திருநங்கை வாக்காளர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று(21.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கை வாக்காளர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும், “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கை வாக்காளர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருநங்கை வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கருமாரிமடம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தில் பங்கு கொள்வீர் என்ற உறுதிமொழி பத்திரத்தினை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் மாணவர்களிடம்,“பாராளுமன்றத் தேர்தலில் மக்களாட்சியின் மீது பற்றுடனும், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்பேன் என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்." என்ற உறுதிமொழி அடங்கிய பத்திரத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கி வருமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
0
Leave a Reply