தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்பட்ட பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை (20.05.2025) தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் சந்தித்து, முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் ரூ.3 கோடி பரிசுத் தொகைக்கான பாராட்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியீடு செய்கிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.இதற்காக முன்னேற விழைகிற மாவட்டம் திட்டத்தின் (ADP(Aspirational District Program)) கீழ் விருதுநகர் மாவட்டம் விருதையும், ரூ.3 கோடி பரிசும் பெற்றுள்ளது.
ஆரம்ப சுகாதார கட்டமைப்பினை மேம்படுத்தி தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, விருதுநகர் பொது சுகாதாரத்துறை "விரு கேர்" (VIRU CARE) என்ற மாவட்ட தாய், சேய் கண்காணிப்பு மையத்தினை துவங்கியது.கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து 5 வயது வரை தொடர்ந்து அவர்களது உடல் நலத்தில் அக்கறையுடன் செவிலியர்கள் மருத்துவர்கள் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.ஏதேனும் குறைபாடுகள், உடல் நல தொந்தரவு இருந்தால் உடனடியாக அவர்களை அணுகி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது என சிறப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும், கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு தாய்மார்கள் இறப்பு ஏதும் இல்லாத நிலையை அடைந்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாக விருதுநகர் திகழ்வதாகவும் நிதிஆயோக் பாராட்டியுள்ளது.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் ரூ.3 கோடி பரிசுத் தொகைக கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
0
Leave a Reply