சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் (27.01.2025) தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.
மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.
ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு இலக்கை அடைவதற்கு வாழ்க்கையில் மிக அடிப்படை என்பது நமக்கு நாமே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது, நாம் மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல் வாழ்வது இது இரண்டு தத்துவங்களை எல்லா இலக்கியத்திலும் பார்க்க இயலும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது சங்க இலக்கியத்தில் உள்ள புறநானூற்று வரிகள் மற்றும் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற திருக்குறள் வரிகள் இந்த இரண்டும்; தான் இளையோருக்கான அறிவுரையை மையப்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நன்மைக்கும் தீமைக்கும் ஒருபோதும் பிறர் காரணமாக இருக்கவே முடிவதில்லை. அடுத்தவர்களுக்கு துன்பம் தராமல் நியாயமாக சரியாக நடக்க வேண்டும் என்று ஒருவர் தீர்மானிப்பது தான் உலகில் மிகப்பெரிய அறம்.முதலாவதாக மாணவர்களில் பலர் முழுமையாக முயற்சி செய்வதில்லை. வாழ்க்கையின் போட்டிகளில் அறைகுறை முயற்சிகளுக்கு இடமே இருப்பதில்லை. என்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது ஒன்று. எவ்வளவு தேவையோ அவ்வளவு முயற்சிப்பது என்பது தான் வெற்றிக்கானது.
இரண்டாவதாக கவனச்சிதறல். நீங்கள் வரலாற்றை படித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கவனச்சிதறல் என்பது காலங்காலமாக இருக்கிறது. நாம் ஒன்றே செய்ய முடியாமல் இருப்பதற்கு 100 சரியான காரணங்களை சொல்ல முடியும். ஆனால், ஒன்றை செய்து முடிப்பதற்கு நம்முடைய ஆர்வம் ஒன்று மட்டுமே முக்கியம். கவன சிதறல்கள் தவிர்க்க முடியாதது. நம்முடைய கவன சிதறல்களை வேறு ஒரு கவன திருப்புதலால் தான் மாற்ற முடியும்.
மூன்றாவது நாம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இந்த பூமியில் இன்னும் 50 ஆண்டுகாலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று ஆண்டுகளில் உங்களுடைய பாடத்திட்டத்தை படித்து, செயல்முறை தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை பெற்று பட்டம் பெறக்கூடிய இந்து கல்வி என்பது 10 விழுக்காடு மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கிறது. மற்ற 90 விழுக்காடு உங்கள் அன்றாட நிகழ்வுகளை நீங்கள் பழகக்கூடிய மனிதர்களை, நீ எதிர்கொள்ளக்கூடிய சமுதாயத்தை நீங்கள் எவ்வாறெல்லாம் கற்றுக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என்பது ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று உலகில் அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.
தங்களுக்கான விழிப்புணர்வை அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவர்களே மிகப்பெரிய துன்பம் இல்லாத வெற்றியை அடையலாம். அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டு அதற்கான வாழ்க்கை பாடத்தை பெற்று முன்னேறக்கூடியது துன்பம் இல்லாமல் முன்னேறுவதற்கான வழி.பெரும்பாலான குடும்பங்கள் அறியாமையில் இருந்து வருகிறது. அந்த அறியாமையை போக்குவதற்குரியது தான். நீங்கள் படித்து பட்டம் பெற்று, சிறந்த மதிப்பெண்களை பெற்று பெறக்கூடிய பட்டம் என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கு, வேலைக்கு, அறிவுக்கு உதவி செய்யும். ஆனால் சக மனிதர்களிடம் பழகுதல், இந்த உலகினை புரிந்து கொள்ளுதல் ஆகியவை உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியம்.எனவே, மாணவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில், பொருளாதாரத்தில்; வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார தன்னம்பிக்கை தான் மிகச் சிறந்த ஒன்று.
எனவே உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்களை எதிர்க்கொள்ளும் போது, அறிவின் துணையோடு, அனுபத்தின் துணையோடு, சிறந்த ஆலோசனையின்; துணையோடு உங்களை தகவமைத்து கொள்ளுங்கள். எப்போதும் வாழ்க்கை மாற்றத்திற்குட்பட்டது. எல்லாவற்றையும் எதிர்கொள்வதற்கும், புதியவற்றை பெறுவதற்கும் அறிவையும், அனுபவத்தையும் தயாராக்கி கொள்ளுங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக மாணவியர்களுக்கு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் உயர்கல்வி மற்றும் வேலைவழிகாட்டி புத்தத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply