25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 10, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு 25.08.2024-க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவியர், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.மேலும், மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1  இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை http://sdat.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம்.போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140-00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 10, 2024

வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் சொந்த நூலகங்களுக்கு விருது

சட்டமன்ற பேரவையில் 2024-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்கவேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து “சொந்த நூலகங்களுக்கு விருது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.மேற்கண்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூலகங்களின் விவரங்களை நூல்களின் எண்ணிக்கை, எந்த வகையான நூல்கள், தங்களிடமுள்ள அரியவகை நூல்கள், நூலகம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், நூலகத்தின் புகைப்படம் போன்றவற்றை 9442060835, 9894923725 என்ற  அலைபேசி எண்களிலும், dloviruthunagar@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம். மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபருக்கு ”சொந்த நூலகங்களுக்கு விருது” விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தக கண்காட்சியில் வைத்து   மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் இல்லங்கள் தோறும் நூலகங்கள் அமைத்து வாசிப்பு பழக்கத்தை விரிவுபடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Aug 10, 2024

சுதந்திரத தினமான 15.08.2024 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான 15.08.2024 - அன்று கிராம சபை கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல் 31.07.2024 வரை) கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். இணையவழி வரி செலுத்தும் சேவை குறித்து விவாதித்தல். இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதித்தல். சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் குறித்து விவாதித்தல். தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TNPASS)  -குறித்து விவாதித்தல். தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம்  - உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல். தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல். ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.எனவே, 15.08.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 09, 2024

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம்  3  ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்கள் ) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு, மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.மேற்படி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில்  14.08.2024 அன்று  பிற்பகல் 03.30 மணியளவில்  விருதுநகர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 09, 2024

'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்

நான் முதல்வன்' திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்  HCL Tech  நிறுவனத்துடன் இணைந்து HCL Tech bee  பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி தேர்வு முகாம் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும், விருதுநகர் தங்கம்மாள்பெரியசாமி நாடார் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கும் 09.08.2024 மற்றும் 10.08.2024 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டமானது 1.03.2022 அன்று துவக்கிவைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டினை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.இத்திட்டமானது மாணவர்கள் சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.2023 அல்லது 2024- கல்வியாண்டில் 12-ம் வகுப்பு கலைபாடப் பிரிவு (கணிதம் மற்றும் வணிகக் கணிதம் இல்லாத) பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி வழங்கப்படுகிறது.வெற்றிகரமாக ஒரு வருடகால பயிற்சியினை முடிப்பவர்களுக்கு HCL Tech-ல் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அவர்களின் மேற்படிப்பை தொடங்குவதற்கு வாய்ப்பினை தருகின்றது. ஒரு வருடகால பயிற்சியின் போது ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.10,000 வழங்கப்படுகின்றது.பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் வரை கிடைக்க வழிவகையுள்ளது. எச்.சி.எல் டெச்சில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் தொடங்குவதற்கு அமிட்டி, கே.எல்.பல்கலைக்கழகம் மற்றும் சாஸ்திரா உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் வாய்ப்பினை தருகிறது. மேலும், அவர்களின் கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை நிறுவனம் வழங்குகிறது.2023 அல்லது 2024 ம் கல்வியாண்டில் 12- வகுப்பு கலை பாடப் பிரிவு மாணவர்கள் பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வர்த்தகம் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம். அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் ரூ.51 ஆயிரம் பயிற்சிக்கட்டணம் தமிழ்நாடு அரசுத் திறன் மேம்பாட்டுக் கழகம்; வழங்கும்.இத்தேர்வு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https:// registrations.hcltechbee.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 63829-98925, 99446-70684 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 06, 2024

விருதுநகர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்

விருதுநகர் மாவட்டம், அப்பைநாயக்கன்பட்டியில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர்வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்தலைமையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (05.08.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்முகாமில்,5 பயனாளிகளுக்குரூ.1.61 இலட்சம்மதிப்பிலானஇலவசவீட்டுமனைபட்டாக்களையும், வேளாண்மைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  அவர்கள் வழங்கினார்கள்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் ஐந்து  அல்லது ஆறு கிராமங்களை ஒரு கூட்டாக அமைத்து ஒரு பொதுவான இடத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று,  அதற்கான சரியான தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்., கலைஞர் மகளிர் உரிமைத்தொகைகள் கிடைக்க பெறாதவர்களுக்கும், முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தோர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவாக தீர்வு காணப்படும்.தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:ஒரு அரசினுடைய சேவைகளில் மிக முக்கியமானது பொதுமக்களிடம் அவர்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட, பொதுநலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உரிய கால அவகாசத்திற்குள் அந்த கோரிக்கைகளுடைய நியாயங்களின்  அடிப்படையில்  அவற்றை மிக விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது தான். நமது விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களிலும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும், அமைச்சர் பெருமக்கள் அவர்களிடமும் மனுக்களை நேரில் சென்று அளித்து வருகிறார்கள்.மேலும், இ-சேவை மையங்களின் மூலமாக அரசின் சேவைகளை இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கோரிக்கைகள்  பெறப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நடக்கக்கூடிய மக்கள் தொடர்பு திட்ட முகாம், ஒவ்வொரு மாதம் நடக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் ஆகியவற்றிலிருந்து கோரிக்கை மனுக்கள் வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.ஒரு மனுவின் மீது  ஒன்றிற்கு மேற்படப்ட துறைகள் இணைந்து தீர்வு காண வேண்டி உள்ளது.  அதற்காக தான் 15 துறைகளை கண்டறிந்து, அந்த துறைகளையெல்லாம் நான்கு அல்லது ஐந்து கிராமங்கள் ஒன்றாக இணைத்து ஒரு இடத்தை மையமாகக் கொண்டு பொதுவான இடத்திற்கு  நேரடியாக சென்று மனுக்களை வாங்குவது மட்டுமல்லாமல், பெறக்கூடிய மனுக்களை எவ்வளவு நாளில் தீர்வு கண்டுள்ளோம் என்பதும், அதற்கான பதில் அந்தந்த மனுதாரர்களுக்கு  சரியானதாக இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது..தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், கலைஞர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை  என எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும், அதனை பரிசீலனை செய்து, அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கி படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் .எனவே பொதுமக்கள் தரக்கூடிய கோரிக்கை மனுக்கள் ஒவ்வொன்றும் முழுமையாகவும், கவனமாகவும் பரிசீலிக்கப்படும். மேலும், அந்த மனுக்களை விரைவாக செயல்படுத்துவதற்கு தான் இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Aug 06, 2024

விருதுநகர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்

விருதுநகர்  மாவட்ட கல்வி அறக்கட்டளை சார்பில், 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.75,800/- மதிப்பிலான கல்விக்கட்டணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில்,  மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.4,870/- வீதம் மொத்தம் ரூ.24,350/- மதிப்புள்ள இலவச தேய்ப்பு பெட்டிகளையும், 9 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000/- வீதம் மொத்தம் ரூ.54,000/-மதிப்புள்ள தையல் இயந்திரங்களையும் என ஆக மொத்தம் ரூ.78,350/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.முன்னதாக, 2024-25 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவிகள் தேவைப்பட்ட 7 மாணவ, மாணவிகளுக்கு, விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை மூலம், ரூ.75,800/- மதிப்பில் கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மவாட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, அரசு அலுவலர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Aug 06, 2024

விருதுநகர் மாவட்டம் 3-வது புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 15.08.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 3-வது புத்தக திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்கள் ஏதேனும் ஒரு போட்டித் தேர்விலாவது பங்கேற்று இருக்க வேண்டும். அத்தகைய தேர்வுக்கான அனுமதி சீட்டினை கொண்டு ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளகூகுள்படிவத்தினை http://forms.gle/CN4ey1H6Lqsdyex18  நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்கள் இப்போட்டியில் குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்கேற்கலாம். இந்த வினாடி வினா போட்டியானது விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 18.08.2024 அன்று நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2024. இதில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் தொடர்பான வினாக்கள் வெவ்வேறு சுற்றில் இடம்பெறும். இந்த வினாடி வினா போட்டியானது மூன்று நிலைகளில் நடத்தப்படும். இறுதியாக வெற்றி பெறக்கூடிய குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/-, இரண்டாவது பரிசு ரூ.75,000/-, மூன்றாவது பரிசு ரூ.50,000/- அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 80724-91078 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 06, 2024

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா 07.08.2024 அன்று நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தலைமையில் (05.08.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்திட ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.இக்கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-திருவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வருகின்ற 07.08.2024 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது.. தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் நடைபெறும் தேரோட்டங்கள் தங்குதடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெறுவதை உறுதிபடுத்தும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள திருத்தேரோட்ட வழிபாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.தேரோட்டநிகழ்ச்சியில்பங்கேற்கும்பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாட்டுப்பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ளவும், மேலும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையினரும், காவல் துறையினருக்கு துணையாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், ஹோம் கார்டு காவலர்களும், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலை ஒழுங்கபடுத்த காவல்துறையினர் மாற்றுப்பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய்திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்கள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.திருவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், சுகாதாரமான முறையில் உணவு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி, சுகாதார வளாகம், தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வண்ணம் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட வேண்டும். இப்பணிகளை திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கவும்;, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை கோட்ட தீயணைப்பு அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.மேலும், திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்புலன்ஸ்சுகளும் தயார் நிலையில் வைக்கவும், திருக்கோயில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அதுபோன்று மருத்துவக்குழு அடங்கிய தற்காலிக சிகிச்சை மையங்கள் எந்ததெந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வண்ணம் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட வேண்டும். இப்பணிகளை இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஆகியோர் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆடிப்பூரத் தேர்த்திருவிழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிய பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது.தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளும்;, தொலைபேசி இணைப்புகளும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின்சார வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்த்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற தீமைகள் குறித்து எடுத்துரைத்து, மாற்றாக துணிப்பையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு;ள்ளது. எனவே, அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு நல்ல முறையில் தேர்த்திருவிழாவினை நடத்தி முடித்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Aug 06, 2024

விருதுநகர் மாவட்டம் பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகி நன்கொடை வழங்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் 15.07.2024 முதல் ஊரகப் பகுதியில் 255 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 45,583 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு தரமான சுவையான காலை உணவு வழங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  சிறுதானியங்கள் அடங்கிய உணவு வகைகள் மற்றும் வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற அந்தந்த பருவ காலங்களில் பழங்களை குழந்தைகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.  தன்னார்வலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், புரவலர்களின் பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களில் குழந்தைகளுக்கு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உ,ள் ஊரில் கிடைக்கக்கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு மற்றும் வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களை வழங்கவும், சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்திட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.பள்ளிகளுக்கு பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை நன்கொடையாக  வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகுமாறும்,  இத்திட்டத்தினை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுவதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 69 70

AD's



More News