உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.03.2025) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காசநோயை ஒழிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் தேதி உலகக் காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
காசநோய் என்பது ஒரு தொற்றக்கூடிய நுரையீரல் சார்ந்த பிரச்சனை. இந்தியாவில் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாக காசநோய் என்பது மிகவும் தீவிரமான ஒரு நோயாகவும், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் இருந்தது. இன்றைக்கும் 1 இலட்சத்திற்கு 200- க்கும் மேலாக நோயாளிகள் இருக்ககூடிய விகிதம் இருக்கிறது. எனவே நமது மக்கள் தொகைக்கேற்ப, நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எத்தனை சதவீதம் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களை கண்டறிய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.ஏனென்றால், நோய் தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் வழங்குவதன் மூலம் தான் அவர்களிடமிருந்து அந்த நோய் மற்றவர்களுக்கு பரவக்கூடிய சங்கிலியை குறைக்க முடியும். எனவே இதில் மிக முக்கியமாக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அங்கு வரக்கூடிய நோய் தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு இருக்கக்கூடியவர்களை சரியாக கணித்து, அவர்களை பரிசோதனை செய்து பரிசோதனைகள் முடிவின் அடிப்படையில் தாக்கம் இருக்கக்கூடியவர்களுக்கு முறையான சிகிச்சை செய்வது மிக அவசியம்.
மாவட்டத்தில், தொடர்ச்சியான காநோய் பரிசோதனையின் மூலம், விவரங்களை சேகரித்து, முறையாக நோய் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் முறையாக நடைபெற்று கொண்டிருக்கிறது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரக்கூடிய நோயாளிகளுக்கு, இது குறித்த விழிப்புணர்வோடு, பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே காசநோயினுடைய தாக்கத்தை சமூகத்தில் குறைக்க முடியும். எனவே காசநோய் ஒழிப்பு திட்டம் என்பது இந்திய அளவில் முக்கியமான ஒன்றாகும்.இதனை முற்றிலும் அறவே ஒழிக்க வேண்டுமென்றால், ஆங்காங்கே இருக்கக்கூடிய நோயாளிகளை சரியாக கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது மட்டும் தான் இதற்கான தீர்வு. இது குறித்து அனைத்து மருத்துவ பணியாளர்களும் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தில் அதிக அளவில் காசநோயாளிகளை கண்டுபிடித்து மாவட்ட காசநோய் மையத்திற்கு தெரிவித்த 5 தனியார் மருத்துவர்களுக்கு கேடயங்களையும், காசநோயாளிகளுக்கு ஊட்டசத்து வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கேடயங்களையும், காசநோய் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, உலக காசநோய் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மாராத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காசநோய் பணியாளர்கள் கலந்து கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி(விருதுநகர்), மரு.குணசேகரன்(சிவகாசி), துணை இயக்குநர்(காசம்) மரு.கே.ராஜன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.விமலா, துணை இயக்குநர்(தொழுநோய்) மரு.மணிகண்டன், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply