி-ராம் ஜி (VB-G RAM G- Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission Gramin) அறிமுகக் கூட்டம்.

'வளர்ச்சி அடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்' மாவட்டம் முழுவதும் தொடங்குவதை முன்னிட்டு, திட்டப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான அறிமுக மற்றும் விளக்கக்கூட்டம்  (02.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக, தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களுடன் இந்த 'விபி-ஜி ராம் ஜி' திட்டம் ஜூலை 1, 2026 முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.  மக்களுக்கு நேரடியாக வாழ்வாதார உத்தரவாதம் வழங்கும் இந்த விபி-ஜி ராம் ஜி திட்டத்தை அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாளர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். பழைய திட்டத்தை விட இதில் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும்.  இத்திட்டமானது, கணினிப் பதிவேற்றம் முதல் களப்பணிகள் வரை அனைத்திலும் துல்லியத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இருக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.  தினசரி குறைந்தபட்ச ஊதியமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், விவசாய பருவ காலம் தவிர்த்து மற்ற காலங்களில் பணிகள் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு, ஏரிகள் தூர்வாருதல், கிராமப்புறச் சாலைகள் மற்றும் வாழ்வாதார உள்கட்டமைப்புகள் போன்ற பணிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தரமாகவும், கிராமத்திற்குப் பயனுள்ள நிரந்தரச் சொத்தாகவும் மாறுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, இந்த திட்டத்தை அனைவரும் இணைந்து நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட களப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 03, 2026

மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுவாணையம்(TNPSC),தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், இந்த அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும்  வை-பை (Wifi) வசதியுடன் கூடிய கணினி ஆய்வகமும் உள்ளது.இரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட  ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய உதவி லோகோ பைலட் (RRB ALP(Assistant Logo Pilot) தேர்வுக்கான இலவச வகுப்பு 08.07.2026 (புதன் கிழமை) முதல் விருதுநகர்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இலவசப் பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இலவசப் பாடக்குறிப்புகள் வழங்கி பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகளும் நடைபெறவுள்ளது.இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/rzTqHEiU8yigdCGp6 என்ற இணைப்பு (Google Link) மூலமாகவோ அல்லது  studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.எனவே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய உதவி லோகோ பைலட் RRB ALP(Assistant Logo Pailet) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2026

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்றும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்றும் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்று 7 மையங்களிலும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்று 14 மையங்களிலும் நடைபெறவுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான முதல் தாளினை விருதுநகர் மாவட்டத்தில் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 266 தேர்வர்களும், சொல்லுவதை எழுதுபவர்கள் (Scribes) 6 நபர்களும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  300 தேர்வர்களும், 40 மாற்றுத்திறனாளிகளும்,விருதுநகர்  நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 289 தேர்வர்களும், 09 மாற்றுத்திறனாளிகளும்,  சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும்,  அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கன்னட மொழிக்கு ஒரு தேர்வரும், தமிழ் மொழிப் பாடத்திற்கு 177 தேர்வர்களும் என ஆக மொத்தம் 7 மையங்களில் 1933 தேர்வர்களும், 49 மாற்றுத்திறனாளிகளும், 06 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) முதல் தாளினை எழுத உள்ளனர்.அதனைத் தொடர்ந்து, 05.07.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் தாளினை விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 268 தேர்வர்களும், சொல்லுவதை எழுதுபவர்கள் (Scribes) 8 நபர்களும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 284 தேர்வர்களும், 04 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், 40 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் 277 தேர்வர்களும், 17 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எத்தில்ஹார்வி மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 223 தேர்வர்களும், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 262 தேர்வர்களும், 02 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) திருத்தங்கல் எஸ்.என்.ஜி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 270 தேர்வர்களும், 30 மாற்றுத்திறனாளிகளும், திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  சிவகாசி கார்நேசன் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், சிவகாசி எஸ்.எச்.என்.வி.மேல்நிலைப்பள்ளியில் 245 தேர்வர்களும் என ஆக மொத்தம் 14 மையங்களில் 3789 தேர்வர்களும், 87 மாற்றுத்திறனாளிகளும், 14 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) இரண்டாம் தாளினை எழுத உள்ளனர்.மேலும், தேர்வானது மாற்றுத்திறனாளிகள் மற்றும் சொல்லுவதை எழுதுபவர்களுக்கு (Scribes) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரையிலும், பிற தேர்வர்களுக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.மேலும், தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் போதிய அளவில் இருப்பதை மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எவ்வித அச்சமும், பதற்றமும் இன்றி முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S ., அவர்கள் தெரிவித்தார்.

Jul 02, 2026

இளம் பேரிடர் நண்பன்” - தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில்  (01.07.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர் நண்பன்”- தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த உறைவிட பயிற்சி வகுப்பானது, விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறுகிறது.இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாக, உள்ளூர் மக்களும் இளைஞர்களுமே முதல் மீட்பர்களாகச் (First Responders) செயல்படுகின்றனர். பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதத்தைக் குறைக்கவும், துரிதமாகச் செயல்படவும் இதுபோன்ற பயிற்சிகள் பெரிதும் உதவும். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் “இளம் பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் NCC, NSS. My Bharath தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இந்த உறைவிட பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டு 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறுகிறது.விருதுநகரில் நடைபெற்று வரும் இப்பயிற்சி வகுப்பில் 102 ஆண்கள் மற்றும் 74 பெண்கள் என மொத்தம் 176 தன்னார்வலர்களும், சிவகாசியில் 146 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் என மொத்தம் 200 தன்னார்வலர்களும் என ஆக மொத்தம் 376 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில், பெருவெள்ளம், புயல், நிலநடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற அவசரக் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்முறை விளக்கங்கள் குறித்தும், காயமடைந்தவர்களுக்கு அடிப்படை முதலுதவி (First Aid) மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும்போது சி.பி.ஆர் (CPR) சிகிச்சை அளிக்கும் முறைகள் கற்றுத்தரப்படுகின்றன.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் இந்தியச் செஞ்சிலுவை சங்க (Red Cross) வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. மீட்புப் பணிகளுக்கான கயிறுகள் கட்டுதல், மிதவைகளை உருவாக்குதல் மற்றும் எச்சரிக்கை தகவல் தொடர்பு சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, இளம் பேரிடர் நண்பர்களாகப் பயிற்சி பெறும் நீங்கள், முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு உங்கள் பகுதிகளில் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உறுதுணையாகவும், இந்த பயிற்சி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வல்லுநர் (தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், சென்னை) டாக்டர்.முருகானந், வட்டாட்சியர் திரு.ராஜாமணி, கல்லூரி முதல்வர் முனைவர் சாரதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 01, 2026

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கஞ்சம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 141 142

AD's



More News