மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2025-2026 .
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (29.08.2025) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. , அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்டஅளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (District Development Coordination and Monitoring Committee) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (District Development Coordination and Monitoring Committee) கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த காலாண்டிற்கான கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம்; திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத் திட்டம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை - மத்திய சாலை திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கி), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தீன்தயாள் அந்த்தோயா யோஜனா, தீன்தயாள் உபாத்தயாகிராமின் கௌசல்யா யோஜனா, தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா, பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம், தேசியநலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் - கால்நடை காப்பீடு திட்டம், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம்- கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், பொதுப்பணித் துறை - தேசிய சுகாதார இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (கதர் கிராமத் தொழில்கள்) உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பின்னர், அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும் எனவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply