விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) 'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து வட்டங்களிலும் (11 வட்டங்கள்) ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.தற்போது மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 30.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இவற்றில் இன்று 30.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று கபாடி(ஆண்கள்), கேரம்(ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்துபந்து(ஆண்கள்), கயிறு இழுத்தல்(ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைப்பந்து(ஆண்கள்) போன்ற விளையாட்டுப்போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வட்டார அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகள்(100 மீ மற்றும் குண்டு எறிதல்) மாவட்ட விளையாட்டரங்கம், விருதுநகரில் வைத்து நடைபெற்றது.மேலும் இன்று 30.01.2026 அன்று மாவட்ட அளவிலான நேரடி விளையாட்டுப்போட்டிகளான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓவியப்போட்டி, கோலப்போட்டி (பெண்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளவிளையாட்டுப்போட்டிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப்போட்டிகள் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.தொடர்ந்து, 31.01.2026 (சனிக்கிழமை) அன்று கபாடி(பெண்கள்), கையுந்துபந்து (பெண்கள்) மற்றும் எறிபந்து (பெண்கள்) போன்ற விளையாட்டுப்போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், விருதுநகரில் வைத்து நடைபெற உள்ளது.மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- பரிசுத்தொகையும், மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.அதன்படி, மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) 'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், (30.01.2026) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில், போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், அரசு அலுவலர்கள், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினார்கள்.இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) திரு.ரமேஷ், விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்குமார், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.செல்வராஜ், அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் திரு.நாகராஜன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமராவதி, விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி கல்லூரி முதல்வர் திருமதி சாரதி, சிவகாசி கோட்ட கலால் அலுவலர் திரு.பாஸ்கரன், அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் திரு.ராமசுந்தர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பெரியபுளியம்பட்டியில் (30.01.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-2023 கீழ் ரூ.154.99 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் ரூ.154.99 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு போவதாக இருந்தாலும், வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிகுந்த சிரமமாக இருக்கிறது என்பது அருப்புக்கோட்டை பகுதி மக்களினுடைய பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது.எனவே, அருப்புக்கோட்டை புறவழிசாலைப்; பணியை முடிப்போம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, அந்த வாக்குறுதியின் படி இன்றைக்கு நம்முடைய அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் இந்த சுற்றுவழிச் சாலை பணிகளை முடித்து ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை திட்டங்கள், திருநெல்வேலி கோட்டத்தின் மூலம் அருப்புக்கோட்டை நகருக்கு மேற்கு புறவழிச்சாலை அமைத்து மேம்பாடு செய்யும் மற்றும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிக்கு ரூ.119.50 கோடி மற்றும் நிலஎடுப்பு பணிக்கு ரூ.35.40 கோடி என மொத்தம் ரூ.154.99 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பணியின் மொத்த நீளமான 9.905 கி.மீ. இதில் இரயில்வே மேம்பாலப் பணிகள் தவிர்த்து அனைத்து பணிகளும் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளும் ஓரிரு மாதங்களில் முடிவடையும்.விருதுநகர் - அருப்புகோட்டை செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரவுண்டானாவில் இருந்து தேசியநெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரவுண்டாண வரை உள்ள 5.1 கி.மீ நீளமுள்ள பகுதியானது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.இந்த சாலை 10 மீ அகலமும் இரு பக்கமும் கடின புருவங்களுடன் கூடிய இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் செல்வதற்கு மாநில நெடுஞ்சாலை 42 (திருவில்லிபுத்தூர் -சிவகாசி - விருதுநகர்- அருப்புக்கோட்டை -திருச்சுழி நரிக்குடி பார்த்திபனூர் சாலை) வழியாக நெருக்கடி மிகுந்த அருப்புக்கோட்டை நகரை கடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையால் அருப்புக்கோட்டை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் மதுரை, தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்கு எளிதாக செல்லும் படி அமைக்கப்பட்டுள்ளது.இது நம்முடைய அருப்புக்கோட்டை பகுதியினுடைய போக்குவரத்தில் ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து, நிதிகளை ஒதுக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த தொகுதியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(29.01.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் 28.01.2026 அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும், பதிவுகளில் மாற்றங்கள் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது விண்ணப்பங்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2026) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்களை விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தகுதியுள்ள எந்தவொரு நபரும் விடுபடக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலர்களைக் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (29.01.2026) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் [Tamil Nadu Wilderness Experiences Corporation (TNWEC)] சார்பில் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம்(TNWEC) இணைந்து, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் (Environment Education Programme EEP) கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாம் செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.இம்முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இயற்கை சூழலில் அனுபவக் கற்றலை பெற்றனர்.மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாக்கும் பொறுப்புணர்வை வளர்ப்பதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும் முகாமின் ஒரு பகுதியாக இயற்கை நடைபயணம், பறவை பார்வையிடல், அடையாளம் காணுதல் மற்றும் கலந்துரையாடல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டன.இந்நிகழ்ச்சியில் வன சரக அலுவலர், வனத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் (29.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், சாத்தூர் வட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் 1075 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.பின்னர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் 249 மாணவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 8,678 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6,562 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. அதில், இன்றைய தினம் சாத்தூர் வட்டாரத்தில் 1,075 மடிக்கணினிகளும், சிவகாசி வட்டாரத்தில் 1,551 மடிக்கணினிகளும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 249 மடிக்கணினிகளும் என மொத்தம் 2,875 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.முன்னொரு காலத்தில் படிக்கிற பொழுது, முதலில் மணலை பரப்பி எழுத வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. பிறகு சிலேட்டுகளில் எழுதி படித்தும், பின்பு சிலேடு உடைந்து விடுவதால் தகரத்தில் முலாம் பூசி சிலேடு பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் பள்ளியில் சென்று அரசால் இலவசமாக சிலேடு, புத்தகம் கொடுப்பது என்பது மிகப்பெரிய காரியமாக இருந்தது.இன்று அதெல்லாம் பழமையாகி விட்டது. இன்றைக்கு நம்முடைய கையில் செல்போன் மற்றும் மடிக்கணிகள் உள்ளது. காரணம் என்னவென்றால் உலகம் மிக வேகமாக நகர்ந்து வருகிறது. அந்த உலகத்தோடு இணையாக மாணவர்களும் பயணிக்க வேண்டி இருக்கின்றது. அதனால், மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கடமை நம்முடைய அரசுக்கு இருக்கிறது.தற்போது கல்லூரி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் நிறைய பேர் கல்லூரிக்கு சென்றிருக்க மாட்டார்கள். கல்லூரிக்கு முன்னரே பெரும்பாலும் படிப்பை முடித்து விடுவார்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உங்களை எல்லாம் படிக்க வைத்திருக்கின்றார்கள். படிக்க வைத்ததற்கு பிறகு உங்களுக்கு திறன்களை வளர்க்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும்போது, அவர்கள் கொடுக்கக்கூடிய ஊதியத்திற்கு ஏற்றார் போல எவ்வளவு திறமை இருக்கிறது, நீங்கள் தகுதியாக இருக்கிறீர்களா என்று பார்க்கிறார்கள்.எனவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அந்தத் திறன்களை வளர்ப்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக உங்களுடைய திறமைகளை வெளியே கொண்டு வரும் பணியை செய்கிறார்கள். அந்த திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கான பணியை செய்வதற்கு உறுதுணையாக இருக்கத்தான் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றஇளைஞர்கள் அதிகமாக இருக்கின்ற நாடு இந்தியா. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலம் இருக்கின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை சாமர்த்தியதனமாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் உருவாக்க வேண்டிய கடமை அரசினுடைய கடமை.கடந்த 5 வருடங்களில் மாவட்டத்தில், அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது வேலை வாய்ப்புக்கான தேவை அதிகமாக இருக்கிறது. வரும் காலங்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களுக்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை நம்முடைய மாவட்டத்திலேயே உண்டாக்கக்கூடிய பணிகளை செய்து வருகிறோம்.நீங்கள் வேலைக்கு வேற மாவட்டத்திற்கு செல்ல தேவையில்லை. நம்முடைய மாவட்டத்திலேயே தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அதற்கு தேவையான சாலை வசதிகளும், விமான, துறைமுக வசதிகளும் இருக்கின்றன.திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை இல்லாமல் நம்முடைய பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை உண்டாக்கக்கூடிய பணியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆசியோடு உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு எப்படி படிக்காமல் இருந்த ஒரு சமுதாயத்தை படிக்க வைத்ததோ, அதுபோல, படிக்க வைப்பதோடு இல்லாமல் எதிர்காலத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்புகளை பல்வேறு இடங்களில் உருவாக்கித் தரக்கூடிய சூழ்நிலையை, அடுத்து வரக்கூடிய காலங்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்து கொடுப்பார்கள்.மாணவர்கள் மடிக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரக்கூடிய உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்பாமல், அதை ஆராய்ந்து, உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையை தெரிந்து கொண்டு எதிர்காலம் உங்கள் கையிலே வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கத்தான் உலகம் உங்கள் கையில் திட்டம். அதை நீங்கள் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் வேலை இல்லாத பட்டதாரிகள் இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி எல்லோருக்கும் வேலை கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்குவோம் என தெரிவித்தார்.தமிழ்நாட்டில், அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 8,678 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6,562 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.அதில், இன்றைய தினம் சாத்தூர் வட்டாரத்தில் 1,075 மடிக்கணினிகளும், சிவகாசி வட்டாரத்தில் 1,551 மடிக்கணினிகளும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 249 மடிக்கணினிகளும் என மொத்தம் 2,875 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில் நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து கிராம நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், "கல்வி மூலம் சமூக மேம்பாடு தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், "உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும். இந்த மடிக்கணினிகளை நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் (28.01.2026), மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு, இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வரும் நிகழ்வினை முன்னிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, சாத்தூர் வட்டம், வெங்கடாசலபுரத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று சந்தித்து, உரிய பயிற்சி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கான எதிர்காலத்திட்டங்களை செயல்படுத்தவும் தொடங்கப்பட்ட உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் படிவங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வெங்கடாசலபுரத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி, தில்லை நகரில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, வாக்காளர் வரைவுப் பட்டியலில் 18-வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதமாக, படிவம்-6 வழங்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் (28.01.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழுவில் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் விளையும் நெல், பருத்தி விதை, உளுந்து, சோளம், எள், நிலக்கடலை, மிளகாய் வத்தல், கொப்பரை தேங்காய், பாசிப்பயறு, குதிரைவாலி, கம்பு, மல்லி, கரும்பு, வெல்லம், முந்திரி, சூரியகாந்தி விதை மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருட்களையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து உலர வைத்து காய வைப்பதற்கு உலர்கள வசதியும், விளைபொருட்களை சேமித்து வைக்க 17400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 16 குடோன்கள் பரிவர்த்தனை கூடம், ஏலக்கொட்டகை வசதியும் மற்றும் மூன்று குளிர்பதன கிட்டங்கி வசதியும் உள்ளன. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த அனைத்து வேளாண் விளைப்பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பயன பெற கேட்டுக்; கொள்ளப்படுகிறது. பொருளீட்டுக்கடன் வசதி :சிறு, குறு விவசாயிகளுக்கு,விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 50 சதவீதமும் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகள் கடன் பெற்ற 15 நாட்களுக்கு வட்டி கிடையாது. அதன் பிறகு 5 சதவீத வட்டி மட்டும் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக கிட்டங்கியில் விளைபொருட்களை 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்திட, ஏதுவாக வியாபாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளிடம் இருந்து பொருளீட்டு கடனுக்காக 9 சதவீதம் வட்டியும் மற்றும் 180 நாட்கள் வரை இருப்பு வைத்து பயன் அடையலாம். FPO-களுக்கு ரூ.10.00 இலட்சம் வரை பொருளீட்டுக்கடன், 5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.குறைந்த வாடகையில் இருப்பு வைக்கும் வசதி: விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 25 பைசா வீதமும், வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 50 பைசா வீதமும் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயன் பெறலாம். மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-National Agriculture Market): விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைகள் (e-NAM) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விளைபொருட்கள் தரப்பகுப்பாய்வு செய்யப்பட்டு மின்னணு முறையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு உரிய கொள்முதல் தொகை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.விலை ஆதரவு திட்டம் (Price Support Scheme - PSS)மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் (Price Support Scheme - PSS) சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் வாயிலாக NAFED நிறுவனத்தின் மூலம் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.78/- என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதி விவசாயிகள் சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து 25.03.2026-க்குள் பதிவு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் மற்றும் பொருளீட்டுகடன் பெறுவதற்கும் 9952341770 என்ற எண்ணில் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 8248405989 என்ற எண்ணில் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 9003356172 என்ற எண்ணில் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 7904537699 என்ற எண்ணில் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைகூட மேற்பார்வையாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பூலாங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் (27.01.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்றான கொரனா நோய்த்தொற்றினை நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அணுகு முறையினாலும், உரிய நடவடிக்கைகளினாலும் அத்தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டார்.அந்நாளிலிருந்து, இம்மருத்துவத்துறை, சுகாதாரத்துறை நாளுமொரு வண்ணமாக வளர்ச்சியடைந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் என்று தொடங்கப்பட்டு, இன்றைய தினம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமாக உயர்த்தப்பட்டு மக்களுக்கு உயர்தர சிகிச்சையினை அளிக்கும் திட்டமாக உயர்ந்துள்ளது.இத்திட்டத்தின் மூலம், ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் நவீன உபகரணங்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை, விருதுநகர் மாவட்டத்தில் 36-இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, 25-முகாம்கள் நிறைவுற்று, தற்பொழுது 26-ஆவது முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இம்முகாம்களிலேயே, ஏறத்தாழ 40,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஒரு சிறந்த ஆட்சி என்பது மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு செயலாற்றுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று வழங்குவது தான்.மருத்துவத்துறை அதிகாரிகள் தங்களது முழு நேரத்தையும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பணியாற்றுகிறார்கள் என்று கூறினால் அதற்கு முழு காரணம் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் காரணம்.பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தேவைகளை மருத்துவத்துறை அலுவலர்களிடம் எடுத்துக் கூறி, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.இன்றைய தினம், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில், 36-சிறப்பு மருத்துவ முகாம் நடத்த நிர்ணயிக்கப்பட்டு, தற்பொழுது 25-ஆவது முகாம் நிறைவுற்று 26-ஆவது முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களுக்கே வருகை புரிந்து, மக்களுக்கு தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி பயனடையமாறும், இத்தகைய திட்டத்தினை அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, 10-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 3-கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும், 3-நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகளையும், 2-நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளையும், 3-தூய்மை பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நல வாரிய அட்டைகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.