விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை கல்லூரி மாணவியரிடம் சந்தைப்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் (21.08.2024) துவக்கி வைத்தார்.இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான காட்டன் சேலைகள், சுடிதார் டாப்ஸ், சணல் நார் பொருட்கள், மர பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்டல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றம் திண்பண்டங்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கல்லூரி முதல்வர் டாக்டர்.திருமதி.சே.சிந்தனா, வணிக மேலாண்மை நிர்வாகவியல் துறை தலைவர் டாக்டர்.திருமதி.பி.சுகந்தி., பேராசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள்; மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (21.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 370 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.எதிர்காலத்தில் உறுதியான வாழ்க்கை என்ற சூழலை தயார் படுத்திக் கொள்வதற்காகத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மற்றும் சுகாதாராம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டில் 9,669 மாணவர்களுக்கும் 8,100 மாணவிகளுக்கும் என மொத்த 17,769 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.அதனை துவக்கி வைக்கும் விதமாக இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 163 மாணவர்கள், 207 மாணவிகள் என 370 நபர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசால் வழங்கப்படும், மிதிவண்டி மாணவர்களுக்கு படிக்கும் காலம் வரையிலும், படிப்பதற்கு பின்பும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாரும் பயன்பெறும். இது போன்ற படிக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தயாராக உள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.மேலும், மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம்.போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140-00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் புதிய பேருந்துநிலையம் (21.08.2024) முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதை தொடர்ந்து, அங்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால் மேற்படி நிலம் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நிலம் (நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா இரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலச்சீர்திருத்தம் தொடர்பான மனுக்கள்) தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது 27.08.2024 அன்று நடக்கவிருக்கிறது. இதற்கான மனுக்கள் பதிவு காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, பதிவுத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.மேலும், இது குறித்த விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ-பிரிவு, தொலைபேசி எண்: 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (20.08.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.49.94 இலட்சம் மதிப்பில் மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில்இருந்துஇ.சுந்தரலிங்காபுரம்வரைசாலைஅமைக்கப்பட்டுள்ளதையும்,இ.முத்துலிங்காபுரம் ஊராட்சி, நடுவப்பட்டி கிராமத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பில் நூலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும்,இ.குமாரலிங்கபுரம் ஊராட்சி, கோவில்புலிகுத்தி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும்,சின்னவாடி ஊராட்சி, தாதபட்டி கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும்,வி.முத்துலிங்காபுரம் ஊராட்சியில் நபார்டு நிதியின் கீழ் ரூ.10.02 கோடி மதிப்பில் வி.முத்துலிங்காபுரம் - சூரம்பட்டி சாலையில் அர்சுனா நதியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருவதையும்,மேலசின்னையாபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்றுவரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமானதாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி கற்பகவள்ளி, திரு.சீனிவாசன், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (20.08.2024) அரசு மற்றும் அரசு உதவிபெறும் 6 பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 50 பள்ளி மாணவர்களுடனான'‘Coffee With Collector” என்ற 99- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 99-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பத்தாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.2023 -24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெற்றது. அத்துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட நிர்வாகத்தின் மற்றொரு முன்னெடுப்பாக, உயர்கல்வி பயில சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.08.2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதற்கட்டமாக 26 மாணவர்கள் கலந்து கொண்டனர். அம்மாணவர்களில் பலர் பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கப்பட்டனர். அதில் தொழிற்பயிற்சி நிலையங்களில் 18 மாணவர்களும், டுடோரியல் படிக்க விரும்பிய 7 மாணவர்களை டுடோரியல் பயிற்சி வகுப்பிலும், ஒரு மாணவி மட்டும் பதினொன்றாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 4455 Probationary Officers (PO) பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கு 01.08.2024 ஆம் தேதியிலிருந்து 21.08.2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் அடிப்படை பயிற்சி வகுப்பு 27.08.2024 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/AEWhBaLz1C4gvCB16 என்ற கூகுள் பார்ம் (Google Form) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.எனவே, இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் (15.08.2024) அன்று சுதந்திர தின விழாவில், சிறந்த சமூக சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற திருமதி ச.உமாதேவி என்பவரை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் சேத்தூரை சேர்ந்தவர் திருமதி உமாதேவி என்பவர், இராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் 26 முறை ரத்ததான முகாம் நடத்தியதற்காகவும், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியிலும், கிராமப்புற பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், கிராமப்புற குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அவர்களுடைய கல்வி தடைப்படாமல் கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், நெகிழி பையை ஒழித்து மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிப்பதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சாலையோரத்தில் ஆதரவற்று இருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்ததற்காகவும் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்றுள்ளார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.