கூப்பிட்டாங்களா?
யார் யாரைக் கூப்பிட்டார்கள் ? என்ற கேள்வி வருகிறது. திருமணம் சடங்கு, கிரஹப்பிரவேஷம், காது குத்து, மொட்டைக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று ஆதங்கப்படும் மக்கள் பலர். முக்கியமாக கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்கப் போகும் போது என்னைக் கூப்பிட்டார்களா? என்று பயங்கர சண்டை, கோபப்படும் மக்களும் உள்ளனர். வீட்ல விருந்துக்கு கூப்பிடவில்லை.
ஏங்க அப்படிக் கூப்பிட்டால், உங்கள் கையிலிருந்து காசு செலவாகுமா இல்லையா? உங்கள் காசு, நேரம், அநாவசியமான வம்பு பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். வெகு தூரத்தில் உள்ள ஊரில் திருமணம் என்றால் ஆபிசுக்கு, வேலை பார்க்கும் இடத்தில் லீவு போட வேண்டும். முதலாளியின் கோபத்திற்கு ஆளாவோம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்றால் பக்கத்து வீட்டில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அம்மா வீட்டில் விட்டு விட்டு செல்ல வேண்டும். மொய் பணம் ரெடி பண்ண வேண்டும். இப்படி எத்தனையோ இன்னல்களைக் கடந்து தான் ,ஒரு விசேஷத்திற்குச் செல்ல வேண்டும். டென்சன் தான். தலைவலி தான்.
இத்தனை இன்னல்களைத் தரும் இந்த விசேஷங்களுக்கு ,அழைக்கவில்லை என்று வருத்தப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நெருங்கிய சொந்தங்கள், கூடப் பிறந்தவர்கள், மகள், மகன் அழைக்கவில்லை என்று எத்தனை பேர் ராப் பகலாக அழுது கண்ணீர் சிந்தி, நொந்து நொடித்துப் போகின்றனர்.கூப்பிடவில்லையா? விட்டு விடுங்கள். அது முடியாதா? அழையாவிருந்தாளியாக சென்று விடுங்கள் .அவசியமில்லாமல் நினைத்து, நினைத்து உருகி உடம்பையும், மனதையும் கெடுத்து உங்கள் வீட்டவர்களையும் நோகடிக்க வேண்டாமே?
அக்காலத்தில் ஊரும் சிறியது, கூட்டுக் குடும்பமாக இருந்தது. அனைவருமே விவசாயம் செய்து வந்தனர். விசேஷங்களை அறுவடை சமயத்தில் வைக்காமல் மற்ற காலங்களில் நடத்திவந்தனர். கூட்டுக் குடும்பம் என்பதால் அண்ணன் வீட்டுத் திருமணத்தை, தம்பி, அக்கா, சித்தப்பா, மாமா எல்லாரும் தன் வீட்டுத் திருமணம் போல் 3,4,5 நாட்கள் விழுந்து விழுந்து வேலை செய்வார்கள். அழைக்கத் தேவையில்லை.
ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு வியாபாரம் தொழில், ஆபிஸர்கள், வேலையாட்கள் இஷ்டம் போல லீவு போட்டு வர முடியாது. ஒரு அண்ணன் ஆமதாபாத். தங்கை லண்டன், மாமா அமெரிக்கா, சித்தப்பா டெல்லி என்றால் எப்படி வரமுடியும் ஏன்? சென்னையை எடுத்துக் கொள்வோம். நடக்கிற காரியமா? வருடத்திற்கு ஒன்று என்றால் பரவாயில்லை 10 திருமணம், சடங்கு என்றால் முடியுமா? முடியாது.
பணக்கார விட்டுச் சொந்தக்காரர்கள் கூப்பிட்டாலும் கஷ்டம், கூப்பிடவில்லை என்றால் வருத்தம், எப்படி?' என்ன அவங்க வீட்ல விசேஷமே' உன்னைக் கூப்பிட வில்லையா' என்று அலட்சியமாகக் கடாசும் ஒரு கூட்டத் தினால் அவமானப்படுதல் சரி. கூப்பிட்டா அவர்கள் வீட்டிற்கு நல்ல புடவை, நகை என்று தேடி, தேடி எடுத்துப் போட்டு பலிகடா மாதிரி அங்கு செல்வார்கள். இதையெல்லாம் தெரிந்தபின்னும் கூப்பிட்டாங்களா என்று வருத்தப்படுவோமா?
இனி வரும் காலங்களில் என் பெண்ணிற்கோ பையனுக்கோ, திருமணம். இந்த தேதியில் திருமணமாகி விட்டது என்ற சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவு தான் உடனே போன் அடிச்சு சந்தோஷமாக பேசமாட்டோமா?
'கூப்பிட்டாங்களா' வுக்கு குட்பை சொல்லும் காலம் தொலைவில் இல்லை.
குணா பாஸ்கர் ராஜா.
0
Leave a Reply