தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 –ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கரபரிவர்த்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பபடிவத்தினை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600-005. என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC, & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட ( Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சம்,இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 31.10.2025கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்:15.11.2025 புதுப்பித்தல்: இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் ( Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.புதியது: இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம். கல்வி நிறுவனங்கள் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட தேசிய கல்வி உதவித்தொகை NSP (https://scholarships.gov.in) இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் நென்மேனி ஊராட்சியில் (24.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், இம்முகாம்களை அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் சாத்தூர் வட்டம் நென்மேனி ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்தலைமையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.எனவே, இம்முகாமினை அனைத்து பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 23.09.2025 அன்று விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.5.31 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (24.10.2025) குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.பின்னர், புதிய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும், 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 9 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவில்லிபுத்தூரில் ரூ.5.31 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டட தரைத்தளத்தில், வட்டாட்சியர் அலுவலக அறை, பொது பிரிவு அலுவலர் அறை, தேர்தல் அறை, சமூக பாதுகாப்பு திட்ட அறை, வட்ட வழங்கல் பிரிவு அலுவலர் அறை, ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலக அறை, இ-சேவை மைய அறை, பதிவு அறை, கூட்டரங்கம், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்,முதல் தளத்தில், இரண்டு பதிவு அறைகள், நில அளவைப்பிரிவு, மினி கூட்டரங்கு, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மொத்தம் சுமார் 13,351 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.பாலமுருகன், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2025 முதல்31.10.2025 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II குறித்தும், தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.எனவே, 01.11.2025 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு அப்பகுதி வார்டு உறுப்பினர் தலைமையில், மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு அவ்வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்களை 27.10.2025. 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் நடத்தி பின்வரும் பொருள்கள் குறித்து விவாதித்து, அப்பொருள்களில் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் மூன்று (3) கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி, இக்கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்து அதில் உள்ள இடர்பாடுகளை விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில் திறந்தவெளி இடங்கள், சாலையோரப் பகுதிகள், குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளில் சமூக ஆர்வலர்கள் தொழிற்சாலை/இதர நிறுவன பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் “நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்து விவாதித்தல். நகாரட்சிப் பகுதிகளில் நகராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். நகராட்சிகளில் அமைந்துள்ள நீர்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீராதாரங்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. எனவே, மேற்கண்ட கருப்பொருள் தொடர்பாக விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 01 மாநகராட்சி, 05 நகராட்சிகள் மற்றும் 09 பேரூராட்சிகளின் எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 27.10.2025 (திங்கள்). 28.10.2025(செவ்வாய்) மற்றும் 29.10.2025 (புதன்) ஆகிய 03 தினங்களில் சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர் தலைமையில் அந்தந்த உள்ளாட்சி துறையின் அலுவலக கூட்டுநர் மூலம், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக்கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு , மேற்கண்ட 09 பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் 03 கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை தீர்மானமாக இயற்றி “முதல்வரின் முகவரி மனு” என்ற அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டார்ட் அப்கள் விரைவாக வளரும் திறனை கொண்டிருப்பதால் ஒரு பெரிய அளவிலான சந்தையை அடைய முடியும். மேலும் புதிய வணிகம் என்பதால் அவற்றின் எதிர்கால சந்தை தேவையும் நிச்சயமற்றதாக இருக்கும். எனவே இத்தொழிலுக்கு அரசு மானியம் அளித்து ஸ்டார்ட் அப்கள் தொடங்க வழிவகுக்கிறது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்திருத்தல் அவசியம். இந்நிறுவனம் கம்பெனி சட்டம் 2013-ன் கீழ் தனியார் நிறுவனமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக லாபம் 5 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பிரிந்த கிளை நிறுவனமாகவோ அல்லது மறு சீரமைக்கப்பட்டதாகவோ அல்லது மற்றொரு நிறுவனத்தின் கிளை கூட்டு நிறுவனமாகவோ இருக்கக்கூடாது. புத்தாக்க நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு அல்லது சமூகத்தின் மீது நேர்மறை தாக்கத்தை கொண்டிருத்தல் வேண்டும். புத்தாக்க நிறுவனம் அரசிடமிருந்தோ அல்லது அரசு சார் பிற நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும்.பயிர், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். மொத்த நிதியில் 5 சதவீத நிதியுதவி முதல் நிலையில் உள்ள சிறிய அளவிலான மாதிரி தயாரிக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சம் ஆகும்.புதுமை தொழில் தொடங்குவது இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு அலகிற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே துவங்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் சந்தையை விரிவுபடுத்த ஒரு அலகிற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. விண்ணப்பித்தினை www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மதிப்பீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். இதில் தகுதியற்றதாக கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு சரியான பதில் கிடைக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் மறுபரிசீலனை செய்யப்படும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர், வேளாண் வணிகம், 105 மதுரை சாலை, ஒழுங்குமுறை சந்தைக் குழு வளாகம், விருதுநகர் 626001 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்திட சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ரூ.10 கோடி வரையிலான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களுக்கான புதிய மதிப்பு கூட்டு மையங்களை நிறுவுவதற்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், தொழில் முன்னேற்றத்தில் பெண்கள் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு குறிப்பாக இவர்களில் பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் என்று அதிகபட்சமாக ரூ.1.5 கோடி மானியம் வழங்கப்படும் . திட்டச் செலவில் இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவை உள்ளடக்கிக் கொள்ளலாம். ஆனால், நிலம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவை திட்டச் செலவில் நீங்கலாக்கப்படும். மேலும் பின்னேற்பு தொகையானது முறையே 60% மற்றும் 40% ஆகிய இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். இதைத் தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5% வட்டிமானியம் 5 ஆண்டுகளுக்கு பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். மேலும் இத்திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்த பட்சம் 5 சதவீதம் ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள திட்ட நிதியை வங்கியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் அரசின் கடன் உத்திரவாதத்துடன் (CGTMSE) 2 கோடி வரை கடனுதவி 9% வட்டியுடன் பெறலாம். மேலும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதிக்கு 3% வட்டி மானியம் பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மூலம் முன்மொழியப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவினரால் கூர்ந்தாய்வு செய்யப்படும். பின்னர் அவை மாநில அலவிளான திட்ட ஒப்புதல் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தலைமையில் இயங்கும் திட்ட ஒப்புதல் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து பயனாளிகளை தேர்வு செய்வார்கள்.மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர், வேளாண் வணிகம், 105 மதுரை சாலை, ஒழுங்குமுறை சந்தைக் குழு வளாகம், விருதுநகர் 626001 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (23.10.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் ஊராட்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ரூ.8.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு வட்டம், குன்னூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் சார்பில், ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாத 9 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிவரும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கி கட்டுமான பணிகளை பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஸ்ரீஅம்பாள் கிராண்ட் திருமண மண்டபத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்து 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.மத்திய அரசு, அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது. 7ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3% வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.இந்த உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படுகிறது.இக்கருத்தரங்கில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், நபார்டு வங்கி, முன்னோடி வங்கி, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி மு.சுமதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இக்கருத்தரங்கில் வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி எம்.செல்வி, மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) திருமதி.அனுசா எலிசபெத், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி எஸ்.சுபா வாசுகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆர்.பாண்டிசெல்வன், இணைப்பதிவாளர்(மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) திரு.ஜீவா, துணை இயக்குநர்(மாவட்ட தொழில் மையம்;) திரு.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் தொடர்பாக விரிவான திட்ட விளக்க உரையாற்றினார்கள்.மேலும் இக்கருத்தரங்கில் விவசாயிகள், வங்கியாளர்களுடன் இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு, பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் உறுப்பினர்கள் என சுமார் 140 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.