25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 03, 2024

விருதுநகர் மாவட்டம் சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஏற்றுமதிக்கான பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிகர் இணைப்புக்கூட்டம்

விருதுநகர் அம்பாள் கிராண்ட் ஹோட்டல் அரங்கத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடைபெற்ற சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஏற்றுமதிக்கான பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிகர் இணைப்புக்கூட்டத்தினை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை முதன்மை செயலாளர்/ஆணையர் திரு.ஜி.பிரகாஷ்.,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் ஆகியோர் (01.10.2024) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்குவகிக்கின்றது. பல்வகை காலநிலை மண்டலங்களை கொண்ட தமிழகத்தில், மிதவெட்பமண்டல பயிர்களான கிராம்பு, மிளகு, ஏலக்காய், பூண்டு, மற்றும் வெட்பமண்டல பயிர்களான மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மஞ்சள், இலவங்கபட்டை போன்ற நறுமணப்பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மிளகு மற்றும் ஏலக்காய் உற்பத்தியில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும், கிராம்பு, ஜாதிக்காய் உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் திகழ்கின்றது. இந்தியாவின் மொத்த நறுமணப்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின்  பங்கு 21 சதவிகிதம் ஆகும்.2023-24 ஆம் ஆண்டில், சுமார் 3,23,749 டன் அளவுடைய மிளகாய், மஞ்சள், சீரகம், மிளகு, ஏலக்காய், வெந்தயம் மற்றும் கிராம்பு ஆகிய நறுமணப்பொருட்களை தழிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, கிராம்பு, இராமநாதபுரம் முண்டுவத்தல், கொடைக்கானல்  மலைபூண்டு, ஈரோடு மஞ்சள் போன்ற நறுமணப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. நறுமணப்பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்திய நறுமணப்பொருட்கள் வாரியம்.விவசாயத்திற்கு உண்டான எதிர்காலம் இன்னும் வருகின்ற காலத்தில்  நாம் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியில் இருக்கப் போகிறது. விவசாயத்துறை பொறுத்தவரையில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு உண்டான அனைத்து விதமான மூல காரணிகள் தயாராக உள்ளது.விவசாய பொருட்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுகளுக்கு சென்ற ஏற்றுமதி பொருட்கள் 10 வருடத்தில் ஒரு இலட்சம் கோடி ஆகும். மேலும் 2023-2024 ஆண்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த விவசாய பொருட்கள் மதிப்பு ரூ.2.40 இலட்சம் கோடி ஆகும். பத்து வருடங்களில் ரூ.1.40 இலட்சம் கோடி  அளவிற்கு கூடுதலாக வளர்ந்து இருக்கிறது. இது ஒரு பெருமைக்குரிய ஒன்றாக இருக்கிறது.இதில் கணிசமான அளவு 15 சதவீதம் பங்கு தமிழக மாநிலத்தைச் சார்ந்தது என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமாக பார்க்க முடிகிறது.ஒரு துறை வளர வேண்டும் என்றால் ஏற்றுமதி மிக முக்கியம். ஏற்றுமதி பொருளாதாரம் எந்த துறையில் இருக்கிறதோ அந்தத் துறை தான் கட்டுக்கடங்காத ஒரு வளர்ச்சியும், ஒரு அசுரத்தனமான வேகமும் கிடைக்கும். விவசாயத்துறையில் உள்ள அங்க உறுப்பினர்களான விவசாயிகள், வியாபாரிகள், சந்தைப்படுத்துபவர்கள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள் இதுபோன்ற நிறைய பேர் சேர்ந்து தான் இந்த அமைப்பு.இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியில் அனைவரும் நலமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அந்நிய செலவாணிகள் மூலம் விவசாயத்தில் பல்வேறு விதமான புதிய யுத்திகளை கொண்டு வந்து, விவசாயிகளுக்கு லாபத்தை அதிகம் ஆக்குவதற்கு என்னென்ன அடிப்படையான பணிகள் செய்ய வேண்டுமோ அதற்குரிய புதிய கற்பிதங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.காலத்தினுடைய போக்கிலே இன்னும் நிறைய வளர்ச்சிகள் வந்தாலும் கூட, அதை வேகப்படுத்துவது தான் வேளாண்துறை அலுவலர்களுக்குரிய முக்கிய வேலை. அதை உன்னிப்பாக கவனித்து, கிரகித்து என்னென்ன வேலைகளை களத்தில் செல்ல செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டியது விவசாயிகளுடைய பணி. இதை முறையானபடி சந்தைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற தொழில் நுட்பங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது அலுவலர்களது பணி. இது போன்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பணிகள் இருக்கின்றது.பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தாத இயற்கை முறையிலும், தரமான முறையிலும் விவசாயம் செய்து ஒரு பொருளை எடுத்தாலே அதனுடைய மதிப்பு அதிகம்.வேளாண்மை விற்பனைத்துறை மூலமாக மதுரை மல்லி, வத்தல், கிராம்பு உள்ளிட்ட 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு உள்ளதால் அந்த பொருள்களுக்கு உண்டான பொருளாதார மதிப்பு அதிகமாகிறது என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்தியாவில் மட்டுமே நறுமண பொருட்கள் அதிகம் விளைகின்றன. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலக சந்தைகளில் நம்முடைய பொருட்களை சந்தைப்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ச்சியாக நம்முடைய வரலாறு முழுமைக்கும் இந்தியா குறிப்பிட்ட ஒரு 8 பொருள்களில் உலக அளவில் தொடர்ச்சியாக ஒரு ஏற்றுமதியை கடந்த சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்து வருவது நமது வரலாற்று பக்கங்களிலிருந்து பார்க்க முடிகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் விளைவிக்கக்கூடிய கொடைக்கானல் மலைப்பூண்டாக இருக்கட்டும், கிராம்பாக இருக்கட்டும், வத்தலாக இருக்கட்டும் அதற்கு இந்தியா முழுமைக்கும் மேற்கு நாடுகளிலும், கிழக்கு மத்திய நாடுகளிலும் இன்னும் தேவை இருக்கிறது. இந்தியாவில் ஏற்றுமதி ஆகக்கூடிய மொத்த பொருட்களில் நான்கில் ஒரு பங்கு தமிழ்நாடு தான் முக்கிய பங்கு வைக்கிறது. அதில் சில தயாரிப்புகளில் இந்திய அளவில் அதிகமான ஏற்றுமதியை நமது மாநிலம் செய்து  வருகிறது.இந்தத் துறையில் அடுத்து வரக்கூடிய ஒரு 50 ஆண்டுகள் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடுவதற்கு தயாராக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது சமைப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய உணவுப் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளில் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது. 2030 அல்லது 2050-ம் ஆண்டுகளில் மொத்த உணவு தேவைகளில் 50 அல்லது 60 விழுக்காடு, சாப்பிடுவதற்கு தயாராக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது சமைப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய உணவுப் பொருட்களாக தான் இருக்கும் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது.எனவே இதற்கு மிக அடிப்படையாக இருக்கக் கூடியது சுவை, தாளித மற்றும் நறுமண பொருட்கள். எனவே இன்னும் நமது பகுதியில் குறிப்பாக இந்த கரிசல் பூமியான குறிப்பாக ராமநாதபுரத்தினுடைய பகுதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு பகுதிகளிலும் குண்டு மிளகாய் வத்தலின் உற்பத்தி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் தொடர்ச்சியான நமது செயல்பாடுகளின் காரணமாக உற்பத்தி செய்வதற்கும், உலகம் முழுவதும் சந்தைப்படுத்துவதற்கும் மிக பெரிய வாய்ப்பு உள்ளது.எனவே இங்கு வருகை தந்திருக்கக் கூடிய வணிகர்கள், வேளாண் உற்பத்தியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், இதில் ஏற்படக்கூடிய நவீன மாற்றங்களையும், அடுத்து வரக்கூடிய அரை நூற்றாண்டுகளுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தருகிறது என்பதையும், நாம் புரிந்து கொண்டால் நிச்சயமாக இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார வளர்ச்சி ஏழை எளிய விவசாயிகளுக்கு நாம் அனைவரும் கொண்டு செல்ல முடியும். வர்த்தகர்களுக்கும் கொண்டு செல்ல முடியும். வணிக பொருளாதாரத்திலும் பெரிய வாய்ப்புகளை பெற முடியும் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியின் போது வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே 20-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார்  அம்மாள், தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரநிதிகள் என சுமார் 300 நபர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Oct 03, 2024

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்து இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  (01.10.2024) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பையும், முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2111 நபர்களுக்கு ரூ.42.96 இலட்சம் மதிப்பிலான பரிசுகளையும் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம், ஆவின் விற்பனை நிலையம் அமைத்தல், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.22.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.38 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும் என ஆக மொத்தம் ரூ.3.95 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளுக்கு 478 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சிகளுக்கு 338 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 204 ஊராட்சிகளுக்கு 300 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளுக்கு 183 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு என மொத்தம்  923  ஊராட்சிகளுக்கு 1299  கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்புகளை வழங்கிடும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக  தொடங்கி வைத்தார்.கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தின் கீழ், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த  ஊராட்சி மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஏனென்றால்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், என்னை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமித்த பிறகு, சென்னைக்கு வெளியே நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. துணை முதலமைச்சராக நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சியும் இது தான்.கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தை மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தோம்.  அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துக்களுக்கும்,, ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறோம். இதுவரை தமிழ்நாடு முழுக்க 18 மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கி இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தென் மாவட்டங்கள் என்றாலே வீரத்துக்கு பேர் போன மாவட்டங்கள். வீரத்தில் மட்டுமல்ல, வீரமிக்க விளையாட்டுக்களிலும் தலைசிறந்த மாவட்டங்கள். குறிப்பாக விருதுநகர், கோவில்பட்டி, பாளையங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான திறமைமிகு விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள்.நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் விளையாட்டினை, மாபெரும் இயக்கமாகவே மாற்றியுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கென 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 5 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சென்றாண்டு, 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு 11 லட்சத்து 56 பேர், பங்கேற்றுள்ளனர். இதுவே, இந்த போட்டியின் வெற்றியைப் பற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.தமிழ்நாட்டின் பட்டித்தொட்டிகளில் இருந்து, தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத் தொகையை, நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 37 கோடி ரூபாயாக உயர்த்தித் தந்திருக்கிறார்கள். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கு,  இங்கே பரிசுகளை வழங்கி இருக்கின்றோம். இந்த நிகழ்ச்சிக்குக் கூட, நிறைய விளையாட்டுத் துறைச் சாதனையாளர்கள் வந்திருக்கிறார்கள்.கன்னியாகுமரி  மாவட்டத்தைச் சேர்ந்த,,  ‘Fencing’ வீர்ர் தம்பி ஜிஷோ நிதி,, இங்கே வருகை தந்திருக்கிறார். தம்பி ஜிஷோ நிதி, லண்டனில் நடைபெற்ற Common wealth Fencing Championship-ல் பங்கேற்று வெண்கலம் வென்றவர். குஜராத், பஞ்சாப், கோவா, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும்,, 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார். இன்றைக்கு இந்திய இராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை செய்து வருகிறார்.பலருக்கும் முன் மாதிரியாக திகழும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் , பாராட்டுகள்.அதே போல, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த Basket Ball  வீராங்கனை தங்கை சுந்தரி இங்கே வருகை தந்திருக்கிறார். 38- வது National Youth Basketball Championship-ல் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டு அணியில் இடம்பெற்றவர். விளையாட்டுத்துறையில், சாதிக்கத் துடிக்கும் மகளிருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சாதனைகளை படைத்து வரும் அவருக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு பேர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள், உலக அளவில் பல்வேறு சாதனைகளை, தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன்பு, ஹங்கேரியில் நடந்த, 45-ஆவது FIDE Chess Olympiad  போட்டியில்,  இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கங்களை வென்றது. தங்கம் வென்ற இந்திய செஸ் அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் தம்பி குகேஷ், பிரக்ஞானந்தா, ஸ்ரீநாத் நாராயணன், தங்கை வைஷாலி ஆகியோர், இடம்பெற்று சிறப்பான பங்களிப்பைத் தந்தனர்.அவர்களுக்கு நம் முதலமைச்சர் அவர்கள், மொத்தம் 90 இலட்சம் ரூபாயை, உயரிய ஊக்கத்தொகையாக வழங்கினார்கள். அதே போல, பாரீஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். அந்த ஆறு வீரர்களுக்கும், போட்டிக்கு செல்வதற்கு முன்பாகவே நம் முதலமைச்சர் அவர்கள் தலா 7 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கினார்கள். அவர்களில் பதக்கம் வென்ற 4 பேருக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் அளவுக்கு நம் முதலமைச்சர் அவர்கள் பரிசுத்தொகையை வழங்கினார்கள்.இந்த மூன்று வருடங்களில் மட்டும், நம் முதலமைச்சர் அவர்கள், கிட்டத்தட்ட 1,300 விளையாட்டு வீரர்களுக்கு, 38 கோடி ரூபாய்க்கும் மேலாக, உயரிய ஊக்கத்தொகையை வழங்கி இருக்கிறார்கள். அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் பல வருடக் கோரிக்கை. இந்த அரசு அமைந்த பிறகு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளின் பேரில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.ஏழை, எளிய, மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தொடர் உதவிகளை செய்து வருகிறோம். இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவிப் பெற விரும்புகின்ற விளையாட்டு வீரர்கள், TNCF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக பார்முலா- 4 இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தினோம். கடந்த ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளையோர் போட்டிகளை வரலாற்றிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடத்திக் காட்டினோம். கேலோ இந்தியா போட்டியில், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம்  என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதன் முறையாக பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல, அரசின் பல்வேறு துறைகளும் இன்றைக்கு மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்றன. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலித்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இது மட்டுமல்ல, நேற்றைய தினம், ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை சார்பில் நேற்று ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், இந்தியாவிலேயே அதிகளவில் வேலைவாய்ப்பை தரக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும், அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.இப்படி எல்லாத்துறைகளிலுமே, தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு, கிராமங்களில் இருந்து நிறைய விளையாட்டுத்துறை திறமையாளர்கள் வர வேண்டும். இதன் அடிப்படையில் தான் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரால், எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் விளையாட்டுத்துறை சார்பாக, முதல்முறையாக கலைஞர் அவர்களின் பெயரால் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், அது கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டம் தான்.ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்கக்கூடிய அத்தனை குணங்களும், திறமைகளும்,, கலைஞர் அவர்களிடம் இருந்தன. அதனால் தான், இந்த திட்டத்திற்கு கலைஞரின் பெயரை சூட்டினோம். எப்போதும் யாராலும் வீழ்த்த முடியாத ஓர் அரசியல் வீரராக, கலைஞர் அவர்கள் திகழ்ந்தார்கள். எனவே, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெறக்கூடிய இளைஞர்கள், கலைஞர் அவர்களுக்கு இருந்த அத்தனை குணங்களையும், திறமைகளையும், நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.இன்று கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை பெற வருகை தந்துள்ள, அத்தனை ஊராட்சிகளுக்கும், அந்த ஊராட்சிகளின் முகங்களான மாணவர்கள், இளைஞர்களுக்கும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று. மாவட்ட அளவில் வென்று பரிசுகளை பெற்றுள்ள வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். உங்களுக்கு நம்முடைய அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 ஊராட்சி மன்றங்களுக்கு 564 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்புகளை வழங்கும் விதமாக 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன், முதுநிலை மேலாளர்(தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) திருமதி ஜெ.பியூலா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள், நகர்மன்றத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், விளையாட்டு வீரார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Oct 03, 2024

விருதுநகர் மாவட்ட மக்கள் போலியான முகநூல் அல்லது இணையவழி பணம்கேட்டாள் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விருதுநகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி. கடந்த சில தினங்களாக நமது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கனவே இதுபோன்ற பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதன்மூலம் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டாள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.  மேலும் இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதாகவும் அதற்கு முன்பணம் கட்டவேண்டும் என்றோ, வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது.அதனை விமான நிலையத்தில் சுங்ககட்டணம் கட்டி வாங்கிக்கொள்ள பணம் அனுப்புமாரோ யாரேனும்; தொலைபேசி வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ யாரேனும் தொடர்புகொண்டாள் அதனை நம்பவேண்டாம். இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலையாகும்.எனவே விருதுநகர் மாவட்ட மக்கள் இதுபோன்ற போலியான முகநூல் அல்லது இணையவழி பணம்கேட்டாள் யாரும் நம்பி பணம்அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Oct 03, 2024

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதிகள்:ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),வேளாண்மை, சுற்றுச்சூழல், வனவிலங்கு உயிரியல், உயிரியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வு முறையானது முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிப்பதற்கு 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.பணிக்காலமானது 10 மாதங்கள் ஆகும். ஒரு காலிபணியிடம் மட்டும் உள்ளது. மாத சம்பளம் ரூ.20,000/- ஆகும்.விண்ணப்பங்களை climatechangemission.vnr@gmail.com    என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு மாவட்ட ஆட்;சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 01, 2024

விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில்  (30.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த 3 மனுதாரருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியம் மூலம் மாவட்டத்தில் உள்ள 1 பயனாளிக்கு ரூ.1500 மதிப்பில் மூக்குக் கண்ணாடி நிதியுதவியும், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.5000/- மதிப்பில் திருமண நிதியுதவிகளையும், 41 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.69,700/- மதிப்பில் கல்வி நிதியுதவிகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- மதிப்பில் ஈமச்சடங்குஃஇயற்கை மரண நிதியுதவிகளையும் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.2.05 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 01, 2024

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 நிகழ்ச்சிகள்

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது., மூன்றாம் நாளான 29.09.2024 அன்று துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.,இ.வ.ப. அவர்கள் தலைமையில், வத்திராயிருப்பு திரு.தெ.சு.கவுதமன்  அவர்கள் எழுதிய  “அப்பாவின் வாசம்“ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும்,  பேச்சாளர் திரு.சி.அன்னக்கொடி அவர்கள் “கி.ராவும் நானும்” என்ற தலைப்பிலும், திரைப்படக் கலைஞர் மற்றும் இயக்குநர்  திரு.தம்பி ராமையா அவர்கள் “உறவுகள்”; என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள்.பின்னர், நடைபெற்ற சுழலரங்கம் நிகழ்ச்சியில், இலக்கியத்தில் மரபு குழுவில், திரு.கா.காளியப்பன் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும், இலக்கிய விமர்சகர் திரு.ம.மணிமாறன் அவர்கள் கரிசல் இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும், கவிஞர் திரு.அ.இலட்சுமி காந்தன்  அவர்கள் நவீன இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும்,இலக்கியத்தில் இயற்கை குழுவில், கவிஞர் திரு.எல்.கே.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும், திரு.முத்து பாரதி அவர்கள் கரிசல் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும், இயற்கை ஆர்வலர் ஆர்.ஆனந்தி அவர்கள் நவீன இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் திரு.க.ஜே.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரையும், கோட்ட வன அலுவலர் திரு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.

Oct 01, 2024

மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவில் (01.10.2024) அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்

மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024  முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு காலை 10.00 மணி  முதல் இரவு 09.00  மணி வரை நடைபெறவுள்ள விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன. இப்புத்தக அரங்கில், கலை, இலக்கியம், வரலாறு, சரித்திரம், சமூகம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், உலக தலைவர்களினுடைய வரலாற்று பதிவுகள், குழந்தைகளுக்கு அறிவை வளர்ப்பதற்கு தேவையான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம், தகவல் களஞ்சியம் (Encyclopedia), தமிழக  அரசினுடைய வேலைவாய்ப்புக்கான  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான (TNPSC Guide)  வழிகாட்டி புத்தகங்கள், IAS, IPS,  IFS-படிப்பிற்கான வழிகாட்டி புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பள்ளி புத்தகங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூ.10/- முதல் ரூ.1000/- வரையிலான புத்தகங்கள் ஆயிரக்கணக்கான தலைப்பில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட்டுள்ளது.  தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி, தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலை, அதில் வாழும் உயிரினங்கள் குறித்த கண்காட்சி அரங்கம், பழங்காலம் முதல் தற்போது வரை உள்ள நாணயங்கள் குறித்த கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காப்பிய பூங்கா உள்ளிட்ட விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழாவில் மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், கவிஞர்கள், முனைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அரங்கு, கருத்தரங்கு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 01.10.2024 அன்று திரு.பி.கே.பெரியமகாலிங்கம் அவர்கள் எழுதிய ரகசியம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், நாவலாசிரியர் திருமதி அ.வெண்ணிலா அவர்கள்  “மரமும் மாதரும்” என்ற தலைப்பிலும், முதுநிலை உதவி ஆசிரியர் இந்து தமிழ் திசை நாளிதழ் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் “குழந்தை இலக்கியத் தடத்தில்” என்ற தலைப்பிலும், கவிஞர் திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் “மண் பயனுறவேண்டும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். 02.10.2024 அன்று திரு.கா.சி.தமிழ்க்குமரன் அவர்கள் எழுதிய “மந்தைப் பிஞ்சை” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்கள் “மனிதர்களும் மரங்களும்” என்ற தலைப்பிலும், பேச்சாளர் திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் தாயினும் சாலப்பரிந்து என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மேலும் படைப்புலகில் பெண்கள் என்ற தலைப்பில் நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சூ.பாமா, திருமதி ர.ரமாதேவி, திருமதி பிருந்தா ஜ.ராகவன் அவர்கள் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென  மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S,  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

Sep 30, 2024

மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா-2024- வினை அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள்

மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் (27.09.2024) அன்று "மரமும், மரபும்"- என்ற பொருண்மையின் கீழ், நடைபெற்ற விருதுநகர் மூன்றாவது புத்தக திருவிழா-  2024- னை  மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்  அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மற்றும் துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்,இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்கு வகுக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024  முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு  புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.  இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன.நீங்கள் அனைவரும் புத்தகங்களை படிக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை ஆரம்பிப்பதே புத்தகங்களில் இருந்து தான். அறிவு வளர வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகங்களில் தான் ஒவ்வொரு தனிமனிதனுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றாற்போல புத்தகங்களை வடிவமைத்து இருப்பார்கள். அதனை பார்க்கும் நேரத்தில்  நமக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும். நமக்கு நல்ல அறிவு வளரும். நாம் பிறரிடம் பேசும் பொழுது நாம் அறிவாளியாக, திறமையானவனாக காட்ட வேண்டும் என்றால் புத்தகத்தை வாசித்தால் மட்டும் தான் அது நடக்கும்.  எனவே, அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.புத்தகத் திருவிழாவானது இன்றைக்கு மாபெரும் இயக்கமாக மாறி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும்   பெரும் முயற்சியோடு  மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற  இந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் படைப்பாளிகளுக்கான பெரும் மரியாதை இன்று கிடைத்திருக்கிறது. கரிசல் இலக்கியத்தினுடைய வேறாக இருக்கக்கூடிய கி.ரா. அவர்கள் மறைந்த பொழுது, யாரும் கேட்காத வகையில் கூட அவருக்கு முழு அரசு மரியாதையோடு அவரது இறுதிப் பயணத்தை செய்தவர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுத்தாளர்களுக்காக அறித்திருக்கக்கூடிய கனவு இல்லம் திட்டம், பல்வேறு எழுத்தாளர்களை கௌரவிக்கக்கூடிய திட்டங்கள், இவை எல்லாம் தமிழ்நாட்டினுடைய இலக்கிய மரபில் புதிதாக வரக்கூடிய எழுத்தாளர்களுக்கும், இந்த எழுத்துக்களின் ஜாம்பவான்களுக்கும்,   ஒளி விளக்கை அவர் மீது பாய்ச்சக் கூடிய நடவடிக்கையாக இருக்கிறது."மரமும், மரபும்"; என்ற தலைப்பில் அதை எடுத்துக் கொண்டு, சூழலிலும் தொன்மையும் ஒருங்கிணைந்திருக்கக் கூடிய அந்த பொருண்மையின் அடிப்படையில் இந்த புத்தகத் திருவிழாவை கட்டமைத்திருக்கிறார்கள்.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இந்த இரண்டு விஷயங்களில்  மிகப்பெரிய செல்வத்தை  நாம் பெற்று இருக்கிறோம். திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், அது ஒரு காலத்தில் காப்புக்காடுகளாக இருந்த பகுதிகள் கூட சாம்பல் நிற உயிர்கள் சரணாலயமாக மாற்றப்பட்டு இன்று புலிகள் காப்பகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நம்முடைய மேற்கு மலை தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இருக்கக்கூடிய தாவரங்கள், வன உயிரினங்கள், ஊர்வன    வகைகள் குறித்து இந்த புத்தக திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இமயமலைக்கு முன்பாகவே உருவாகி இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலை என்ற பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். அங்கு வேறெங்கும் காணப்படாத உயிர்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் நிலப்பரப்பு எத்தனையோ கோடிகள் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகி இருக்கலாம். இதே விருதுநகர் மாவட்டத்தினுடைய கிழக்குப் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்திருக்க கூடிய ஆவியூர் என்கின்ற கிராமம். அங்கே தான் பழைய கற்காலம் என்று சொல்லக்கூடிய பேலியோலித்திக் அங்கே வாழ்ந்த மக்களால் உபயோகிக்கப்பட்ட ஒரு கற்கால கருவியை ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி.முன்னொரு காலத்தில் நாகரிகத்தினுடைய தொட்டில் வெம்பக்கோட்டை  வைப்பாறாக  இருந்திருக்கின்றது.  கீழடி நாகரீகம் உருவாகுவதற்கு முன்பாகவே கூட நம்முடைய வைப்பாற்றிலே, அது உருவாகி இருக்கிறது. பெருங்ககற்காலத்தினுடைய ஈம சின்னங்கள், வரலாற்றுக் கால சின்னங்கள் இவையெல்லாம் தொடர்ச்சியாக வரலாற்றில் இடம் பெறக்கூடிய ஒரு மாவட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய விருதுநகர் மாவட்டம். அந்த விருதுநகர் மாவட்டத்தின் உடைய தொன்மையை, அதனுடைய வரலாற்றை, நாம்  குறிப்பிடக்கூடிய அந்த காலம் தொடங்கி அண்மைக்கால வரலாறு வரை நிறைந்திருக்க கூடிய இந்த விருதுநகர் மாவட்டத்தின் உடைய செழுமையை, அதனுடைய தொன்மையை, மரபை அதனுடைய சூழலியல் தொன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டு கூடிய வகையில் மிகச் சிறப்பாக இந்த புத்தகத் திருவிழாவை நம்முடைய மாவட்ட நிர்வாகம் வடிவமைத்து உள்ளது.இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய புத்தகங்கள் நம்முடைய அறிவு கண்களை திறப்பதாக இருக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது . தமிழ்நாடு எங்கும் இன்றைக்கு ஒரு மாபெரும் அறிவு புரட்சியை நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த அறிவு புரட்சி என்பது இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நாம் கங்கை கொண்டாம்,  கடாரம் கொண்டோம், நம்முடைய சோழ மன்னர்களுடைய படையெடுப்பு கீழ் திசை நாடுகளில் இருந்திருக்கிறது அல்லது ரோம் நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் நம்முடைய கொற்கை முத்துக்களை வாங்கி ரோம் நாட்டினுடைய பொருளாதாரமே போய்விட்டது. அகஸ்டியஸ் காலத்தில் பாண்டிய தூதுவர் சென்றிருக்கிறார் என்றெல்லாம் நாம் சொல்லிக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று சிந்தனை மரபு, தத்துவ மரபு. இந்த தத்துவ மரபுதான் மேல்திசை நாடுகளுக்கும், கீழ் திசை நாடுகளுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு வேறுபாட்டை விளக்கக்கூடிய ஒன்று. சென்னையில் இருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்குகின்ற போது அந்த நூலகத்தினுடைய நுழைவாயிலே என்ன வாசகத்தை பொறிக்க வேண்டும் என்ற போது அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், புத்தகத்தில் உலகத்தை படிப்போம், உலகத்தையே புத்தகமாக படிப்போம் என்று அன்றைக்கு அவர்கள் எழுதியது தான் இன்றைக்கு இருக்கிறது.  புத்தகங்கள் உங்கள் கையில் இருக்கக்கூடிய ஆயுதங்கள். அறிவு சுரங்கங்கள். மாணவச் செல்வங்களும் வந்திருக்கக்கூடிய புத்தக ஆர்வலர்களும் இலக்கிய நண்பர்களும் இந்த விழாவை திறன் பட பயன்படுத்திக் கொண்டு சிறந்திட வேண்டும்  எனவே இந்த புத்தகத் திருவிழாவிற்கு அனைத்து பொதுமக்களும் வருகை தர வேண்டும் என மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கு மரம் வடிவிலான நினைவு பரிசினையும், விரு அமைப்பிலான இலட்சினையும், புத்தகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், திருச்சுழி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.பொன்னுத்தம்பி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 30, 2024

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 இரண்டாம் நாவிருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 இரண்டாம் நா

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்களால்    துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.அதன்படி, இரண்டாம் நாளான 28.09.2024 அன்று மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கே.அசோகன் அவர்கள் முன்னிலையில்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  திரு.தெ.கண்ணன்,த.கா.ப.,  அவர்கள் தலைமையில், திருமதி புல்வை செல்வ மீனாள் அவர்கள் எழுதிய அறுகு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், பேச்சாளர் திரு.ஜோ.அருள் பிரகாசம் அவர்கள் “தமிழ்-மரபும் மண்ணும்” என்ற தலைப்பிலும், பேராசிரியர் சிவகாசி திரு.மு.ராமச்சந்திரன் அவர்கள் “மானுடக் காவல்” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற நடுவர் மற்றும் திரைப்படக் கலைஞர் திரு.மதுரை முத்து அவர்கள் “புத்தகமும் புன்சிரிப்பும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இன்றைக்கு  இந்த சமுதாயத்தில் புத்தகங்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு நாளும் பல்வேறு விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி சொல்லிக் கொடுத்து கொண்டே இருக்கின்ற போதுதான்  மரமும் மரபும் எப்படி வந்தது என்று அறிய முடிகிறது.முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது போன்ற கொடை தன்மை கொண்ட பல்வேறு விஷயங்களை நாம் கேட்டிருக்கிறோம்.  இதற்கு கொடை மடம் என்று சொல்வதுண்டு. ஒரு கொடை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தான் எந்த பெரிய பதவியில்  இருந்தாலும் கூட அதை எல்லாம் மறந்து, அந்த குறையை போக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உதிக்கும். அது மட்டுமே ஒரு நோக்கமாக  இருக்கும்.நம் மரபிலே வந்த சொற்கள் மாறுகிறது. நம் மரபிலே வந்த பழக்கவழக்கங்கள் மாறுகிறது. விஞ்ஞானம் தேவை என்று இல்லை நமது பண்பாட்டை நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் மரபும் நம் மண்ணும் எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் நம்மை  மனிதனாக வழிநடத்திக் கொண்டு  இருக்கிறது.தற்போது  இந்தியாவின் புகழ் உலகெங்கும் பரவுகிறது என்றால் அது அறிவும் படிப்பினால் தான். காற்று  இருக்கிறது. அது பூவோடு சகவாசமாக வைத்தால் அது அதற்கு பெயர் வாசம். புல்லாங்குழலோடு சகவாசம் வைத்தால் அது ,சை. நம் மூக்கோடு சகவாசம் வைத்தால் அதற்கு பெயர் மூச்சு. சாக்கடையோடு சகவாசம் வைத்தால் அதற்கு பெயர் நாற்றம். நீங்கள் யாரோடு சகவாசம் வைக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கான பெயர் தீர்மானிக்கப்படும் நல்ல புத்தகங்களோடு சவகாசம் வையுங்கள் நலம் பெறுவீர்கள் என தெரிவித்தார்.எந்த ஒரு பேதமும் இல்லாமல், எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்  காக்கின்ற இயற்கை அழகு ஒன்று  இருக்கிறது. ஒரு இயற்கையின் சீதனம் ஒன்று இருக்கிறது. அதற்கு சம்பளமோ, பாராட்டிப் பேசவோ, அதை உயர்த்தி வைத்து கொண்டாட வேண்டாம். குறைந்தது வேரில் தண்ணீர் ஊற்றினால் போதும் அதற்கு பெயர் தான் மரம்.மனிதர்கள் மானுடத்தை காக்க வேண்டும் என்றால் கூட ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சம்பளம் கருதி வேலை பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கருதாமல் இந்த மானுடத்தை காப்பது மட்டுமே நமது குறிக்கோளாக வைத்துக் கொண்ட , ஓரறிவு உயிர் மரம்.அந்த மரத்தால் மழை வருகிறது. அந்த மழையால் உலகம் இயங்குகிறது. மரம் மானுடத்தை காப்பதற்காக இறைவன் அனுப்பி வைத்த சீதனம். மரத்தை பாதுகாப்பதே தமது இலட்சியமாக உள்ளவர்கள் இருக்கிறார்கள். மரம் நடுவது என்பது நாம் பூமித்தாய்க்கு செய்கின்ற கைமாறு. ஒரு மரம் நட்டால் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்.மரம் மானுடக்காவல், மரத்தின் மூலம் கிடைக்கும் மழை மானுடக்காவல். மரத்தால் கிடைக்கும் காகிதம், அதனால் உருவாக்கப்படும் புத்தகம் மானுடக்காவல். இந்த புத்தகங்கள் மூலம் கிடைக்கின்ற கல்வி, அதன் மூலம் கிடைக்கின்ற அறிவு மானுடக்காவல். மானுடன் முழுமையும் காப்பது தான் மானுடக்காவல். கல்வி என்பது எனது மனதுக்குள் இருக்கக்கூடிய அத்தனை இருட்டுகளையும்  போக்குவதுதான்.பள்ளிக்கூடத்தில் படித்ததெல்லாம் மறந்த பின்னாலும்,  எது நினைவில் நிற்கிறதோ அதுதான் உண்மையான கல்வி. அந்தக் கல்விக்கு அடிப்படை புத்தகம்.  எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான மானுடக்கவால் என்பது, இந்த மானுட இனத்தில் இருக்கின்ற நல்ல மனிதர்கள், உத்தமர்கள், நேர்மையானவர்கள் தான் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் மற்றும் திரைப்பட கலைஞர் திரு.மதுரை முத்து அவர்கள் புத்தகமும் பொன் சிரிப்பும் என்ற தலைப்பில் பேசுகையில்:நூலகம் வைத்து வீடு கட்ட வேண்டும். சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும், நாம் நீண்ட நாள் வாழலாம். உயிருள்ள மனிதரை நீ நண்பராக்கிக் கொள்வதை விட உயிர் அற்ற புத்தகங்களை நண்பனாக ஆக்கிக் கொள். புத்தகத்தை விட ஒரு அழகான நண்பன் வேறு யாரும் கிடையாது.நூல் எழுதுவது என்பது நூல் மீது நடப்பதற்கு சமம் அந்த எழுத்தாளருக்கு. புத்தகங்களை படிக்கும்போது வரலாற்று சிறப்புமிக்க அந்த நபர்களோடு பேசுவதற்கு சமமானதை உணர்வீர்கள். எல்லா துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அடிப்படையான விஷயம் என்பது புத்தக வாசிப்பு.கைப்பேசிகளில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து, புத்தகங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு உதாரணங்களை கூறி நகைச்சுவை உணர்வோடு தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.என்.சூரியமூர்த்தி அவர்கள் வரவேற்புரையும், காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி பவித்ரா அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில்  ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Sep 30, 2024

விருதுநகர்  மூன்றாவது புத்தக திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி

விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, "மரமும், மரபும்"- என்ற பொருண்மையின் கீழ் நடைபெற்ற விருதுநகர்  மூன்றாவது புத்தக திருவிழா இரண்டாம் நாள்  (28.09.2024) நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் புத்தக கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 68 69

AD's



More News