ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & Hair Dressing Courses) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார (Cosmetology & Hair Dressing Courses) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.10,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply