உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும். தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30.10.2025 அன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.
அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அதுபோல், அன்னதானத்தில் சமைப்பவர்கள்/கேட்டரிங்க் ஏஜென்ஸி ஆகியோரும், மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்ற கேட்டரிங்க்/சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்தரவு வழங்க வேண்டும்.
இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 மற்றும் 118-ல் உள்ள நியமன அலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரி கடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் அன்னதானம் நடப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
அன்னதானம் ஏற்பாடு செய்பவர்களின் தொடர்பு முகவரி மற்றும் அலைபேசி, அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி, அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவின் விபரம், அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதார நிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் / உற்பத்தியாளர் விபரம் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை, ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதுகுறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதிமொழி மட்டும் போதுமானது.
சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவினர் தொற்றுநோய் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று, உணவு சமைக்கத் தேவைப்படும் பொட்டலமிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்ஃஉரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.
பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும்.
அனைத்து வகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவு மாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப்பெட்டியில் 48 மணி நேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும்.
அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.
சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.
அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும்.
உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.
காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. நீயூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட செய்தித்தாள் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் ஆகியவற்றில் உணவுப் பொருட்களை பொட்டலமிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply