25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா 14.08.2026 அன்று நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்திட ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.

திருவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வருகின்ற 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் தங்குதடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெறுவதை உறுதிபடுத்தும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள திருத்தேரோட்ட வழிபாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ளவும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையினரும், காவல் துறையினருக்கு துணையாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், ஹோம் கார்டு காவலர்களும், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் திருவிழாவிற்கு எளிதில் வந்து செல்லவும், போக்குவரத்து நெரிசல், இல்லாமல் போக்குவரத்து வசதிகளை ஒரு வழிப்பாதை ஏற்படுத்தி தேரோட்டத்தினை நடத்திடவும், குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய்திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்கள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும்.

திருவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வண்ணம் விளம்பரப்பதாகைகளும் வைக்கப்பட வேண்டும். இப்பணிகளை திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கவும்;, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை கோட்ட தீயணைப்பு அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்புலன்ஸ்சுகளும் தயார் நிலையில் வைக்கவும், திருக்கோயில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும். இப்பணிகளை இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஆகியோர் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆடிப்பூரத் தேர்த்திருவிழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிய பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது.

தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளும், தொலைபேசி இணைப்புகளும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின் வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்த்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற தீமைகள் குறித்து எடுத்துரைத்து, மாற்றாக துணிப்பையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு;ள்ளது. எனவே, அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு நல்ல முறையில் தேர்த்திருவிழாவினை நடத்தி முடித்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ரவி மீனா,இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., ஆண்டாள் கோவில் செயல் அலுவலர், உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News