விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின், கீழ் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ / மாணவியர்கள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மேற்படி 9445477016 எனற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், சேத்தூரில் (21.07.2026) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.தமிழக அரசானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையினை பெற்றுத்தருவதற்காகவும், வியாபாரிகள் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி தேங்காய்காயினை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையிலும் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.அதனை உறுதி செய்யும் வகையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளிப்படையான, தொழில்நுட்ப அடிப்படையிலான இணையதள ஏல முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் போட்டி அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேங்காய் கொள்முதல் செய்து மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெற முடியும். தரமான விளைபொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், சந்தை தொடர்பான தகவல்கள், ஏல விவரங்கள் மற்றும் விலை நிலவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும்.மேலும், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, வெளிப்படையான விற்பனை நடைமுறை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதால் பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்தல் நவீனமயமாக்கப்பட்டு, வேளாண் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தில் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து அரசின் இத்திட்டத்தின் முழுப் பயனையும் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு சரியான விலை, இடைத்தரகர்களின்றி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாவட்டத்தில் 3 இடங்களில் தென்னை கொள்முதல் செய்து, மின்னணு சந்தை மூலம் சரியான விலை கிடைக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி தென்னை விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (20.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.30 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 690 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நடத்தும் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாமானது விருதுநகரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 20.07.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.இம்முகாமில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட முன்னணி நிறுவனங்கள் நேரடியாக தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை நடத்தயிருப்பதால் இந்த சேர்க்கை முகாமில் அவசியம் கலந்து கொண்டு நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் சேர்ந்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் National Apprenticeship Certificate (NAC) பெற்றுக்கொள்ளலாம்.இந்த முகாமில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்கள் மற்றும் NCVT, SCVT மற்றும் COE முறையில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும், ஐடிஐ சான்று இல்லாத 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு, பாலிடெகனிக், பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் Fresher Apprentice ஆக நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியின் போது உரிய உதவித்தொகையும் வழங்கப்படும்.NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. எனவே, உரிய கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், சின்னமூப்பன் பட்டியில் வருவாய்த்துறை மூலம் (18.07.2026) கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு சென்று வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் (19.07.2026) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் மாவட்ட கலை விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும், மாவட்ட கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறந்த ஓவிய, சிற்ப படைப்பாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.கலை மற்றும் பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து, இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இளம் தலைமுறையினர்கள் விளையாட்டு, கலை, ஓவியம், சிற்பம் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் போது அவர்களின் தனித்திறமைகள் வளர்வதோடு நமது சமுதாயத்தை நல்ல நோக்கத் தோடு கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் இதனை கடத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருது பெற்ற செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்) ஆகியோர்களுக்கு தலா ரூ.4000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை வளர்மணி விருது பெற்ற திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்), திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்) ரூ.6000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்,கலை சுடர்மணி விருது பெற்ற திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்) ரூ.10,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை நன்மணி விருது பெற்ற திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்) ரூ.15,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ரூ.20,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும் என மொத்தம் 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், ஓவிய, சிற்பக் கண்காட்சியில் வெற்றி பெற்ற 21 நபர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர்(திருநெல்வேலி) திரு.து.சிவப்புகழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, அரசு அலுவலர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட வத்தல் மண்டபத்தில் 288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை (17.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாத்திடவும், பிறர் துணையின்றி தங்களது தேவையினை தாய்களே பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்பதனை உறுதி படுத்திடவும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பல்வேறு தடைகளை நீக்குதல், அனைத்து நிலைகளிலும் சமத்துவமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், எளிதான முறையில் அரசின நலத்திட்டங்களை கிடைக்கச் செய்தல், வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பு உறுதி செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசால் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், பிசியோதெரபி சிகிச்சை, ஆக்குபேசனல் தெரபி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி, கண் பரிசோதனை போன்றவை வழங்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 இடங்களில் வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் இளந்தோப்பு, ராமசாமி ராஜா அரசு மருத்துவமனை, நரிக்குடி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர் கன்னிசேரி புதூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், காரியாபட்டி காட்டுகுத்தகை கரிசல்குளம், பெண்கள் பிரிவு, அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை பந்தல்குடி, பல் மருத்துவ பிரிவு, நகர்புற சுகாதார மையம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், ஆண்டுதோறும் ALIMCO நிறுவனத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் NLC India Limited நிறுவன CSR நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வினை மேம்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன செயல் இயக்குநர் திரு.மூர்த்தி, மனித வள மேலாண் இயக்குநர் திரு.சமீர் சுவரப், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வ.செந்தில்வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.உள்ளூர் படைப்பாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்திடவும், அவர்களது தனித்திறன்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் அதற்கான வாய்ப்புத்தளங்களை ஏற்படுத்தித்தரும் பொருட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.இதன் மூலம் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த இயலவில்லை என்ற குறைகளை கலைந்திடவும், நல்ல ஓவியம் மற்றும் சிற்பங்களைக் காண வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளை தவிர்த்திடும் பொருட்டு நம் ஊரிலேயே கண்காட்சி நடைபடுத்தப்படுகிறது.இக்குறுகிய கால பயிற்சிகளில் ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் குறித்த பயிற்சியும், சிற்பங்கள் உருவாக்குவதற்கான சிற்பக்கலைக்கான பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு துறை திரு. து.சிவப்புகழ் (உதவி இயக்குநர்) அவர்கள் கலந்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (17.07.2026) ”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் முதல் கட்டமானது 17.07.2026 முதல் 31.07.2026 வரை சுயகணக்கெடுப்பு முறையிலும், இரண்டாம் கட்டமானது 01.08.2026 முதல் 31.08.2026 வரை கள கணக்கெடுப்பாளர்கள் மூலமும் நடைபெறும். மேலும் இப்பணிக்காக 3000 கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த சுய கணக்கெடுப்பின் (Self Enumeration) மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கல்வி, வீடு, சாலை மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த திட்டத்தையும் அதன் தேவையினையும் அறிய இந்த சுய கணக்கெடுப்பு விவரங்கள் உதவுகின்றன.எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் சுய விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவுடன் 11 இலக்க கணக்கெடுப்பு குறிப்பு எண் (Self Enumeration Reference Number (SRN) வழங்கப்படுகிறது. இந்த SRN-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்னர் கணக்கெடுப்பாளர் (Enumerator) உங்கள் இல்லத்திற்கு வரும்போது, அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, இந்த சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை கணக்கெடுப்பாளரிடம் வழங்குவதன் மூலம், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அவர் சரிபார்த்து உறுதி செய்வார் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார் .
தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.இந்த முகாமானது 100 சதவீத உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டந்தோறும் 18.07.2026. 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 18.07.2026 அன்று, வத்திராயிருப்பு வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர் வட்டம் -வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், 25.07.2026 அன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காரியாபட்டி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,01.08.2026 அன்று, இராஜபாளையம் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், 08.08.2026அன்று, வெம்பக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.