விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், கங்காகுளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (19.12.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கங்காகுளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த கிட்டங்கியினை அமைப்பது என்பது, தமிழ்நாடு அரசினுடைய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எந்தளவிற்கு ஒரு முறையான கட்டமைப்பினை தமிழ்நாடு எங்கும் உருவாக்குவதற்கும் குடிமைப் பொருட்களை பாதுகாத்து அதை உரிய மக்களுக்கு சென்று சேர்வதில், எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் இருப்பதற்கும் இன்றைக்கு சிறப்பான முறையில் உருவாக்கி வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் உருவாக்கப்படக்கூடிய இந்த கிட்டங்கிகள் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கங்காபுரத்திலும், திருச்சுழி தமிழ்பாடியிலும் என இரண்டும் சேர்த்து சுமார் ரூ.6 கோடி மதிப்பில் இந்த கட்டிடங்களை நுகர்பொருள் வாணிப கழகம் உருவாக்கயிருக்கிறது. இதற்காக நபார்டு வங்கியினை நிதியுதவியை பெற்றிருக்கிறோம். பொதுவாக நம்முடைய உணவு பொருட்கள் வழங்கல் துறை என்பது எந்தளவிற்கு மிக கவனமாக செயல்படக்கூடிய ஒரு துறை. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய பிறகு, இன்றைக்கு நெல் விளைச்சல் என்பது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அமோகமாக இருக்கிறது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை அந்த அளவிற்கு வேகமாக அதிக அளவில் கொண்டு வருகின்றோமோ அப்படி கொள்முதல் செய்யப்படக்கூடிய நெல்லை நாம் பாதுகாத்து வைக்கக்கூடிய வகையில் அவற்றிற்கான கிட்டங்கி, கிடங்கு வசதிகளை அரசு பெரிய அளவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.அந்த வகையில் நம்முடைய நுகர்பொருள் வாணிபக் கழகமும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டிருக்க கூடிய இத்தகைய குடிமைப் பொருட்களுக்கு, அந்த குடிமைப் பொருட்களை பாதுகாப்பான முறையிலே வைத்திருந்து, அதை கெட்டுப் போகாமலோ, வேற எந்த விதமான குறைபாடுகளும் வந்து விடாமல் வைப்பதற்கு அவர்களுக்கான புதிய வசதிகளை உருவாக்கி தந்திட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அவர்கள் 2024-25 சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு இன்றைக்கு தமிழ்நாடெங்கும் இத்தகைய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட இருக்கின்றது.அதில் ஒன்று சிவகாசி கங்காகுளத்தில் வருவது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே அந்த நிகழ்ச்சிகளை பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.பொதுவாக இந்த அடிக்கல் நாட்டுவது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய அளவில் மிக விரைவில் அதற்கான காலகட்டத்திற்குள் அந்த பணிகளை துறையும், ஒப்பந்ததாரர்களும் இணைந்து பணியாற்றி தரமான முறையில் அதனை நிறைவேற்றி உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து அதற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பாக 27.10.2025 அன்று இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,31,157 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,43,752 வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,41,074 வாக்காளர்களும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,43,782 வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 2,26,140 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 2,22,248 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 2,18,332 வாக்காளர்களும், ஆக மொத்தம் 16,26,485 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, 14.12.2025 வரை பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்ட படிவங்கள் அதற்கான செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு (19.12.2025) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,01,901 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,13,655 வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,18,801 வாக்காளர்களும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,14,544 வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 1,90,824 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,98,996 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,97,790 வாக்காளர்களும், ஆக மொத்தம் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும், நிரந்தர முகவரி மாற்றம், தொடர்பு கொள்ள இயலாதவர்கள், இறப்பு, இரட்டைப் பதிவு இனங்கள் மற்றும் இதர காரணங்களுக்காக 1,89,964 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற இயலாத நிலையில் அவர்களது பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தின் மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பட்டியல்களை பார்த்துக் கொள்ள இயலும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலராலும் நடத்தப்பட்ட கூட்ட விபரத்தையும் இந்த வலைதளத்தின் மூலம் பார்க்க இயலும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.ec.gov.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பமாகவும் பதிவு செய்யலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1901 ஆக இருந்த நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று வரம்பு மாற்றியமைக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி மறு சீரமைப்புக்கு பின்னர் 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து, தற்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள எழு தொகுதிகளிலும் மொத்தம் 1999 வாக்குச்சாவடிகள் உள்ளது. இவை 1009 வாக்குச்சாவடி அமைவிடங்களில் அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 29.10.2025, 24.11.2025, 08.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய தேதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. 14.12.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு பார்வையாளர் (Special Roll Observer) தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.மேலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள எழு சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், திரும்பப் பெற இயலாத கணக்கெடுப்புப் படிவங்கள் குறித்து கூட்டம் நடத்தி அப்பட்டியல்களை அளித்துள்ளனர். இவ்வாறு அனைத்து நிலைகளிலும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த 1901 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றினர். மேலும், வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகளின் 199 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றினர். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த தீவிரத் திருத்தப் பணியில் பங்காற்றியுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wiremen Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால், 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் வடசென்னை, அம்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஓசூர், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர், நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மூன்று ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடாயில்லா ரேபியர் தறிகளாக (Rapier Shuttleless looms) தரம் உயர்த்த மூலதன மானியங்கள் விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தின் வரையறையின்படி, ஆண்டு தோறும் 3000 விசைத்தறிகளை நவீனமாக்கும் பொருட்டு ரூ.30.00/- கோடி நிதியும், புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்திட ரூ.15.00/- கோடியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் பொருட்டு ரூ.5.00/- கோடி என மொத்தம் ரூ.50.00/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட சிறப்பம்சங்கள் அடிப்படையில் விசைத்தறிகளை கொள்முதல் செய்திடலாம். வழக்கமான விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடா இல்லா ரேபியர் தறிகளாகத் (Shuttleless Rapier Looms) தரம் உயர்த்துவதற்கு (With Tuck in device) 50% மூலதன மானியம் அல்லது ரூ.1.00/- இலட்சம் (ஒரு தறிக்கு With Tuck in device) இதில் எது குறைவோ அத்தொகை. (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 10 தறிகள்)புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் அல்லது ரூ.1.50/- இலட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை. (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 5 தறிகள்) பொது வசதி மையம் அமைத்திட (Common Facility Centre - Warping and Sizing unit, Testing Lab, Design Studio and Sample Production centre) 25% மூலதன மானியம் அல்லது ரூ.60.00/- இலட்சம் (இதில் எது குறைவோ அத்தொகை)மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு அறை எண்.513, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்-626002 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் கைத்தறித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
TNPSC Group –I, Group-IV, Group-II/IIA, TNUSRB, SSC, Railway போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்காக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்தப் பயிற்சி வகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் ரூ.800/hr வழங்கப்படும். மேலும், 22.12.2025 அன்று காலை 11:00 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு வரும்போது பயிற்றுநர்கள் பாடக்குறிப்புகள், PPT, முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், மாதிரித் தேர்வு நடத்துவதற்கான கேள்வி மற்றும் பதில்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) ஆகியவற்றை தயார் செய்து எடுத்துவர வேண்டும்.மேலும், மேற்கண்ட தேர்வுகளில் முதன்மை தேர்வுகளில் கலந்து கொண்ட அனுபமிக்க இளைஞர்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் தங்களது சுயவிவர படிவத்தினை https://forms.gle/PH1QbUprWxVbp3LQA google form அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் அனுப்புவதோடு நேரில் கலந்து கொள்ளவும். மேலும், கூடுதல் தகவலுக்கு 93601-71161 என்ற Whatsapp எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தையல் பயிற்சி பெற்ற 28 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.1.57 இலட்சம் மதிப்பில் மின்மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்.பின்னர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 146 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.1.38 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களையும், ரூ.60 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 98 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.அந்த வகையில், ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் 141 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களும், திருமண நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.தடைகளைத் தாண்டி சமுதாயத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார். அத்தகைய முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நல அலுவலர் திருமதி திலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், அரசு அலுவலர்கள், பயனாளிகள், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (18.12.2025) குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழும அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி திரு கே.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் விருதுநகர் 'மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தெ. கண்ணன் த.கா. ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு, என். ஓ. சுகபுத்ரா I A S., அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். அரசு நிருவாகம் முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1956-இல் சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 17.12.2025 ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி சாத்தூர் நகராட்சி மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவல்நிலையம் வழியாக கடைவீதி வரை(காய்கறி சந்தை) வரை நடைபெற்றது.இப்பேரணியின் போது, ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளும், ஒட்டுவில்லைகளும் வழங்கப்பட்டன.இப்பேரணியில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ந.ஜோதிலெட்சுமி, சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I AS., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.மேலும், மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக பல முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மதி சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.இதன்மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும். மேலும், மாணவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துகள் மிக்க உணவாகவும் அமைகிறது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சிறுதானிய உணவகத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், இ.ஆ.ப., உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விளாம்பட்டியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், 72 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், பாலின சமத்துவ உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.அதனைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.