தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். (SRNM) கல்லூரியில் (03.03.2026), உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு..என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
"தமிழக அரசு நுகர்வோருக்குத் தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யப் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பொருளை அல்லது சேவையை விலை கொடுத்தோ அல்லது உரிய வாக்குறுதி அளித்தோ பெறுபவர் எவரோ, அவரே நுகர்வோர் ஆவார். நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி 'தேசிய நுகர்வோர் உரிமைகள் தினமாகவும்', மார்ச் 15-ஆம் தேதி 'உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகவும்' கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நவீன யுகத்தில், நாம் அன்றாடம் பல்வேறு பொருட்களைச் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. எனவே, நுகர்வோர்களாகிய நாம் நமக்குரிய பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, தூய்மையான சுற்றுச்சூழல் உரிமை மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை ஆகிய எட்டு முக்கிய உரிமைகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த உரிமைகளை அறிந்துகொள்வதன் மூலம், உடல்நலத்திற்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தரம் குறைந்த பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும், தரமற்ற பொருட்களால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெறவும் இது வழிவகை செய்கிறது.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கல்வி, பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். நாம் வாங்கும் பொருளின் தரம், அதன் விலைக்கேற்ற சேவை ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் திறனை நுகர்வோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்ற இந்த விழிப்புணர்வுச் செய்திகளைச் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, 2025-26-ஆம் கல்விய ஆண்டிற்கான நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. செந்தில்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. பால்பாண்டி, நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் திரு. சுப்பிரமணியம், மாவட்ட நுகர்வோர் உரிமைக் குழு உறுப்பினர் திரு. முகமது எகியா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply