தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பவர்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு தரமான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில், மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றது. தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும், இனிப்பு மற்றும் காரவகை உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு தயாரிப்பாளர்கள் உறுதி செய்திட வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் பலகார சீட்டு நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்ற பின்னரே உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு, காரவகை மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை சேர்க்கக் கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.
பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச் சீட்டிடும்போது அதில் உணவுப்பொருட்களின் பெயர், எடை, தயாரிப்பு அல்லது பொட்டலமிடப்பட்ட தேதி, பயன்படுத்துவதற்கு உகந்த காலம் ( காலாவதி தேதி), சைவம் அல்லது அசைவம் பற்றிய குறியீடு, தயாரிப்பாளரின் முழு முகவரி, தொடர்பு எண், உள்ளிட்ட தகவல்கள் அவசியம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித்தொற்று ஏற்படாத வகையில் சுத்தமான சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் பலகாரங்களை வாங்கும்போது, தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவு பெற்று, அந்த எண்கள் பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை உரிமம் அல்லது பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருமண மண்டபம் மற்றும் தனியார் கட்டிட உரிமையாளர்கள் பண்டிகை கால பலகார தயாரிப்பிற்கு கட்டிடத்தை வாடகைக்கு விடும்போது தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை பெற்றிருப்பதை உறுதி செய்த பின்னரே வாடகைக்கு இடத்தை வழங்க வேண்டும். பண்டிகை கால இனிப்பு மற்றும் கார தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறித்தோ அல்லது உணவுப் பொருள் கலப்படம் குறித்தோ புகார்கள் ஏதேனும் இருப்பின் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது 04562-252255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply