104 ஏழை எளிய பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவிகள், தையல் இயந்திரங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு இராஜாமணி திருமண மண்டபத்தில் (23.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில்நடைபெற்ற விழாவில், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 104 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.63.29 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.42 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் மற்றும் 75 பயனாளிகளுக்கு தலா ரூ.7500- வீதம் மொத்தம் ரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என ஆக மொத்தம் ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நான்காண்டு காலத்தில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை, வளர்ச்சியை பெற்று இருக்கக் கூடிய மாநிலமாக மாறி இருக்கிறது. அந்த மாற்றம் என்பது பொருளாதார காரணமாக மட்டுமல்லாமல், சமூக நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்கின்றது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற காலகட்டத்தில் இருந்து மகளிர்கள் இலவச பயணம் செய்வதற்கு பேருந்தில் கட்டணம் இல்லா பயணம் செய்ய அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பல கோடி பெண்கள். தொடர்ச்சியாக பயன் அடைந்து வருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆண்டில் ரூ.888 சேமிக்கிறார்கள். ஒரு ஆய்வை எடுத்து பார்க்கும் பொழுது இந்த சேமிப்பு எதற்காக உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் வீட்டில் மருந்து வாங்குவதற்கும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு அது பயன்படுகிறது.மகளிர் உரிமை தொகை மூலம் வழங்கும் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களுடைய குடும்பத்தில் அன்றாடம் முக்கிய செலவுகளை செய்யும் போது அந்த தொகை அவர்களுக்கு கை கொடுக்கின்றது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் திறமை பெற்று இருக்கிறார்கள்.
இந்த முறை நிதிநிலை அறிக்கையில் பெண்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக அடுத்த வரக்கூடிய ஓர் ஆண்டு காலத்தில் ஒரு இலட்சம் மகளிர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.
ஒரு காலத்தில் படிப்பு, ஓட்டுரிமை, சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில்இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, பெண்களுக்கான சம சொத்துரிமை வழங்கும் வகையில்சட்டமாக்கி அது இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்
ஒரு சொத்தை எழுத வேண்டும் என்றால் அந்த சொத்தை பெண்கள் பெயரில் இருந்தால் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளார். இதற்கு காரணம் பெண்கள் பெயரில் சொத்து வரவேண்டும், பொருளாதாரத்தில் வளம்பெற வேண்டும் என்பதற்காக.
பெண்கள் கல்வி பயில்வதற்காக பல்வேறு திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியில், பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டம் என்றோ, கடமை என்றோ பாராமல், அது அவர்களின் உரிமை என்ற நோக்கில் செயல்படுத்துபவர்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதனால் தான் சமூக நலத்துறை என்றிருந்த துறையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என மாற்றினார். மேலும், இல்லத்தரசிகளான மகளிர்கள் வீட்டில் செய்யக்கூடிய பணிகளுக்கு, அர்ப்பணிப்புகளுக்கு வழங்கப்படும் ரூ.1000- த்தினை கலைஞரின் உரிமைத்தொகை என அறிவித்தார்.
சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 104 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.63.29 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.42 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,சுயதொழில் செய்து, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 75 பயனாளிகளுக்கு ரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என ஆக மொத்தம் ரூ.1.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்று பொருளாதாரத்தில், சமூகத்தில், வேலைவாய்ப்பில் பெண்கள் சுதந்திர உணர்வோடு அவர்களுக்கான இடத்தை அவர்கள் பெற வேண்டும் என்கின்ற உணர்வோடு தான் நம்முடைய அரசு பல திட்டங்களை எல்லாம் தீட்டி வருகிறது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply