குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 வடிவில் 1098 பெண் குழந்தைகள் நின்று சாதனை புரியும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 வடிவில் 1098 பெண் குழந்தைகள் நின்று சாதனை புரியும் நிகழ்ச்சியினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இன்று பல்வேறு துறைகளில் குறிப்பாக அதிகாரமிக்க அரசு பணிகளில் இருந்து, நிறைய பொருளாதார வளமிக்க தனியார் துறைகள் மற்றும் நிறைய வணிகத் துறைகளிலும் பெண்களினுடைய பங்களிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.இதற்கு மிக முக்கியமான காரணம், பெண்களுக்கு என்று நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த வாய்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே புத்தி கூர்மை அதிகமாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடும் காணீர்!
பெண்;களுக்கு இயற்கையாகவே அதிகமான ஞானம் இருக்கிறது. பெண்ணுக்குள் அறிவை வளர்ப்பதன் மூலமாக இந்த சமுதாயத்தில் எதெல்லாம் பேதமையாக இருக்கிறதோ, எதெல்லாம் மடமையாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அழிப்பதற்கு பெண்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது தான் என்று 115 ஆண்டுகளுக்கு முன்பாக மகாகவி பாரதியார்; பாடியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் பெண்களுக்கு இன்று அவர்கள் நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் காரணமாக நிறைய தொழில்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள். இருப்பினும் சமூக சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகள், அது குடும்பத்திலிருந்து, சமுதாயத்தில் இருந்து, அவர்கள் பழகக்கூடிய மனிதர்களிடமிருந்து எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை இரண்டு விதமாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று அறிவியல் பூர்வமாக உளவியலை அணுகுவது, இன்னொன்று சட்டத்தின் மற்றும் அரசினுடைய திட்டங்களின் மூலமாக வாழ்க்கையையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை புரிந்து கொள்ளுதல் ஆகும்.
குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தைத் தொழிலாளராகவோ, குழந்தைத் திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையா, குழந்தைத் கடத்தலோ நடைபெறாமல் தடுத்தல், அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அல்லது நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரா.பாஸ்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைமை இயக்குனர் திரு.சதீஷ்குமார், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply