25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

 “தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜுஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வணிகர்களின் கவனத்திற்கு:

1. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

2. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

3. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.

4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 ½ மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும்.

5. திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது.

 6. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர “ஐஸ் கட்டியைப்” பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி “நீல நிறத்திலும்” இருக்கும்.

 7. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.

8. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது.

9. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது.

 10. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks)  போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது.

 11. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்” என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.

12. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.

13. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.

14. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

15. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும்.

16. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும்.

17. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும்.

18. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும்.

19. பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.

20. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

21. திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled)  செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது.

 22. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.


நுகர்வோர்களின் கவனத்திற்கு:

1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.

2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.

3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.

4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியிலிருந்து பெறுவது நல்லது.  உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

 5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.

6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம் 

எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News