மக்கள் பிரச்னையைப் பேசும் படம் , மாவீரன்
குடிசை மாற்று வாரியத்தின் தரமற்ற குடியிருப்புகளின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது கதைக்கரு. முதற்பாதியின் இறுதிபகுதியில் விஜய் சேதுபதியின் குரலில் வரும் வசனங்கள் ஆங்காங்க ரசிக்க வைக்கின்றன. கதை சொல்லும் பாணியிலான செந்தமிழ் வசனங்கள் கொண்ட வாய்ஸ் ஓவர்தான் ஐடியா என்பதால் அந்த மீட்டரிலிருந்து விலகாமல் விஜய் சேதுபதியிடம் தேவையானதை மட்டும் வாங்கியிருப்பது சிறப்பு.சென்னையின் கூவம் ஆற்றங்கரையில் தன் அம்மா(சரிதா) மற்றும் தங்கையுடன்(மோனிஷா) வாழ்ந்துவருகிறார் காமிக்ஸ் ஓவியரான சத்யா(சிவகார்த்திகேயன்). ஆற்றங்கரையில் உள்ள அம்மக்களை புதிதாகக் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாற்றுகிறது அரசு. ஊழலால் விளைந்த தரமில்லாத அந்தக் கட்டடத்தால் பல பிரச்னைகளை சத்யாவின் குடும்பமும் அம்மக்களும் சந்திக்கிறார்கள். இந்த ஊழலுக்குப் பின்னால் அமைச்சர் ஜெயக்கொடிதான்(மிஷ்கின்) இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டாலும், அமைச்சரையும் அவரின் ஆட்களையும் எதிர்க்க தைரியம் இல்லாமல் பயப்படுகிறார் சத்யா.ஒருகட்டத்தில் அம்மாவின் சுடுசொல்லால் தற்கொலைக்கு முயலும் சத்யாவின் காதிற்கு மட்டும் ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தக் குரல் சாமானியன் சத்யாவை எப்படி வீரன் , மாவீரன் ஆக்கியது,
தரமில்லாத குடியிருப்பில் வாழும் அம்மக்களை சத்யா காப்பாற்றினாரா, அந்த அமைச்சருக்கு இறுதியில் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு தன் கதைக்களத்தால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின். அப்பாவியான சத்யாவாகவும் மாஸான மாவீரனாகவும் கலக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தன் கலகல கவுன்ட்டர் உடல்மொழியைத் தவிர்த்து, தடுமாற்றம், பயம், நடுக்கம் என பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். குரல் உண்டாக்கும் குழப்பங்களின்போது வரும் முகபாவங்கள், அதுவே பின்னர் ஹீரோயிசமாக மாறும்போது வரும் ரியாக்ஷன் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கதாநாயகி அதிதி ஷங்கர் முதல் பாதியில் மட்டும் தலைகாட்டிவிட்டு, பின்னர் காணாமல் போகிறார். ஆனால், அந்த முதல் பாதி நடிப்பில் குறையேதும் இல்லை. அம்மாவாக சரிதா, சுயமரியாதை மிக்க, இறுமாப்பு கலந்த அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இனி நிறைய அம்மா ரோல்கள் அவரைத் தேடி வரலாம். தங்கையாக மோனிஷா பிளஸ்ஸிக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும் நடிப்பில் சிக்கல் இல்லை.அதேபோல், க்ளைமாக்ஸ் முன்னரே முடிந்த உணர்வைக் கொடுத்த பின்பும், கமெர்ஷியலாக கதையை நகர்த்திக்கொண்டே சென்றிருக்கின்றனர். இதனால் புதுமையான விஷயங்களும் சுவாரஸ்யமான விஷயங்களும் சிறுக சிறுக மறைந்துபோய் வழக்கமான `மசாலா ஹீரோ' கதையாக படம் முடிகிறது.
0
Leave a Reply