வெம்பக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தொலைதூரப் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் மாலை நேரங்களில் மருத்துவ சேவைகள் வழங்கும் விதமாக மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்டத்தில் தொலைதூர கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, மாலை நேரங்களில் மருத்துவ சேவைகள் வழங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தொலைதூரப் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.09.2024) வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் தொலைதூர பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் (மாதத்திற்கு 12 நாட்கள்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவர். இதில், மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சையை தொடர மற்றும் சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளை நடத்திட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், பெரிய மருத்துவமனைகளின் சுமையை குறைப்பதும் மற்றும் நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
தற்போது இச்சேவைகள் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் தட்சனேந்தல், ஆனைக்குளம் மற்றும் இருவர்குளம் ஆகிய துணை சுகாதார நிலையங்களுக்கும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் காரேந்தல், கீழக்குடி மற்றும் பி.தொட்டியங்குளம் ஆகிய சுகாதார நிலையங்களுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மம்சாபுரம், பனையடிபட்டி மற்றும் வலையகுளம் என மொத்தம் 9 துணை சுகாதார நிலையங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இச்சேவைகளை வழங்கும் வகையில் 9 மருத்துவர்கள் மற்றும் 9 இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்துகள் மற்றும் உபயோகப் பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவார்கள். எனவே, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply