25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 10, 2024

தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்இரங்கல் மற்றும் ஆறுதல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்இரங்கல் மற்றும் ஆறுதல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில்  (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

May 09, 2024

உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வு- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம்.இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.ஆலோசனை அலுவலக அறை கைப்பேசி எண்கள் :-1) 80729184672) 75985101143) 88389453434) 9597069842ஒன்றியம் வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் :-1) அருப்புக்கோட்டை - 87542710452) காரியாபட்டி - 97895600113) நரிக்குடி - 94885019384) இராஜபாளையம் - 97883969465) சாத்தூர் - 70107623086) சிவகாசி - 95002054147) திருவில்லிபுத்தூர் - 82208464448) திருச்சுழி - 99447624249) வெம்பக்கோட்டை - 944366946210) விருதுநகர் - 9488988222

May 08, 2024

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (07.05.2024) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் இந்த உலக வாழ்க்கையை முடிக்கின்ற வரை வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நீங்கள் படிக்கின்ற போது, வேலைக்கு செல்லும் போது என வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெற்றி தோல்வி என்பது நீண்ட கால பயணத்தில் மாறி மாறி வரும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வு.தோல்வி என்பது நேற்றோடு முடிந்துவிட்டது. அடுத்து வெற்றிக்கான தொடக்கம். இதை எப்படி வெற்றியாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும். மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.தேர்ச்சி பெறாத மாணாவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன்; திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதோடு உங்களுக்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது.நமது மாவட்டத்தில் சுமார் 88 கல்லூரிகள் இருக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைவருக்கும் கல்லூரியில் இடம் உண்டு. வசதி வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் அரசினுடைய கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது.அரசு திட்டங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு கூட நன்கொடையாளர்கள் மூலமாக உதவிகள் செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.படிப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். தேர்ச்சி பெறாத பாடங்களை மறுபடியும் தேர்வு எழுதுவது என்பதும் கடினமாகத் தான் இருக்கும். ஆனால் நீங்கள் தற்போது எடுக்கும் முயற்சிகள் உங்களின் நீண்ட காலத்திற்கு நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கான இன்பத்தையும் வெற்றிகளையும் தரும்.அதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வருத்தப்பட வேண்டாம். தோல்வி என்பது நேற்றோடு முடிந்து விட்டது. நீங்கள் அடுத்த வெற்றிக்கான முதற்படியில் இருக்கிறீர்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த தோல்வியை நீங்கள் வெற்றியாக மாற்ற முடியும். இந்த ஆண்டே நீங்கள் மற்ற உங்களுடைய நண்பர்களை போல உயர்கல்விக்கு கல்லூரியில் சேர முடியும். அனைத்து வகையிலும் உதவி செய்வதற்கு அரசு நிர்வாகமும், அரசு அலுவலர்களும் எப்பொழுதும் உங்களோடு உறுதுணையாக இருப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.உங்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளோம். அதில் கலந்து கொண்டு அடுத்து வரும் நாட்களுக்கு தினந்தோறும் வகுப்புகளுக்கு வந்து, ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பாடங்களை கற்றுக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று, இந்த ஆண்டே கல்லூரியில் சேர முடியும். எனவே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு தற்போதை விட எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

May 08, 2024

கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சியே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.மேய்ச்சல் நேரத்தில் மாற்றம் :-வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு, கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட வேண்டும்.  காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்.கறவை மாடுகள் பராமரிப்பு:-கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும்.  தண்ணீரின் மீது கலப்புத்தீவனத்தை சிறிதளவு தூவும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும்.  தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர்த் தெளிப்பான்கள், மின் விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு உலர் தீவனத்தை பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் கொடுக்கலாம்.கோழிகள் பராமரிப்பு:-கோடை காலத்தில் கோழிகளுக்கு விடியற்காலைப் பொழுதிலும் இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும்.  எல்லா நேரங்களிலும் சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  குடிநீரில் வைட்டமின்கள் பி-காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.  அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும்.ஆடுகள் பராமரிப்பு:-ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.  தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டும்.  ஆடுகளுக்கு பட்டிகளில் தாது உப்புக்கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.  புரதச்சத்து மிக்க வெல்வேல் மற்றும் கருவேல உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.செல்லப்பிராணிகள் பராமரிப்பு:-செல்லப்பிராணிகளை காரில் உள்பகுதிகளில் அடைத்து வைப்பதையும் நேரடியாக வெயில்படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனை, மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  கால்நடை மருந்தகங்களில் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தேவையான ஏற்பாடு செய்ய கால்நடை உதவி மருத்துவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸை 1962 என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

May 08, 2024

Coffee With Collector” என்ற 71-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மார்ச்- 2024  12 ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடனான “Coffee With Collector” என்ற 71-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை, துறைகளை தேர்ந்தெடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  71-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து செயல்பட வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பில் எடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

May 08, 2024

அனைத்து வாகன புகை பரிசோதனை நிலையங்கள் 06.05.2024 முதல் புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 version) பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகிறது.இதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகை பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன. புகை பரிசோதனை மையங்கள் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வாகனபுகை பரிசோதனை மையங்கள் திடீர் தணிக்கை செய்யப்பட்டன.வாகன புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் போக்குவரத்துத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய நடைமுறை 06.05.2024 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்த செயல்முறை விளக்கத்தை மாநிலம் முழுவதிலுமுள்ள வாகன புகை பரிசோதனை மைய சோதனையாளர், உரிமையாளர் ஆகியோருக்கு அனைத்து வட்டாரப் அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வழங்குவார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் 5 புகை பரிசோதனை மையங்களும், அருப்புக்கோட்டையில் 1, சிவகாசியில் 4, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதியில் 4 ஆக மொத்தம் 14 வாகன புகை பரிசோதனை மையங்கள் உள்ளன.புதிய தொழில்நுட்பத்தின் படி அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்திற்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில் இந்த PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயக்க வேண்டும். இந்த புதிய Version GPS  வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகன புகை பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். அதைப்போலவே சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு (GPS enabled Photo with Latitude, Longtitude) இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகை பரிசோதனையை இனி செய்ய இயலாது. எனவே, மேற்கண்ட முக்கிய அம்சங்கள் உள்ளதால் இந்த புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 version) 06.05.2024 முதல் அனைத்து வாகன புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் வாகன புகை பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 08, 2024

தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கீழ்காணும் பிரிவுகளில் சிறப்பாக தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களை விருதுகளுக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. 1. மாநில அளவிலான சிறந்த வேளாண்-சார் உற்பத்தி தொழில் முனைவோருக்கான விருது2. மாநில அளவிலான சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருது3. சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சார்ந்த தொழில் முனைவோருக்கான மாநில அளவிலான விருது4. மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது5. மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது6. மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு விருதுகள்  வழங்கப்படுகிறது.    இவ்விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்கள் 2023-24 நிதியாண்டிற்கு முன்னதாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் உத்யம் பதிவுச்சான்றும் பெற்றிருக்க வேண்டும். கீழ்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2024 ஆகும்.  விண்ணப்பப் படிவங்களை  awards.fametn.com  என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து உரிய இணைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் மற்றும்  இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

May 07, 2024

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் (06.05.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நடையனேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பயன்பாட்டு மையத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டப்பட்டு வருவதையும்,புதுக்கோட்டை ஊராட்சி பர்மா காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.03 இலட்சம் மதிப்பில் ஊரணி துர்வார்தல் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டு வருவதையும்,செவலூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.35 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும்,எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எம்.புதுப்பட்டி கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், தேவர்குளம் ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32.80 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும்,ஆனையூர் ஊராட்சியில் லட்சுமியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இப்பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

May 07, 2024

சிறப்பு உண்டு உறைவிட ஆங்கிலம் பேசும் திறன் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வி பி எம் எம் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ  மாணவிகள்  கலந்துகொண்ட சிறப்பு உண்டு உறைவிட  ஆங்கிலம்  பேசும் திறன் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வீ. ப. ஜெயசீலன் I A S ( 06.05 2024) அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார் .

May 06, 2024

கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (04.05.2024) கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.இரா.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அடுத்து வரும் சில நாள்களிலும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத் துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.கோடை காலத்தில் சரும பாதிப்புகள், உடல் சோா்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது.இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று ஓஆா்எஸ் கரைசலை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், ஓ.ஆர்.எஸ். கரைசல் பொடிகளும் கையிருப்பில் உள்ளன. இதைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அவற்றை மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊரக மற்றும் நகர பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாகவும், ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையங்கள் மூலமாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை மின்சார வாரிய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்எனஇக்கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் இந்த கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 69 70

AD's



More News