இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 46-வது சீசன் இன்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் தொடங்குகிறது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மீண்டும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 1927-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டு தொடரில் 380 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்த முறை பங்கேற்பு அதிகரித்துள்ளது.
இந்தியா கடந்த 2024-ம் ஆண்டு ஒலிம்பியாட் தொடரில் ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.
இந்த முறை ஓபன் பிரிவில் இந்திய அணி இரண்டாவது நிலை அந்தஸ்துடன் களமிறங்குகிறது. உலக சாம்பியன் குகேஷ், உலகத் தரவரிசையில் முன்னணி வீரரான பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்திய அணிக்கு முதல்நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த கோனேரு ஹம்பி, உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக், வைஷாலி, வந்திகா அகர்வால், சவிதாஸ்ரீ உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த தொடரில் சிறப்பாக விளையாடிய திவ்யா தேஷ்முக், வந்திகா உள்ளிட்ட வீராங்கனைகள் இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டால், இந்திய பெண்கள் அணி மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகும்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது. ஓபன் பிரிவில் 2024-ல் தங்கமும், 2014 மற்றும் 2022-ல் வெண்கலமும் இந்தியா வென்றுள்ளது. பெண்கள் பிரிவில் 2024-ல் இந்திய அணி தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
0
Leave a Reply