வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறவிருப்பதையொட்டி, வாக்களர்கள் கணக்கெடுப்புப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்தின் வலைதளம் மூலமாக சுயமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர்கள் மற்றும் மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2025 அன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. வாக்காளர்களின் விபரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு வீடாகச் சென்று வழங்கி, அப்படிவங்களில் வாக்காளர்கள் கையொப்பம் பெற்று அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் அப்படிவங்களுடன் எந்த ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை என்றும், மற்றவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், கணக்கெடுப்புப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை வலைதளம் மூலமாக வாக்காளர்கள் சுயமாக பதிவேற்றம் செய்யவும் இயலும் என்றும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை www.virudhunagar.nic.in என்ற விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் இதே போன்ற பயிற்சிகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் அளிப்பார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply