தேனீக்கள் போல பறப்போமா
நம் உறவுகள் மேம்பட வேண்டும் என்றால் ,நம் வாழ்வு சந்தோஷமாக இருக்க வேண்டும் ,என்பது தான் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பதில். அது வல்ல தீர்வு என்பது நிதர்சனம்.நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், எல்லோருமே மற்றவரை சார்ந்திருந்தால் தான் சந்தோஷம் என்று நினைக்கின்றனர். நம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நம்மைச் சார்ந்தே இருக்கும் பொழுது, நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன், அருமையான உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.மிகவும் நல்ல பண்பாடுடைய மனிதர்கள் கூட சில நேரங்களில், ரொம்ப மோசமாக, பைத்தியக்காரத்தனமாக, நடந்து கொள்வார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களை அப்படி நடத்தியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளா விட்டால், அவர்களை நாம் இழக்க வேண்டியது தான்.தனிமனிதர்களுக்கு உறவுகள் என்று சொல்வதற்கு எத்தனையோ பேர் உள்ளனர். கணவர், குழந்தை, தாய், தந்தை, அத்தை, மாமா, நண்பர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் பகைவர், சொந்த பந்தம் என அனைவருமே நமக்கு உறவு என்ற வட்டத்தில் உள்ளனர்.கணவரிடம் பேசுகிறீர்கள், சொந்தங்களுடன், வியாபார நிமித்தப் பேச்சு, நண்பரிடம். பெரியவர்களிடம், குழந்தைகளுடன் என்று ஒவ்வொரு நிமிடத்திற்கும், அனைவரிடமும் பேசுகிறோம். பதிலளிக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகக் கையாள வேண்டும்.நம்முடைய தேவைகளை நிறைவு செய்வதற்காக பல விதமான உறவுகள் உள்ளன. நம்முடைய தேவைமட்டுமின்றி, உறவினர்களின் தேவையையும் நாம் மதிக்க வேண்டும். , இப்படிப்பட்ட உறவை நாம் போற்றிப் பாதுகாப்பது நமக்கும், நல்லது, உறவினர்களுக்கும் நல்லது . தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவை பல இடங்களில் சுற்றித் திரிந்து நூற்றுக் கணக்காக மலர்களில் ,உள்ள தேனை மாத்திரம் ,அந்த பூவிற்கே இடைஞ்சல் இல்லாமல். எடுக்கும் சக்தி வாய்ந்தது. அதை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே !தேனீக்கள் ரோஜாப் பூவோ, வேப்பம் பூவோ, அல்லது குட்டிப் பூக்களோ, அது நல்ல தோட்டத்திலோ ,அசிங்கமான சூழ்நிலையிலோ இருந்தாலும், தேனீக்குத் தேவை ,தேன் மாத்திரம் தான். தேனை மாத்திரம் உறிஞ்சி வைத்து விட்டு தன் கூட்டிற்குள் போய் சேர்ந்து கொள்ளும். வேறு எதைப் பற்றியும் கண்டு கொள்ளாது. யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தவிர்த்து விட வேண்டும். எப்படி தேனீ ரோஜாப்பூவிலும் சரி, வேப்பம்பூ ஆனாலும் சரி. அதிலுள்ள மகத்துவமான தேனை மாத்திரம் எடுத்துக் கொள்வதால், அதற்கு தேன் என்ற பொக்கிஷம் கிடைக்கிறது. அதைப் போல நாமும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம், எல்லோரும் கையாளும் உறவினர்களுடைய நல்ல குணம், பண்புகளை மாத்திரம், அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்,நாம் எடுத்துக் கொண்டால், உறவுகள் மேம்படும் அல்லவா! மற்றவர்களை குறை சொல்வது மனித இயல்பு, இதைத் தவிர்த்து பிறரை குறைத்து எடை போடுவது, அவர்களுடைய தரமற்ற குணங்களை விமர்சிப்பது. போன்ற வேண்டாத வேலைகளைச் செய்யாமல், அவர்களிடம் உள்ள நல்ல செயலை மாத்திரம் எடுத்துக் கொண்டால், வாழ்வும். உறவுகளும் மேம்படும். “ குறை சொல்லியே தவிப்போமா ! அல்லது தேனீக்கள் போல பறப்போமா !
0
Leave a Reply