வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், (07.07.2025) விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதிய குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் போன்ற சுமார் 300 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி கொடுத்தமைக்காக, இலங்கைத்தமிழர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.கே.கனகராஜ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திருமதி கலைவாணி, தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply