இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் "Academy of Achievement" விருது வழங்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் இந்த விருதை வழங்கினார். விருதைப் பெற்ற ரஹ்மான், "இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. என் நாடு, என்னுடன் பயணித்த கலைஞர்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இதுகுறித்து ராஜமவுலி கூறுகையில், "ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பரப்புகள், ராமாயண உலகம், இயற்கைப் பேரழிவுகள், பிரம்மாண்டமான பேண்டஸி அம்சங்கள் என சாகசம் நிறைந்த பயணமாக படம் இருக்கும். அதேநேரம் தந்தை-மகன் பாசத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும்" என்றார்.
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழில் சுமார் 120 படங்கள் வெளியான நிலையில், வெற்றி பெற்றவை மிகச் சில படங்களே. இந்நிலையில், ஜூலை 3-ம் தேதி 'கட்டாகுஸ்தி 2', 'இரு முனை', 'புத்தம் புது நேரம்' ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. முதல் பாகம் வெற்றி பெற்றதால் 'கட்டாகுஸ்தி 2' படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, திரைப்பட வசூல் விவரங்கள் குறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "ஒரு படத்தின் உண்மையான வசூல் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். ஆனால், படங்களுக்கிடையே ஒப்பீடு மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு காரணமாக, பல நேரங்களில் மிகைப்படுத்தப்பட்ட வசூல் விவரங்களை வெளியிட வேண்டிய சூழல் உருவாகிறது. நடிகர்களின் மதிப்பையும், ரசிகர்களின் மனநிறைவையும் தக்கவைக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது" என்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், எழுத்தாளர் கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி, நடித்தார்.யதார்த்தமான கதைகள், நகைச்சுவை கலந்த திரைக்கதைகளால் 'திரைக்கதை மன்னன்' என்ற பெருமையை பெற்ற அவர், பல நடிகர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் என திரையுலகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி திரைப்பட எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கும் மேலாக 600-க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ள அவர், 17 மொழிகளில் பணியாற்றி 9 தேசிய விருதுகளை வென்றுள்ளார். "இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது," என்று ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்தார்.
ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கான் சிட்டி'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.நடுத்தரக் குடும்பம் ஒன்று சந்திக்கும் கடன் தொல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் வாழ்வாதாரப் போராட்டங்களை மையமாகக் கொண்டு, மிகவும் எதார்த்தமான பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில், ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்து கொண்டார்:"சுமார் 5 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தான் எனக்கு இந்த இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் யோகிபாபு அண்ணனை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அவர், எனக்காகத் தனது வழக்கமான சம்பளத்தில் பாதியை மட்டுமே வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார்."இதற்குப் பதிலளித்துப் பேசிய யோகிபாபு, "ஹரிஷ் துரைராஜ் வருங்காலத்தில் இன்னும் பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிப் புகழின் உச்சிக்குச் செல்ல வேண்டும்" எனத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜெமினி பிலிம் சர்க்யூட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை (Biopic) அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட புதிய படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.நாயகன்: ஆர்யன் ஷியாம்.இயக்குனர்: ஆனந்த் பிரசாத்.
நடிகை மதுபாலா மற்றும் இந்திரன்ஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது.இயக்குனர் வர்ஷா வாசுதேவ் படம் பற்றிக் கூறுகையில்:"புனித நகரான காசியில், முற்றிலும் எதிர்பாராத சூழலில் சந்திக்கும் ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உருவாகும் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை (Emotional bond) மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது."
2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.அந்த வகையில், "அந்தரன்", "அனந்தன் காடு", "அங்கீகாரம்", "கான்சிட்டி", "ப்ராமிஸ்" உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளன. இதில் நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.