விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.10.2025) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் அவர்கள் சிறுபான்மையினர் நலன் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட முஸ்லீம் உதவும் சங்கம் மூலம் 200 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட கிருஸ்துவ உதவும் சங்கம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 210 பயனாளிகளுக்கு ரூ.24.54 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாக கொண்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும், சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்சிறுபான்மையினர்நலன்சிறப்புக்குழுவினைஅமைத்துஅரசாணையினைவெளியிட்டார்கள்.அதனடிப்படையில், (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய) சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.சிறுபான்மையினருக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து இதுவரை 10 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, இன்று 11 ஆவது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு பொது கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைத்திட விருதுநகர் வட்டம் கோட்டைப்பட்டியில் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் தலா ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி நிலம் கிருஸ்துவ/ இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிடப்பட்டது.மேலும், இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்திட நிலம் கோரி வரும் மனுக்கள், தேவாலயம்/மசூதி கட்டிட தடையில்லாச் சான்றிதழ் கோரி வரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்திட வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இக்கூட்டத்தில் முஸ்ஸிம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் மானியத்திட்டத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், கிறித்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்/முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(TAMCO) மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம்(PMJVK) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், சிறுபான்மையினர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சிறுபான்மையின இன மக்களுக்கு அனைத்து அரசு திட்டங்கள் சார்ந்த உதவிகளை பெற தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு.த.ஜான்சன் தேவசகாயம், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), கிருஸ்துவ/முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். அதன்படி பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்காக தங்களது பங்கினை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்தவகையில்2025ஆம்ஆண்டுடாக்டர்அம்பேத்கர்விருதுபெறவிரும்புவோர்,தங்களைப்பற்றியமுழுவிவரங்களுடன் https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/ annalambedkar_award_applnform_t_290824.pdf (or) https://tinyurl.com/ambedkaraward என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 - ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2025-26) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ (அ) பொதுசேவைமையங்கள் (Common Service Centres(CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.491/- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.319/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.136/- எனவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.160/- எனவும், பாசி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.251/- எனவும், உளுந்து, துவரை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252/- எனவும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.473/- எனவும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314/- எனவும், எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.122/- எனவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.188/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசிநேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் கொத்தமல்லி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.583/- எனவும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1109/- எனவும், வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1573/- எனவும், வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4426/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின், நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2025 அன்றும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2025 அன்றும், சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 16.12.2025 அன்றும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2025 அன்றும் மற்றும் எள் பயிருக்கு 31.01.2026 அன்றும் கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு, பயிர் காப்பீடு பதிவு செய்ய கொத்தமல்லி பயிருக்கு 17.01.2026 அன்றும், மிளகாய், வெங்காயம் பயிருக்கு 31.01.2026 அன்றும் மற்றும் வாழை பயிர்களுக்கு 28.02.2026 அன்றும் கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதினையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைபேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீட்டை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி, தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.10.2025) வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.01.10.2025 முதல் 31.12.2025 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கடந்த 15.10.2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு, பாதிக்கப்பட்ட இடங்கள், மனித இழப்பு, கால்நடைகள் இழப்பு, குடியிருப்புகள் சேதம் உள்ளிட்டவற்றை முறையாக கணக்கிடப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்து, கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டு, போதியளவு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, உபரி நீரை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் கரையோரங்களில் வசிக்கக் கூடிய பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர், மின்சாரம், சாலை, பொது சுகாதாரம் ஆகியவைகளை அவ்வப்போது கண்காணித்து உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும்.குடிநீர்தொட்டிகளில்குளோரினேசன்செய்யப்பட்டகுடிநீரினைவிநியோகம்செய்யப்படவேண்டும்.நெடுஞ்சாலைத்துறை சார்பில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திட வேண்டும்.உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக்குழு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை சார்பில், பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் இயற்கை இடர்பாடுகள் போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான பயிற்சி அளித்திட வேண்டும். மீட்புப்பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள் ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.வேளாண்மைத்துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிட வேண்டும். விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், விதைகள், உரங்களை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.மின்சாரத்துறை சார்பில், மின்சாரம் தடையின்றி கிடைத்திடவும், பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்திடவும், போதுமான அளவு மின்கம்பங்கள் மற்றும் அவசர காலங்களில் பணியாற்றிட பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டிடங்களை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டு பழுந்தடைந்துள்ள கட்டடங்களை மழைக்காலங்களில் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கள் பெரியாறு அணையில் (21.10.2025) வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராஜந்திரன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S, அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில்வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பஞ்சாலை அதிபர்கள்ஆகியோர்களுடனானகலந்துரையாடல் நிகழ்ச்சி (17.10.2025) அன்று நடைபெற்றது. பஞ்சாலை நடத்துபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காகஇந்தகலந்துரையாடல்நிகழ்ச்சிநடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பருத்தி மற்றும் பருத்தி சார்ந்த தொழில்கள் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெறும் விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் தான் உலகத்தில் உள்ள எல்லா வகையான பருத்தி இரகங்கள் பயிரிடப்படுகின்றன.மேலும் பருத்தியின் பரப்பளவு உலக நாடுகளில் இந்தியா முதன்மை இடம் வகிக்கிறது. இருந்தாலும் பல இடர்பாடுகளினால் பருத்தியின் விளைச்சல் குறைவதாகவும் அதனால் இங்குள்ள பஞ்சாலைகள் வெளிமாநில பருத்தியை நம்பி இருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.இந்திய பருத்தி கழக (கோயம்புத்தூர்) பொது மேலாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் இராஜபாளையதில் ஒரு பருத்தி கொள்முதல் நிலையம் ஆரம்பிக்க உள்ளதாகவும், இதற்கு குறைந்தது 3000 ஹெக்டர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட வேண்டும் எனவும், இந்த பகுதியை சுற்றி பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள், வணிக வளாகம், சேமிப்பு கிடங்கு ஆகியவை இருக்க வேண்டும் என எடுத்துக்கூறினார். மேலும், விவசாயிகள் இக்கொள்முதல் நிலையத்தில் பருத்தியை விற்பதற்கு தரமான பருத்தியை கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கலாம். இதற்கு முன்னதாக விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையை வைத்து கப்பாஸ் என்ற இணையதள பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். வியாபாரத்தில் உள்ள இடர்பாடகளான பருத்தியின் அதிக ஈரப்பதம், பருத்தி இழையின் குறைந்த நிளம் ஆகியவை ஆலையின் தொழிலை பாதிக்கின்றன என பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இதில் பங்குபெற்ற விவசாயிகள் விதையின் தரம் குறைந்து காணப்படுவதாகவும், அதிகமான பூச்சி நோய்கள், அதிகமான ஆட் கூலி, அதிக செலவு ஆகியவற்றை பட்டியலிட்டனர். இதைத்தொடர்ந்து இதற்கான காரணங்களை தென்னந்திய பருத்தி அபிவிருத்தி ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி திருமதி எம்.ஆசாராணி அவர்கள் பட்டியலிட்டார். முக்கியமாக விவசாயிகள் தரமற்ற பருத்தி விதைகளை பயன்படுத்துவதும், விதைகளை பஞ்சாலைகள் மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்யும் பன்னி பருத்தி விதையை பயன்படுத்துவதால், இரகத்தின் தூய்மை இழந்து, தரமற்ற பருத்தியை கொடுக்கிறது. இந்த விஞ்ஞான பூர்வமான தகவல்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதை தொடர்ந்து, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர் சங்கர் நாராயணன், முனைவர் உஷாராணி, முனைவர் வளர்மதி ஆகியோர் பருத்தி விளைச்சலை ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் அளவுக்கு பெருக்கிட உயர் தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறினார். மேலும் பருத்தியுடன் ஊடுபயிர் சாகுபடி செய்து மானாவரி நிலத்தில் கூடுதல் வருமானத்தை பெறலாம். சில சமயங்களில் பருவநிலை தவறும் போது ஊடுபயிர்கள் விவசாய செலவை ஈடுகட்ட பயன்படும் என்று எடுத்தும் கூறினார்கள்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பங்களை வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளிடம் பரவலாக்கப்படுகிறது. மேலும், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கால சூழ்நிலைகளுக்கு கேற்ப இணைய தளங்கள் மூலமாகவும், கைபேசி மூலாகவும் உடனுக்குடன் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்படுகிறது. நல்ல தரமான தங்களின் நிலத்திற்கு ஏற்ற சான்றளிக்கப்பட்ட பருத்தி விதைகள், ஈரப்பதம் குறைந்த சதவீதம் பருத்தி, சருகு மற்றும் தூய்மையான பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் அடைய தகுந்த பயிற்சி கொடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாத்து வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சு.ஜோதிமணி, பொது மேலாளர் திரு.ஆர்.ஜெயகுமார், முனைவர்கள் திரு.சங்கர் நாராயணன், திருமதி உஷாராணி, திருமதி வளர்மதி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விவசாயிகள், மற்றும் பஞ்சாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி, என்.மேட்டுப்பட்டியில் (18.10.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது 02.08.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமானது நமது விருதுநகர் மாவட்டத்தில் 11-வது முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 1400 பேருக்கு இரத்த பரிசோதனைகள், மற்றும் பிற பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்பது நமது மருத்துவத்துறையாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று சாத்தூர் வட்டம், எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி, என்.மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (17.10.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர்.மாவட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் தவறாது கலந்து கொண்டு மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு கட்டாயம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுவதை தடுக்க குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறும், பயிர்சேத நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து பயிர் இழப்பீடு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கவும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதை மேல் நடவடிக்கை எடுக்கவும், பருத்தி விலை வீழ்ச்சியால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு பருத்திக்கு உரிய விலை கிடைக்கவும், பருத்தி காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா கொள்முதலுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தென்னை பயிருக்கு காப்பீடு கிடைக்க மேல் நடவடிக்கை எடுக்கவும், சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சீரமைத்திடவும், மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கிடவும், சேத்தூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திடவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சமூக பொறுப்புணர்வு நிதியில் சீரமைத்திடவும், அத்தி துண்டு முதல் கல்லுக் கட்டு ஊரணி வரை தார்ச்சாலை அமைக்க மேல் நடவடிக்கை எடுக்குமாறும், நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்க உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும், பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட திட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இக்கூட்டத்தில் துணை இயக்குநர்( மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) மரு.இரா.முருகன், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,), திருமதி அ.அம்சவேணி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் ரூ.6.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அருங்காட்சியக கட்டிட பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டியபட்டி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான அரசு திட்டங்கள், வங்கி கடனுதவி, மானியங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் உப்பத்தூரில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகளின் முன்னேற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், சாத்தூர் துணை மின் நிலைய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், மின் நிலையத்தில் தேவையான மின் உபகரணங்கள் இருப்பு குறித்தும், மழைக்காலங்களில் சேதமடையும் மின் கம்பங்களுக்கு பதிலாக போதுமான அளவு இருப்பு உள்ள மின் கம்பங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் மேட்டமலை ஊராட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை நேரில் சென்று வழங்கி, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.அதனைத்தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.மேலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் மகளிர் குழுவின் மூலம் கடன் பெற்று செயல்பட்டு வரும் பிளவர் மில்லினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயன் பெறும் சுய உதவிக்குழுக்களின் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், இதன் மூலம் சுய உதவி குழுக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.10.2025) வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை துரிதமான முறையில் மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களின் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S, அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்கவும், மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திடவும், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பலவீனமான நீர்நிலைகளின் கரைகள் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், வடகிழக்கு பருவமழை காலங்களில் கிராமங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது மக்களை காப்பாற்றிட ஊராட்சி செயலர்கள் தக்க வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிடவும், மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ளக்காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.தெ.கண்ணன், த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.