பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை தர மறுத்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் தகுதியான சிறப்பு வாய்ந்த அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன், கல்லூரி கனவு, தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம் உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.இந்நிகழ்வில் சில கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளை தங்கள் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர்களை அணுகி மாணவர்களின் உடைய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ அரசு உயர் கல்வி நிறுவனங்களில் மற்றும் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் பொழுது தனியார் கல்லூரிகள் மாணவனின் அசல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டறைக்கு புகார்கள் வருகின்றன.
எனவே அவ்வாறு மாணவனின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மாணவனுக்கு சான்றிதழ்களை தர மறுத்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாணவ மாணவிகள் இப்புகார்கள் சார்ந்து தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply