25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 22, 2026

சர்வதேச யோகா தினம்  நிகழ்ச்சி -2026 மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை,  சார்பில்(21.06.2026) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை முறையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக மக்களுக்கு நல்வாழ்வை அளித்து வரும் யோகா, இன்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு அரிய கலையாக திகழ்கிறது. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உடல் சோர்வு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், யோகா உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிகாட்டுகிறது.யோகா என்பது ஏதோ நேற்று உருவான கலை அல்ல. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்களாலும், முனிவர்களாலும் கண்டறியப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு வாழ்வியல் அறிவியல் (Science of Living). இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினக் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுகெலும்பிற்கான யோகா” என்பது மிகவும் பொருத்தமானதாகும். நமது உடலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதுடன், மன அமைதியும் கிடைக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தொழில்நுட்ப உலகில் மூழ்கி, போதிய உடற்பயிற்சியின்றி 'மன அழுத்தம்' (Stress) மற்றும் 'பதற்றம்' (Anxiety) போன்ற சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகாசனத்தை ஒரு பாடமாகவோ அல்லது தினசரி பயிற்சியாகவோ கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். யோகா செய்யும் ஒரு மாணவனின் கவனம் (Focus) கூடுகிறது, நினைவாற்றல் (Memory power) அதிகரிக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிதானம் கிடைக்கிறது. அதேபோல், நீரிழிவு நோய் (Diabetes), ரத்த அழுத்தம் (BP), இதயம் சார்ந்த கோளாறுகள் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு (Lifestyle diseases) மருந்து மாத்திரைகளைத் தாண்டி யோகா ஒரு சிறந்த இயற்கை நிவாரணியாகச் செயல்படுகிறதுஎனவே, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடல்நலத்தை மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, கவனத்திறன் மற்றும் செயல்திறனையும் மேம்படுத்தும். யோகாவை ஒரு நாள் நிகழ்வாக மட்டும் கருதாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இந்த யோகா தின விழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Jun 22, 2026

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய  தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,தலைமையில்  (21.06.2026) வழங்கினார்.நமது மாவட்டத்தில், பல பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல மாவட்டங்களில் இத்தனை நிறுவனங்கள் வந்திருந்தாலும், போதிய திறன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றுவதற்காக, நமது உள்ளூர் கல்லூரிகளுடன் இணைந்து, நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கு கற்பித்து, அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். அதன் பின்னர் வேலைக்காக அனுப்பப்படும் இளைஞர்கள் யாரும் “வேலைவாய்ப்பு இல்லை” என்று சொல்ல வேண்டிய நிலை இருக்கக் கூடாது என்பதே  முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கனவு.இளைஞர்கள் யாரும் வேலை இன்றி இருக்கக் கூடாது. வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஏனெனில் நானும் அந்த நிலையை அனுபவித்திருக்கிறேன். பல நிறுவனங்களில் விண்ணப்பித்தும், வேலை கிடைக்காமலும், பதில் வராமலும் நீண்ட நாட்கள் காத்திருந்திருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கும் இருப்பதால், உங்களுடைய சிரமங்களையும் என்னால் உணர முடிகிறது.அதனால்தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. திறன் பயிற்சிக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை தூத்துக்குடியில் விரிவுபடுத்துகின்றன. அதேபோல், “ஹூண்டாய்” நிறுவனம் வருவதன் மூலம் அங்குள்ள குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பல வாய்ப்புகள் உருவாகின்றன.இவ்வாறு பல நிறுவனங்களை அணுகி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் யாரும் வேலை இன்றி இருக்கக் கூடாது என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.நீங்கள் உங்களுடைய திறன்களை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டோம் என்று நிறுத்திக் கொள்ளாமல், பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும். இணையத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் பல சான்றிதழ் பயிற்சிகளையும் பயன்படுத்திக் கற்றுக்கொள்ளலாம். அதோடு, நமது பகுதிகளிலும் பல பயிற்சி மையங்கள் தொடங்கப்படுகின்றன.இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில், பல்வேறு தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எந்த தகவலையும் ஒன்றுக்கு இருமுறை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.திறன் வளர்ச்சிக்கான பல சிறந்த கருவிகளும் இலவச சான்றிதழ் பயிற்சிகளும் கிடைக்கின்றன. அவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். அவற்றைப் தாங்கள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இன்று வேலைவாய்ப்பு பெற்ற 20 இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் தொடர்ந்து முன்னேறி உயர வேண்டும்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் படித்த இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப, அரசுப் பணியினை வழங்கிடும் வகையில் அனைத்து பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேர்மையான முறையில் திறமையானவர்களை பணியமர்த்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.இருப்பினும், தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தி அதன் வாயிலாக ஏராளாமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், அதன் மூலம் நிரந்தர வருவாய் ஈட்டும் திறன் பெற்றிடவும், பொருளாதார இடையூறுகளின்றி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.அதைப்போல், தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களையும், திறமையானவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.வேலை நாடுநர்கள், தொழில் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பணியில் சேரவும், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் சிறந்த களமாக இந்த வேலை வாய்ப்பு முகாம் அமைகிறது.ஏராளமான இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளம்பரப் பலகைகள், துண்டு பிரசுரங்கள், செய்தித் தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், மற்றும் பொறியியல் (Engineering) முடித்த இளம் பட்டதாரிகள் வரையிலான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளவர்கள் தங்களது குடும்பம் மற்றும் தங்களது நலன் மற்றும் தேவையினைக் கருத்தில் கொண்டு பணியில் சேர்ந்திட வேண்டும்.இதன் மூலம் கிடைக்கும் வருவாயினைக் கொண்டு உயர்பணிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தக் கொள்ள வேண்டும் என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொது) திருமதி சு.ஞானபிரபா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழக மாவட்ட மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், ஆர்.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் திருமதி முத்துலட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Jun 20, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (19.06.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக பணியாளர்களுக்கு (MGNRGS) பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவுசெய்தல் மற்றும் அந்த பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தரணி சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 50சதவீத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், மல்லிகைப்பூ கன்று   விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்ராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் மா மரங்களின் பூக்கள் கருகிவிட்டதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.          சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் பூர்வீக மரக்கன்றுகள் நடுதல் அவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விருதுநகர் செழுமைக்கருவூலம் பெயர்ப்பலகை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்   சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுவது தொடர்பாக குழு அமைத்து கண்காணித்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுவது தொடர்பாக மாவட்டம், கோட்டளவில், வட்டம்/வட்டாரம் அளவில் தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளடக்கிய குழு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது மேலும் விடுபட்ட விவசாயிகள் இருப்பின் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு பதிலாக 01.07.2026 முதல் VBGRAMG திட்டம் என்ற புது பெயரில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், பணியாளர்களின் வருகை புகைப்படத்தின் மூலம் வருகைப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும், விவசாய பணிகள் நடைபெறும் காலங்களான நவம்பர் 30 நாட்கள், செப்டம்பர் மாதத்தில் 10 நாட்கள் மற்றும் அக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் VBGRAMG திட்ட வேலை தற்காலிகமாக ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தரணி சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகளுக்கு   50சதவீத நிலுவைத்தொகையை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.          ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் மா மரங்களின் பூக்கள் கருகிவிட்டதற்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக மா விவசாயிகளுக்கு தனியாக கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.பின், தேசிய தோட்டக்கலை இயக்கம்-தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.18 ஆயிரம் மானியத் தொகையில் கொடிக்காய் புளி ஒட்டுச் செடியினையும், ஒரு பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மானியத் தொகையில் மா ஒட்டுச் செடியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில்,துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ரவி மீனா,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Jun 20, 2026

விருதுநகர் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய-சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக. விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.  இக்கண்காட்சியை பொதுமக்கள், அனைத்து கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கண்டுகளிக்கலாம். இக்கண்காட்சியில் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஓவிய சிற்பக் நுண்கலைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பினால்                ஏ4 தாள் அளவில் தங்களின் படைப்புகளின் போட்டோ அல்லது ஒளிஅச்சு நகலினை (Photo Copy) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, திருநெல்வேலி -07. தொலைபேசி எண்.0462-2901890 என்ற முகவரிக்கு 05.07.2026 தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களின் ஐந்து படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.  அதில் சிறந்த படைப்புகளை தெரிவு செய்து,  தலா 7 கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மூன்றாம் பரிசாக ரூ.2,000/- காசோலையாக வழங்கப்படும்  மேலும், சிற்பக்கலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐம்பது ஒவிய சிற்பக் கலைஞர்களுக்கு மேற்கண்ட மூன்று நாட்களில் கலை பயிற்சி பட்டறையும் நடைபெறும். இக்கண்காட்சியில் படைப்புகளை காட்சிபடுத்தும் கலைஞர்களுக்கும் பயிற்சி பட்டறையில் பங்கு கொள்ளும் கலைஞர்களுக்கும், சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 19, 2026

விருதுநகர் மாவட்டம் 13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று,  சுமார் 33 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 13  பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள்  (18.06.2026) பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 13 குடும்பங்கள்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று,  குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள் வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின்  கோரிக்கைகளை பரிசீலனை செய்து   வருவாய்த்துறையின்   மூலம்,  13 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களில் நாங்கள் குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திருமதி ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 19, 2026

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், கோதைநாச்சியார்புரம், விஜயகரிசல்குளம், துலுக்கன்குறிச்சி, சங்கரபாண்டியபுரம், இ.ராமநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.          அதன்படி, சாத்தூர் வட்டம் படந்தாலில் பள்ளி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், தங்கும் அறைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் விடுதி தொடர்பான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம், மகப்பேறு பிரிவு, ஆய்வகம், தடுப்பூசி சேமிப்பு வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.          தொடர்ந்து, தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு தரமான மற்றும் விரைவான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கவும், மருத்துவ உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுகாதார நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரித்து, பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி மருத்துவ சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார். தொடர்ந்து, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.          கோதைநாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரமான முறையில் உணவு தயாரித்தல், உணவு பட்டியலின்படி உணவு வழங்கப்படுகிறதா, மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றையும்,விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும்,சங்கரபாண்டியபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், கட்டிடத்தின் தரம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டுமானப் பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.          இராமநாதபுரத்தில் புதிய களம் அமைக்கும் பணியினையும், சாத்தூர் வட்டத்தில் சுகாதார நிதி 2023-2024ன் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், குருலிங்காபுரத்தில் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 ன் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 19, 2026

ஜீவன் ரக்ஷா பதக்கம் (Jeevan Raksha Padak Series) 2026 விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஜீவன் ரக்ஷா விருது, இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இவ்விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்திற்காககவும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காகவும், ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காகவும் வழங்கப்படுகிறது.  விருதுநகர் மாவட்டத்தில் மேற்கண்ட செயல்கள் மூலம் ஒருவரின் உயிரை மனதாபிமான குணத்துடன் காப்பாற்றி இருந்தால் 2026-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது (Jeevan Raksha Padak Series)-க்கு விண்ணப்பிக்கலாம். 01.10.2024-க்கு முன்னர் இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது. மேலும் இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் பூர்த்தி (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) செய்து அனுப்பவேண்டும். இதற்கான சுயவிபர படித்தினை அதிகாரப்பூர்வமான இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபர விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் ”மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்.503, 5-ஆவது தளம், விருதுநகர் – 626 002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 05.09.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 19, 2026

”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது - 2026” விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் ”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது 2026”-னாது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 31.07.2026 அன்றைய தினத்தில் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இவ்விருதினை பெற தகுதியுடையவர்கள் https://awards.gov.in  என்ற இணையதளத்தில் 10.07.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 19, 2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான (18.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி ஜூன் 25 வரை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (18.06.2026) சாத்தூரில் நடைபெற்ற இத்தீர்வாயத்தில் 3-பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2-பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2-பயனாளிகளுக்கு கணினி வழி இ-பட்டாக்களையும்,3-கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் (Nutrition Kit) மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா அளவை எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.இந்த வருவாய் தீர்வாயம் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் திரு.மு.வடிவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 19, 2026

சிவகாசியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் வரும் 21.06.2026  அன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது.          இச்சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் மோட்டார்ஸ் (HYUNDAI MOTORS), சியட் டயர்ஸ் (CEAT TYRES), ஃபாக்ஸ்கான் ஹான் ஹை டெக்னாலஜி (FOXCONN HON HAI TECHNOLOGY), அடையார் ஆனந்த பவன் (ADYAR ANADHA BHAVAN), வி.வி.வி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் (V.V.V & SONS EDIBLE OIL), ராயல் என்பீல்ட் அகாடமி (ROYAL ENFIELD ACADEMY), பென்குயின் அப்பாரல்ஸ் (PENQUIN APPARELS), டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் (TVS SUNDARAM BREKELINING), 5கே கார் கேர் (5K CAR CARE), ஆனைமலைஸ் டொயோட்டா (ANAAMALAIS TOYOTA), டிவிஎஸ் மொபிலிட்டி பாலிமெரிக் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (TVS MOBILITY POLIMARIC PRODUCTS PVT LTD), செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAINT GOBAIN INDIA PVT LTD) போன்ற  50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/hBAJ9cavdPKepNLVA ஐ பதிவு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com)  தொடர்பு கொள்ளுமாறு மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 144 145

AD's



More News