மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடும் முறை.
நமதுவீட்டு மாடியில் நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளைபயிர் செய்யலாம். இவ்வாறுபயிர் செய்வதினால் நமக்கு உடல்நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்தகாய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவேநம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.
GrowBags அல்லதுThotti, அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.நாற்றுகளை உருவாக்குவதற்கான குழித்தட்டுகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.
தேர்வு செய்யும் பை அல்லது தொட்டியானது10 கிலோ கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும். அதில்8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆற விட வேண்டும்.
நாற்றுகளை உண்டாக்க குழி தட்டில் தென்னை நார்க் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நாற்று நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான, வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்3 மிலி(ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.
வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதனை வலை கட்டி வளர்க்கலாம். இவ்வாறு வலை கட்டுவதால் சூரிய ஒளியானது குறைந்த அளவே படும். முழுவதும் நிழல்,பாங்கான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பஞ்சக்காவ்யா உரத்தை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம்.
இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.
0
Leave a Reply