ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
குழந்தை திருமணத்தைத் தடுத்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கி. திலகம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில், குழந்தை திருமணம் சமூக முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும், இதனை எதிர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டிய அவசியம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இராஜபாளையம் கற்பக விருக்சா பிரிட்டிலிட்டி ரிசர்ஸ் சென்டர் சார்பில் டாக்டர். உமா மகேஸ்வரி அவர்கள், “குழந்தை திருமணத்தைத் தடுத்திட சமூகத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார். குழந்தை திருமணத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், இளம்வயது கர்ப்பம் காரணமாக மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நிலையில் வரும் சிறுமிகள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இராஜபாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர், இலக்கியவாதி மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் கவர்னர் திருமதி ஆனந்தி அவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக சூழலுடன் குழந்தைகள் பழகும் விதம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அதனால் ஏற்படும் வளர்ச்சி குறித்தும், பெண்கள் சாதனையாளர்களாக உருவாக வேண்டிய முயற்சிகள் குறித்தும் விளக்கினார்.
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆற்றுப்படுத்துனர் திரு. ராஜேஷ் விமல் தாஸ் அவர்கள், குழந்தை திருமண சம்பவங்களில் புகார் அளிக்கும் வழிமுறைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் விளைவுகள், மாவட்ட அளவில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், உதவி எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து, திருமதி கயல்விழி, தலைமைக் காவலர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அவர்கள், குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் காவல்துறையின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
வழக்கறிஞர் பா. ராஜகோபால், இயக்குனர், சைமா அறக்கட்டளை, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டினார். பேஸ்புக், வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களை விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி, குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்துகளை எழுத்து நடையில் பகிர்வதன் மூலம், இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
இந்த கருத்தரங்கில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் தங்களது பங்கை உறுதியாக ஏற்கும் வகையில் விழிப்புணர்வு பெற்றனர்.
இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பை திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி. கலையரசி, திருமதி. கற்பகம் மற்றும் திருமதி. அழகு ராணி ஆகியோர் செய்திருந்தனர்.
0
Leave a Reply