அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S,அவர்கள் (03.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சி, சூரநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் பண்ணைகள் அமைப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை முன்னாள் இராணுவத்தினர் முன்னேற்ற நலச்சங்க அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய மின் சக்தி (Solar Energy) அமைப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குந்தலம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.இரா.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்,உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply