சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா-2025 னை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழைப்பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தையல் பயிற்சி பெற்ற 28 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.1.57 இலட்சம் மதிப்பில் மின்மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்.
பின்னர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 146 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.1.38 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களையும், ரூ.60 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 98 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.அந்த வகையில், ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் 141 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களும், திருமண நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தடைகளைத் தாண்டி சமுதாயத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார். அத்தகைய முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நல அலுவலர் திருமதி திலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், அரசு அலுவலர்கள், பயனாளிகள், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply