மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா-2024, நிறைவு நாள் நிகழ்ச்சி
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் (10.10.2024) மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா-2024 நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த புத்தக திருவிழாக்கள் மாவட்டந்தோறும் தலைநகரங்களில் நடக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அதன்படி, 2021 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு, இந்த ஆண்டு மூன்றாவது புத்தகத் திருவிழா நமது விருதுநகர் மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த புத்தகத்தில் திருவிழா நடந்த 14 நாட்களாக பள்ளி குழந்தைகள், இளைஞர்கள், பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து புத்தகத் திருவிழாவை கண்டு களித்து இருக்கிறார்கள்.இந்த புத்தகத் திருவிழா கடந்த ஆண்டை ஒப்பிடுகின்ற போது, கடந்த ஆண்டு விட ஆயிரக்கணக்கான மக்கள் கூடுதலாக இதைக் கண்டு ரசித்திருக்கிறார்கள். விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததற்கு பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரவேண்டும் என்பதற்காக கடந்த மூன்று நாட்கள் மட்டும் புத்தகத் திருவிழா நீட்டிக்கப்பட்டது.
ஏறத்தாழ 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் புத்தக திருவிழாவினை கண்டுகழித்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு விற்பனையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன.ஆனால் புத்தகத் திருவிழாவினுடைய நோக்கம் என்பது புத்தகத்தினுடைய விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். புத்தகத்தினுடைய விற்பனை வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான தேவையாக இருந்தாலும், புத்தகத் திருவிழாவினுடைய நோக்கம் அந்த வணிக நோக்கம் மட்டுமல்ல.ஏனென்றால் புத்தகத் திருவிழாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடத்துவதை விட தற்பொழுது நடத்துவதற்கு தான் மிக அதிகமான தேவை இருக்கிறது. சென்ற தலைமுறைகளில் ஒவ்வொரு வீடுகளிலும் ஏதாவது ஒரு பத்திரிக்கையாவது வாசித்து கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒன்றை வாசிப்பது அவர்களின் தேவையாக இருந்தது. ஏனென்றால் அன்று கையில் கைபேசி இல்லை. இன்று கைப்பேசி தரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை பார்ப்பதற்கு நமக்கு உண்மையிலேயே நேரமில்லை.
இன்று கைபேசியில் உள்ள சிறந்த படங்களை பார்ப்பதற்கு நமக்கு நேரம் பத்தாது, அந்த அளவுக்கு படங்கள், சிறந்த படங்கள் இருக்கின்றன. ஆனால் இது போன்று இன்று எல்லாவற்றிற்குமே நமக்கு கைப்பேசி அவ்வளவு பெரிய வாய்ப்பாக இருக்கிறது.
ஒரு விசயத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அதற்கான தேவை மறைந்து விடுகிறது. இது மனித உடலின் அறிவியலும் அதைத்தான் சொல்கிறது. நமது உடலில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தாமல் தற்போது ஒரு தேவையற்றதாக இருக்கக்கூடிய வால் ஞானப்பல், குடல்வாழ் ஆகியவையே அதற்கு உதாரணம்.எந்த ஒன்றை நாம் பயன்படுத்தாமல் இருக்கின்றோமே, அது காலப்போக்கில் கரைந்து காணாமல் போய்விடும். அதற்கு நமது உடம்பு சிறந்த உதாரணம். இது போன்ற மாற்றம் தான் இன்று ஆரம்பித்து இருக்கின்றது. நம்மளுடைய மிக அதிக அடிப்படையான மனிதருக்கு உரிய திறன்களாக இருக்கக்கூடிய சிந்தனைத் திறனுக்கான தேவையை தொழில்நுட்பங்கள் தேவையற்றதாகி கொண்டிருக்கின்றது. இன்று இருக்கக்கூடிய நவீன தொழில்நுட்பம் குறிப்பாக இன்று ஆரம்பித்து மிகப்பெரிய பயன்பாட்டை தொடங்கியிருக்க கூடிய தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு. இந்த தொழில்நுட்பம் மனித குலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இது நிச்சயமாக தேவையான ஒன்று தான். ஆனால் இதுபோன்று நமக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அடிப்படை சிந்தனை திறன், பண்புகளை நாம் மறந்து விடக்கூடாது.
எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவையெல்லாம் மனிதர்களுடைய திறன்களுக்கு உறுதுணையாக தான் இருக்க முடியுமே தவிர ஒருபோதும் மனிதருடைய திறன்களை நகர்த்தி விட்டு, அந்த இடத்தை அது பிடித்துக் கொள்ள முடியாது. அது பிடித்துக் கொள்வது மனிதர்களுக்கு நீண்ட காலம் ஒரு நன்மையை தரக்கூடியதாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஓராண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களையாவது படிக்கின்ற போது தான் நமக்கான சுய சிந்தனை வளரும்.ஆனால் எல்லோரும் சொல்லக்கூடிய அறிவுரைகளை நாம் புரிந்து கொள்வதற்கும், நமக்கு எது சரி எது தவறு என்று சொல்லக்கூடிய, வரக்கூடிய தகவல்களில் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும், எவற்றையெல்லாம் ஆராய வேண்டும் என்பது குறித்து புரிந்து கொள்வதற்கான மிக அடிப்படை தேவையான தனி மனிதனுடைய அறிவும், சிந்தனையும் இன்றைய தொழில்நுட்ப உலகம் நமக்கு அதற்கான இடத்தையும் நேரத்தையும் தர மறுக்கிறது. அது நமக்கு தெரிவதில்லை.
இன்று கைப்பேசிகளில் உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் நாம் பார்க்கும் நமக்கு பிடித்த ஒன்று தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். அதனால் அதில் நாம் அதிகநேரம் செலவழித்து விடுகிறோம்.இது போன்ற தொழில்நுட்பங்கள் தரக்கூடியது, நம்முடைய நேரத்தையும் நம்முடைய சிந்தனையையும் அதை நோக்கி அது இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை புரிந்து கொண்டு நமக்கான பொழுதுபோக்குகள் என்ன இணையதளத்திலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களிலும் எவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ, அதை பயன்படுத்த வேண்டும்.
மனிதர்களுக்கு மிக அடிப்படையாக இருக்கக் கூடிய அவர்களுடைய அடிப்படை சிந்தனையை, இந்த தொழில்நுட்பங்கள் நகர்த்தி விடுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அதற்கான ஒரு மாற்று வாய்ப்புகளை சொல்லித் தருவது தான் புத்தகத் திருவிழாக்கள்.
ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு புத்தகங்கள் நிச்சயமாக உதவுகிறது. இன்று நாம் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்க கூடிய ஒரு பொருள் இளைஞர்களிடத்தில் இருக்கக்கூடிய போதை பழக்கம்.இன்று இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, நம் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டும் என்றால் இது போன்ற பல்வேறு திசை மாற்றிகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.ஒரு விஷயத்தை பண்ணாதே என்று சொல்வதன் மூலம் அதில் அவ்வளவு வெற்றி கிடைக்காது. அவர்களை அந்த செயல்களில் இருந்து வேறு ஒன்றுக்கு செயல்பட வைப்பதற்கு அறிமுகப்படுத்த வேண்டியது மூத்தவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடைய கடமை. அவர்களுக்கு அது போன்ற வேறு நல்ல வாய்ப்புகள் உருவாக்கி தர வேண்டியது மிக முக்கியம். அந்த வேறு வாய்ப்புகளில் மிக முக்கியமான ஒன்று, ஏதேனும் ஒரு துறையில் புத்தகங்களை வாசிக்க வைப்பது தான்.
இன்று வாசிப்பது என்பது நாம் கிடைக்கக்கூடிய நேரத்தில் பொழுதுபோக்குக்கான தேவைகள் என்று இல்லை. அது கடந்த தலைமுறையில் இருந்தது. இன்று நாம் நேரத்தை ஒதுக்கி ஏதாவது ஒரு பொருள் குறித்து ஒன்று, இரண்டு பக்கங்களாவது வாசிக்கத் தொடங்க வேண்டும். அதன் மூலமாக நமக்கு ஏற்படக்கூடிய நம்பிக்கைகளும், நமக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும், சிந்தனை மாற்றங்களும் நிச்சயமாக நமக்கு உதவும். அதற்காகத்தான் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.நமது விருதுநகரில் பங்குனி திருவிழாவிற்கு அடுத்து, நிறைய பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்த புத்தகத் திருவிழா இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பெருமை.இன்னும் கூட்டங்கள் அதிகமாக வர வேண்டும். இது குறித்த விழிப்புணர்வும் புத்தக திருவிழாவுக்கு வர வேண்டிய சூழலும் தேவையும் நிச்சயமாக வருங்காலத்தில் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.புத்தக திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கக்கூடிய ஒரு திருவிழாவாக, நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கக்கூடிய செல்வத்திற்கு ஒரு பகுதியாக இந்த புத்தகத் திருவிழாவை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், இந்த புத்தககத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களை பாராட்டி, வாழ்த்து மடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுப்பணியாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.மேலும், இந்த புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, 1,07,574 பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 5592 மாணவர்கள் புத்தக உண்டியல் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தின் வாயிலாக புத்தகத்தை வாங்கி சென்றுள்ளனர். இந்த புத்தக திருவிழாவில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சார் ஆட்சியர்(சிவகாசி) திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு. பிர்தௌஸ் பாத்திமா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சிவகுமார் (சாத்தூர்), திரு.வள்ளிக்கண்ணு,(அருப்புக்கோட்டை) உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply