விருதுநகர் மாவட்டம் 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (07.08.2025) கைத்தறித் துறை சார்பில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட “சுதேசி இயக்கத்தினை” நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் 07.08.2025 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பின்னர், கைத்தறி துறை சார்பில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பிலான முதிர்வுத்தொகைக்கான காசோலைகளையும், நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1200/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் என மொத்தம் 35 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.14.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சுந்தரபாண்டியத்தில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து, “வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் நவீன இ.சி.ஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சுமார் 850 நெசவாளர்கள் பயனடைந்தனர்.மேலும் கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி இரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில்” நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(கைத்தறி) திரு.வெங்கடேசலு உட்பட அரசு விற்பனையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply