நிலக்கரியை தோண்டி எடுக்காமல், பூமிக்கடியில் உள்ள நிலக்கரி அடுக்குகளிலிருந்தே நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு மின்கலனை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுமார் 2 கி.மீ. ஆழத்தில் செயல்படும் இந்த தொழில்நுட்பம், Electrochemical முறையில் மின்சாரம் உற்பத்தி செய்து தரைக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரின் புகழ்பெற்ற மொகோக் சுரங்கப் பகுதியில் சுமார் 11,000 காரட் எடையுள்ள அரிய மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.2 கிலோ எடை கொண்ட இந்த மாணிக்கம், அந்நாட்டில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ரூபியாக கருதப்படுகிறது. இதன் உயர்தர நிறம் மற்றும் தெளிவுத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எவன் ஸ்பீகல்மற்றும் அவரது மனைவி மிராண்டா கெர், அமெரிக்காவின் சுமார் 2.61 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். 'Undue Medical Debt' என்ற இலாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து, சுமார் 550 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவக் கடனை ஏற்றுக்கொண்ட அவர்கள், பொருளாதார சுமையின்றி மக்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரிக் ஏர் டாக்சி சேவைக்கான உலகின் முதல் வணிக Vertiport-க்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் துபாயில் பாதுகாப்பான Air Taxi சேவையை அறிமுகப்படுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன. நகர்ப்புற விமானப் போக்குவரத்தில் UAE முன்னோடியாக உருவெடுத்து வருகிறது.
சீனாவின் தைசோ பகுதியில் வசித்த ஒருவர், தனது வீட்டிலேயே 300-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்து வந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாம்புகளுக்கு தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், வழக்கத்திற்கு மாறான மின்கட்டணம் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 40% பேர் அந்நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள், அரசியல் சூழல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இணையத்தில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதை பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார். அண்மையில் இந்திய சமூகத்தை குறிவைத்து பரவிய 14 தவறான இணையப் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சென்டினியல் லைட்' (Centennial Light) என்ற மின்விளக்கு, 1901 முதல் இடையறாது எரிந்து வருகிறது. 123 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த விளக்கு, உலகின் மிக நீண்ட காலம் எரியும் மின்விளக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்த இந்த விளக்கு, தற்போது சுமார் 4 வாட் வெளிச்சம் மட்டுமே அளித்தாலும், அதன் நீடித்த செயல்திறன் உலகையே வியக்க வைத்துள்ளது.
வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை அருகே உள்ள மோரோன் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. முதலில் 7.1 மற்றும் 7.2 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நிமிட இடைவெளியில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த நூற்றாண்டில் அந்நாட்டை தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச டயப்பர்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 400 டயப்பர்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தை பராமரிப்பின் ஆரம்பச் செலவைக் குறைத்து, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.