தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 04.07.2025 ஆம் நாள் முற்பகல் 09.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
கட்டுரை போட்டிக்கான தலைப்புகள் 1. ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், 2.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல்பணி என்ற தலைப்பிலும்,
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் 1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி, 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, 5. ஆட்சிமொழி விளக்கம், 6.தமிழ்நாடு எனப்பெயர் சூட்டிய நிகழ்வு, 7.ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, 8.இக்காலத்தில் ஆட்சிமொழி என்ற தலைப்பிலும்,
மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10000-மும், இரண்டாம் பரிசு ரூ.7000-மும், மூன்றாம் பரிசு ரூ.5000-ம் என்ற வீதத்தில் வழங்கப்பெறவுள்ளன.மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 15.07.2025 அன்று நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply