மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், அறிஞர் அண்ணா விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடைபெற உள்ளதை முன்னிட்டு, பங்குபெற விரும்பும் மாணவ/மாணவியர்கள் தங்களின் பெயரை மாவட்ட விளையாட்டரங்கில் பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தினை புகுத்திடும் வண்ணம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 2025, விருதுநகர் மாவட்டத்தில் வரும் 27.09.2025 அன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள மொட்டைப்பத்தான் கண்மாய் இறக்கம் என்ற இடத்தில் நடத்தப்படவுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 13 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 15 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 10 கி.மீ என்ற பிரிவிலும், 15 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும், 17 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும் நடத்தப்படவுள்ளன.
அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவோர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வரும் விவரப்படி வழங்கப்படவுள்ளன. முதல் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.5,000/, இரண்டாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.3,000/- மூன்றாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10வது இடங்களை வருபவர்களில் ஒரு நபருக்கு ரூ.250/- என பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் கார்டு மற்றும் வயதுச் சான்றிதழில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 27.09.2025 அன்று காலை 06.00 மணிக்கு சமர்ப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி மாணவ, மாணவிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் கார்டு நகலினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையானது வங்கிப் பரிவர்த்தனை வழியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்-2025 ல் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டரங்கில் 26.09.2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறும், மேலும், தொடர்புக்கு 04562 225947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply