அவமானங்கள் இன்றி வெகுமானங்கள் இல்லை
பல விதங்களில் மனிதர்களாகிய நாம் அவமானப்பட்டு விடுகிறோம். அந்த அவமானங்களை தனக்குத் தானே சாதகமாக எடுத்துக் கொள்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர்.
பலதரப்பட்ட திறமை உள்ளவர்கள் கூட தோல்வியைத் தழுவிவிட்டால் அதை பெருத்த அவமானமாக எடுத்துக் கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் துவண்டு விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பால்டிமோர் என்ற குட்டி தேசத்தில் பிறந்த மைக்கேல் செல்யே போட்டியில் தோற்றுவிட்டார். பின் அவர் அப்போட்டியில் வெற்றி பெற்ற யுவான் பரோக்கர் என்பவரைப் பார்த்து உங்கள் வெற்றியின் காரணம் என்ன? நானும் கற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் யுவான் அவரை ஒரு அலட்சியப் பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். ஆனாலும் மைக்கேல் அவரை தங்கப்பதக்கத்துடன் உள்ளபடி போட்டோ எடுத்து தன் படுக்கை அறையில் மாட்டிக் கொண்டு, தினமும் காலையில் எழுந்து அவருடைய படத்தைப் பார்த்துவிட்டு, கடுமையாக உடற்பயிற்சி செய்வார். 3 மணி நேரப் பயிற்சியை 6 மணி நேரமாக உழைத்து கடுமையாகப் பயிற்சி செய்தார். அடுத்த 4 ஆண்டுகளுக்குப் பின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தயாரானார்.
செல்வதற்கு முன் தன் தாயாரைப் பார்த்து நடைபெறும் ஒலிம்பிக்கில் 8 போட்டிகளில் யுவானை 1 போட்டியிலாவது வெல்லாமல் நான் தாயகம் திரும்ப மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார். 8 போட்டிகளில் 7 போட்டியில் உலகசாதனை புரிந்து 8வது போட்டியில் யுவானை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஒரு போட்டியிலாவது ஜெயிப்பேன் என்று கூறிய, மைக்கேல் 8 போட்டிகளிலும் வென்று தொடர்ந்து விளையாடிய விளையாட்டில் மொத்தம் 25 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை புரிந்தார்.
கணித மேதை சீனிவாச ராமானுஜர் வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டம், ஒரு நாள் அவர் பள்ளி செல்லும் பொழுது, சாப்பாடு ஒன்றும் இல்லை. பள்ளிக்கு சென்றுவிட்டு வா, ஒரு ஆழாக்கு அரிசியாவது வாங்கி, உனக்கு சோறு சமைத்து வைக்கிறேன் என்று, அவருடைய தாயார் கூறியுள்ளார்.
பட்டினியுடன் சென்ற அவர் தான் கண்டுபிடித்த கணக்கை கோவில் வாசலில், பள்ளியில் கிடைத்த துண்டு சாக்பீசால் எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய தாயாரும் சாப்பிட வரவில்லை என்று அவரைத் தேடிச் சென்று, கோவில் வாசலில் எழுதியிருப்பது புரியாமல் பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவரும் அதைப் பார்த்து விடை சரியே, ஆனால் எப்படி ? என்று வியந்து, ஒரு பேப்பரில் எழுதச் சொன்னார். எழுதிக் கொடுத்தும் ஒன்றுமே புரியவில்லை.
இராமானுஜரின் மாமன் முறையில் உள்ள ஒருவர் அமெரிக்காவில் உள்ளவர். அதைப் பார்த்து அதை அப்படியே கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணக்கு மேதை ஹார்டிக்கு அனுப்பி வைத்தார். அவர் வியந்து போய், அவரை உடனே லண்டன் வருமாறு அழைப்பு விடுத்து, வருவதற்கு, சாப்பாட்டிற்கு, இருப்பதற்கு, எல்லா வசதியும் செய்து தருவதாகக் கூறினார்.
இராமானுஜர் முதலில் என் தாய், தந்தைக்கு சாப்பாட்டிற்கு பணம் அனுப்புங்கள், அதன்பின் 1 மாதம் கழித்து நான் வருகிறேன். ஏன்று கூறினார்.
நாம் தோற்றுவிட்டோமே என்று அவமானப்பட்டு மைக்கேல் மூலையில் உட்கார வில்லை. அவருடைய கடுமையான முயற்சி வெகுமானம் தந்தது, சாப்பாட்டிற்கே வழியில்லை என்று, ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கவில்லை ராமானுஜர். கணிதத்தின் மீதுள்ள ஆர்வத்தை தன் பட்டினியைப் பொருட்படுத்தாமல், தன் பணியினை தொடர்ந்ததால் இன்றளவும் இவ்வுலகிற்கு கிடைத்த மிகப் பெரிய கணித பொக்கிஷம்.
இன்று நாம் எடுக்கும் ஏடிஎம்மிலிருந்து இவருடைய கணிதம் தான் நமக்கு உதவுகிறது. ராமானுஜரின் அயராத கணக்கு ஆர்வம், சாப்பாட்டிற்கு இல்லாமல் பட்டினியில் இருக்கும் பொழுது கூட அபார பணியாற்றியதால் அவருடைய பெயர், புகழ் எல்லாமே வெகுமானங்கள் தான்.
தொடர்ந்து யாருடைய உதவியும் இன்றி தன் 40-வது வயதில் இருந்து 70-வது வயது வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டி இருக்கிறார். தொடர்ந்து 30 வருடங்கள் விடாமல் செய்திருக்கிறார் என்றால், நம்ப முடிகிறதா ? இல்லையே ! ஆனாலும் பீஹார் மாநிலத்தில் சின்ன கிராமத்தில் உள்ள லவுங்கி புய்யா என்ற ஏழை விவசாயி என்பவர் இதைச் செய்திருக்கிறார்.
அவர் இருக்கும் கிராமத்தில் தண்ணீர் இன்றி தவித்த மக்களைப் பார்த்து, அருகில் உள்ள மலையில், மழைபொழியும் நேரம் வரும் தண்ணீரை தங்கள் ஊர் கிராமத்து தெப்பத்தில், சேர்த்தாலே போதும் என்று கூறி, வாய்க்கால் வெட்டும் பாதையையும், கணித்து சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை.
'இது வேலைக்கு ஆகாது' என்று தினமும் தன் ஆடு, மாடுகளை மேய்க்க விட்டுவிட்டு மண்வெட்டி, கூடை சகிதமாக, தினமும் தண்ணீர் வரும் வழியை, வெட்ட ஆரம்பித்தார். அவர் செய்யும் வேலையைப் பார்த்து, கிராமத்தில் உள்ள அனைவரும், அவரை கேலி செய்தனரே தவிர உதவவில்லை.
சொந்த மகன்களும், மனைவியும், வெளியூர் சென்று விட்டனர். அப்பொழுதும் மனம் தளராமல் தினமும், இல்வேலையை ஆத்மார்த்தமாக செய்து வந்தார். 70-வது வயதில் இப் பணியினைச் சிறப்பாகச் செய்தார். அவ் ஊர் குளமும் நிறைந்தது. அக்கிராமத்தில் தண்ணீர் பஞ்சமும் தீர்ந்தது.
அவரை கிறுக்கன் என்று கூறியவர்கள், எல்லாம் வியந்து பாராட்டினார்கள். இவருடைய அளப்பறிய பணியினை ஊக்குவிக்கும் வகையில் மஹிந்த்ரா கம்பெனி முதலாளி ஆனந்த் மஹீந்தரா அவருக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி கௌரவித்துள்ளார்.
அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை இவர் நிராகரித்ததாகக் கூறுகின்றனர். தன் வீட்டிற்காக உழைக்க, சோம்பேறிபடும் மக்கள் நடுவே, ஊருக்காக அவர் பல அவமானங்களுடன் பணியை விடாது செய்து வெகுமானங்கள் பெற்றுள்ளார்.
ஆக வாழ்க்கையில் ஒவ்வொரு புகழ் பெற்ற மனிதர்களும் அவமானங்கள் இன்றி வெகுமானங்கள் பெற்றதில்லை.
0
Leave a Reply