மாவட்டத்தில் உள்ள ஒருமித்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதியுதவி தொடர்புடைய தகவல் பரப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் வழங்கப்படும் நிதியுதவி குறித்து, மாவட்டத்தில் உள்ள ஒருமித்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதியுதவி தொடர்புடைய தகவல் பரப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (08.10.2024) அன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் இந்திய அளவில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது விருதுநகர் மாவட்டம். குறிப்பாக சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் அதிகப்படியான நிறுவனங்கள் உள்ளன.
இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பு. ஏனென்றால் நாட்டினுடைய உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காடும், மொத்த தனியார் நிறுவனங்களினுடைய வேலை வாய்ப்பில் 50 விழுக்காட்டையும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் பங்கு வகிக்கின்றன. நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய குறியீட்டில் ஒன்றான மக்கள் கையில் பணப்புழக்கத்திற்கான குறியீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
மாவட்டத்தில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாதமும் வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடனுதவிகள், மானியங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் பகுதி வாரியாக இந்த நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தினுடைய கிழக்கு பகுதியான அருப்புக்கோட்டை பகுதிகளில் பெரிய தொழில் வளர்ச்சிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அங்கு அரசினுடைய முக்கியமான திட்டமான ஏறத்தாழ 800 ஏக்கர் நிலப்பரப்பில் உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்கா வரவிருக்கிறது.
விருதுநகர்- சாத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்று இந்த பகுதியில் பல்வேறு பெரிய நிறுவனங்கள் வரக்கூடிய சூழலில் அதை ஒட்டி செயல்படக்கூடிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடைய வளர்ச்சியும் மிக முக்கியமான பங்காற்றக்கூடிய வாய்ப்பை பெறும். குறிப்பாக சிவகாசி பகுதிகளில் ஏறத்தாழ 400 க்கும் மேற்பட்ட பெரிய அச்சுத் தொழில் நிறுவனங்களும் அதை ஒட்டி இருக்கக்கூடிய 1000 க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும், பட்டாசு தொழிற்சாலைகளை பொறுத்த வரையில் 1400 க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சாலை உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
நகரினுடைய வளர்ச்சிக்கு ஏற்ப பொழுதுபோக்கு சூழல்களிலும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் அதிகப்படியான நிறுவனங்கள் உள்ளன.
நமது மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுகின்ற போது இந்த நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் வணிக சுற்றுச்சூழல் நன்றாக உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. நமது மாவட்டத்தில் இந்த பகுதியில் கல்வியில் சிறந்த மாணவர்கள் உள்ளனர். உங்களுக்கு தேவையான பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கல்லூரியின் இறுதி ஆண்டுகளில் வேலை வாய்ப்பு தேடும் போது, உங்களுக்கு தேவையான தகுதியின் அடிப்படையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு திறன் மேம்பாடாக பயிற்சி அளிக்க முடியும்.
உங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணிகளுக்கான திறன்களை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வாய்ப்பு இருக்கின்றது. நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு உட்கட்டமைப்பு தேவைகள், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கட்டமைப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும், இது தொடர்பாக அரசுக்கு எதுவும் முன்மொழிவை தர வேண்டும் என்றாலும், எப்போதும் நீங்கள் தாராளமாக எங்களை சந்திக்கலாம். மேலும், ஆலோசனைகளை குறைகளையும் தெரிவிக்கலாம். என நமது மாவட்டத்தினுடைய தொழில் வளர்ச்சிக்கு இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில் வளர்ச்சிக்கும் நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்போடு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.இராமசுப்பிரமணியன், சிறு, குறு, நடுத்தர நிறுவன பிரதிநிதிகள், வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply