விருதுநகர் மாவட்டம் 1,33,475 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 28.06.2026 அன்று நடைபெறவுள்ளது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 31 ம் ஆண்டாக தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 28.06.2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1,33,475 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் ரயில், பஸ்நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'நடமாடும் முகாம்' மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.
இம்முகாமில் 4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள்.
இம்மாவட்டத்தில் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0 - 5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை 28.06.2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து ஊனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply