விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (14.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.
அதன்படி, விருதுநகர் அ.ச.ப.சி.சி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் அகமது நகரில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் தயாரிக்கும் உணவுக்கூடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், சுற்றுப்புறம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை சுற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, வளாகத்தை சுற்றி திடக்கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, நகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply